Skip to main content

பிரியா பெயரில் பாஜக நடத்தும் கால்பந்தாட்டம் - அண்ணாமலை பேட்டி

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

 Annamalai interview conducted by BJP in the name of Priya

 

சென்னையைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு பெரியார் நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பிறகு உணர்விழப்புக் காரணமாக நவ. 8-ம் தேதி சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவருடைய வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

 

அதனையடுத்து பிரியாவின் வலது கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட நிலையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த பிரியா உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக நேற்று முன்தினம் (15.11.2022) காலை 7.15 மணிக்கு உயிரிழந்தார்.

 

 

மாணவியின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மாணவியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு நிதி உதவியையும் வழங்கினார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீராங்கனையின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு செய்தியாளர்களைச் சந்திக்கையில், ''சகோதரி பிரியாவின் நிலைமை என்பது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு. இப்பொழுதுதான் அவருக்குப் பிறந்தநாள் முடிந்திருக்கிறது. ஒரு பெரும் கனவைச் சுமந்துகொண்டு கால்பந்தாட்ட வீரராக இருந்த அவருக்குக் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையின் காரணமாகக் காலை அகற்ற வேண்டிய கட்டாயம் வந்து, அதன் காரணமாக அவர் இறந்திருப்பது நம்முடைய மாநிலத்தில் இதுபோன்ற ஒன்றைப் பார்த்தது கிடையாது.

 

 Annamalai interview conducted by BJP in the name of Priya

 

குறிப்பாக மருத்துவ கட்டமைப்பு என்பது இந்தியாவிலே மிக ஆழமாக, மிக நன்றாக இருக்கக்கூடிய மாநிலம் நம்முடைய தமிழ்நாடு. சம்பந்தப்பட்ட மருத்துவமனை முதல்வரின் தொகுதியில் இருப்பது வேதனையாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. அரசு என்னதான் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று சொன்னாலும் இன்று பல அரசு மருத்துவமனைகள் இந்த நிலையில்தான் இருக்கிறது. வீராங்கனை பிரியாவின் இறப்பு மீடியாக்கள் மூலமாக வெளியே வந்திருக்கிறது. இதைத் தமிழகம் முழுவதும் பேசுகிறோம். ஆனால் இதேபோல் எத்தனை எத்தனையோ அரசு மருத்துவமனைகளில் நிர்வாகக் கோளாறு காரணமாக ஏற்படும் பல இறப்புக்கள் வெளியே வருவதில்லை. இதனை எல்லாம் உடனடியாக அரசு இரும்புக்கரம் கொண்டு எப்படி தமிழகத்தில் மருத்துவத்துறைக்கு ஒரு பெரிய பெயர் இருந்ததோ, அதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

 

பிரியா தந்தை சொன்னார், பிரியாவுக்கு பிரதமர் மோடியைப் பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது. “அப்பா நான் பெரிய கால்பந்தாட்ட வீராங்கனையாக மாறிய பிறகு என்னை மோடியிடம் கூட்டிக்கொண்டு போங்க. நான் என்னுடைய பதக்கங்களை அவரிடம் காட்ட வேண்டும், அவரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்” என்று உள்ளே சொன்னார்கள். இன்று ஒரு தந்தையாக என்னால் இதை நிறைவேற்ற முடியவில்லை என்ற வருத்தத்தில் இருக்கிறார். இன்னும் ஐந்து நாட்களில் பாஜக நிர்வாகிகள் உங்கள் வீட்டுக்கு மீண்டும் வருவோம். இந்திய அணியின் கால்பந்தாட்ட கேப்டன் ராமன் விஜயன் அவர்கள் தலைமையில் பாஜக நிர்வாகிகள் இங்கே வந்து இரண்டு விஷயங்களை இன்னும் ஐந்து நாட்களில் செய்வதாக உறுதி அளித்திருக்கிறோம். பிரியாவின் பெயர் சென்னை மாநகரத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக பாஜக இந்த மழைக்காலம் முடிந்தவுடன் பிரியா பெயரில் சென்னை முழுவதும் ஒரு கால்பந்தாட்ட போட்டியை மிகப்பெரிய அளவில் நடத்திக் காட்டப் போகிறோம். அதேபோல் பிரியாவின் சகோதரர்கள் மூன்று பேர் கால்பந்தாட்டம் விளையாடுகிறார்கள். அவர்கள் கை காட்டுகின்ற பத்து மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குக் கால்பந்தாட்ட பயிற்சி வழங்குவதற்கான முழுச் செலவையும் பாஜக ஏற்கும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.