Skip to main content

வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் சீனிவாசனின் பகீர் பேச்சு..!

Published on 13/03/2021 | Edited on 13/03/2021

 

dindugul sreenivasan filed nomination for election and met press

 

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வேட்பு மனு தாக்கல் செய்தார். திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். இதன் மூலம் திண்டுக்கல் தொகுதியில் இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அதன்படி திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடுவதற்கு நேற்று (12.03.2021) வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மதியம் திண்டுக்கல் ஆர்.டி.ஒ அலுவலகத்திற்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது ஆதரவாளர் உடன் வந்தார். நுழைவு வாயிலில் அவருடைய ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். 

 

அதை அடுத்து அவர் திண்டுக்கல் தேர்தல் நடத்தும் அலுவலர் காசி செல்வியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அத்தோடு அவர் சொத்து விவரத்தை சமர்ப்பிக்கவில்லை. வருகிற 15ஆம் தேதி சொத்து விவரத்தை சமர்பிப்பதாக தெரிவித்தார். அப்போது முன்னாள் மேயர் மருதராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதைதொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “தமிழகத்தில் அதிமுக சிறப்பான ஆட்சியை வழங்கியது. கரோனா நிவாரணம், பொங்கல் பரிசு, விவசாயக் கடன், சுய உதவிக் குழுக் கடன் மற்றும் நகை கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்தது. 

 

அதோடு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசம், குடும்பத் தலைவிக்கு தலா 1500 ரூபாய் ஆகியவற்றுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. இலவச திட்டங்களை அறிவிப்பதில் திமுக போன்று அதிமுக ஏமாற்றாது என்பது மக்களுக்குத் தெரியும். எனவே மக்களின் ஆதரவுடன் 234 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்று, தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும். பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால், அதிமுக சிறுபான்மையினருக்கு எதிரானது என்று தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. அதிமுக ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டது. சிறுபான்மைக்கு எதிராக ஒருபோதும் அதிமுக செயல்பட்டதில்லை. சிறுபான்மையினரின் காவலராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். 

 

திண்டுக்கல்லில் திப்பு சுல்தான் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. கரோனா காலத்தில், எனது சொந்த செலவில் சிறுபான்மையினருக்குப் பல்வேறு உதவிகளை செய்தேன். மேலும் ஒன்றிய பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ இருந்தபோது நிலவிய கடும் குடிநீர் தட்டுப்பாடு தற்போது நீக்கப்பட்டு, தினமும் குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே திண்டுக்கல் தொகுதியில் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றதை விட மூன்று மடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன்” என்று கூறினார். இந்தப் பேட்டியின்போது மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், கூட்டுறவு தலைவர் அபிராமி, பாரதி முருகன் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.