Skip to main content

பாஜக போட்ட பிளான்; கடைசி நேரத்தில் ஜகா வாங்கிய வேலுமணி

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
 Velumani AIADMK BJP alliance  issue
கோப்புப்படம்

"ஹலோ தலைவரே, வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞர் நினைவிடத் திறப்புவிழா, தி.மு.க. தொண்டர்களின் மகிழ்ச்சிக்கு மத்தியில் நெகிழ்வோடு நடந்திருக்கு.” "ஆமாம்பா, இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் பேதம் பார்க்காமல் வந்து கலந்துக்கணும்னு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தும் கூட்டணிக் கட்சியான காங்கிரஸே இந்த நிகழ்ச்சியைப் புறக்கணிச்சிடுச்சே?”

"உண்மைதாங்க தலைவரே, இந்த நினைவிடத் திறப்பு விழாவிற்கு அனைத்துக் கட்சி தலைவர்களையும் முதல்வர் ஸ்டாலின் அழைத்திருந்தார். அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் தி.மு.க.வை எதிரிக்கட்சியாகவே பார்ப்பதால், அக்கட்சிகளின் தலைவர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதில் யாருக்கும் எந்தவித ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் எல்லோரும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் மட்டும் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டது.” 

“காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பியும் அவர்கள் தடுக்கப்பட்டிருக்கிறார்களே?"ஆமாங்க தலைவரே, இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி, கட்சியின் முன்னாள் தலைவர்கள், எம்.பி.க்கள் எனப் பலரும் கலந்துகொள்ள விருப்பமாக இருந்தனர். ஆனால், விழாவுக்கு முதல் நாள், முன்னாள் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு டெல்லியில் இருந்து போன் வந்ததாம். அப்போது, நினைவிடத் திறப்பு விழாவுக்கு நம் கட்சியில் இருந்து யாரும் போகத் தேவையில்லை என்று அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதைக் கேட்டு இங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இது கட்சி மேலிடத்தின் உத்தரவு என்பதால் அவர்களால் இதை மீற முடியவில்லையாம். இருந்தும் முன்னாள் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்ஃபோன்ஸ் ஆகியோர் மட்டும் தலைமையின் உத்தரவை மீறி முதல்வர் ஸ்டாலினுக்கு மதிப்பளித்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கிறார்கள். தி.மு.க. கூட்டணியில், காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கும் சீட்டுகளை ஒதுக்காததால், தங்களின் அதிருப்தியை அக்கட்சியின் டெல்லி தலைமை இப்படி வெளிப்படுத்தியதாம். இது தி.மு.க. தரப்பிற்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தி இருக்கிறதாம்.”

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தோடு, பா.ஜ.க. சில ரகசிய மூவ்களை நடத்தியிருக்குதே?” "ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த ஒரு மெஹா ரகசியத் திட்டத்தை கையில் எடுத்து பா.ஜ.க. தரப்பு, அதில் பெரும் தோல்வியைக் கண்டிருக்கிறது என்கிறார்கள். அதாவது, மாஜி மந்திரி வேலுமணி மூலம் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏ.க்களைப் பிரித்து, அவர்களை தமிழகம் வந்த பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க.வில் சேர்ப்பதற்கு ரகசிய ஏற்பாடுகள் நடந்தன. அந்த மேடையில் வேலுமணி பேசுவதற்கும் திட்டம் தயாரானது. இதேபோல் தி.மு.க.வைச் சேர்ந்த மாஜி மந்திரி செந்தில் பாலாஜியை, அவர் வழக்கில் சாதகத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, அவர் மூலம் மேற்கு மண்டல தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பலரையும் தங்கள் வசப்படுத்தி, தி.மு.க. ஆட்சிக்கு செக் வைப்பதற்கான ரகசியத் திட்டங்களையும் பா.ஜ.க. வகுத்ததாம். இதற்கான பல்வேறு ஏற்பாடுகளும் நடந்தன.'' 

"இந்தத் திட்டம் எங்கே புட்டுக்கிச்சு?" இந்த முயற்சிகள் விறுவிறுப்பாக நடந்த நிலையில், கடைசி நேரத்தில் வேலுமணி ’அவ்வளவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை என்னால் சரிக்கட்ட முடியவில்லை. என் முயற்சி முழுமையாகப் பலிக்கவில்லை’ என்று, டெல்லிக்கு ரெட் சிக்னல் கொடுத்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி விட்டாராம். இதேபோல் தி.மு.க. செந்தில் பாலாஜி தரப்பில் இருந்தும் இணக்கமான பதில் வரவில்லையாம். இதனால் அப்செட்டான பா.ஜ.க.வின் தேசியத் தலைமை, இந்த முயற்சியை ஒத்திப் போடுங்கள் என்று சொல்லிவிட்டதாம். தங்கள் முயற்சி பலிக்கும் என்ற நம்பிக்கையில் தான், தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் மோடி வரும்போது நடப்பதைப் பாருங்கள் என்று சஸ்பென்ஸாகச் சொல்லிக்கொண்டே இருந்தார்களாம். இந்த முயற்சி வெற்றிபெறும்னு மோடியும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தாராம். அதில் அவருக்கும் ஏமாற்றம் என்கிறார்கள்.'' 

மோடியின் பல்லடம் கூட்டத்துக்கு அவர் எதிர்பார்த்த கூட்டமும் வரவில்லை என்கிறார்களே?'' "பா.ஜ.க.வின் ‘என் மண் என் மக்கள்’ நடைப்பயணத்தின் நிறைவு நாள் கூட்டம் பல்லடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடி கலந்துக்கிட்ட அந்தக் கூட்டத்திற்கு குறைந்தபட்சம் 15 லட்சம் பேருக்கு மேல் கலந்துக்குவாங்கன்னு அவர்களால் எதிர்பார்க்கப்பட்டது. நாங்களே 5 லட்சம் பேரை தயார் பண்ணிட்டோம்னு அதன் நிர்வாகிகளும் உதார்விட்டுக்கிட்டிருந்தாங்க. இருந்தும் அந்தக் கூட்டத்தில் பார்வையாளர் பகுதியில் போடப்பட்டதே வெறும் 80 ஆயிரம் இருக்கைகள்தானாம். இதை நிரப்பவே கட்சி நிர்வாகிகளுக்கு தாவு தீர்ந்துபோயிடுச்சாம். கோவை பகுதியில் இருந்து வடமாநில கூலித் தொழிலாளர்களைக் கொண்டு வந்து நிறைய உட்கார வைத்துவிட்டார்களாம். கூட்டத்திற்கு ஆட்களைத் திரட்ட கோவை மாவட்ட பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் ஒருவர் தொழிலதிபர்கள் சைடில் இருந்து ஏறத்தாழ 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருக்கிறாராம். இது இல்லாமலும் வசூல் ஏகத்துக்கும் நடந்திருக்கு. லாட்டரி அதிபர் மார்ட்டின் தரப்பிலிருந்து மட்டும் 5 கோடி ரூபாய் தரப்பட்டதாக செய்தி அடிபடுகிறது.''

"இந்தப் பல்லடம் பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் புகழ்ந்து தள்ளியிருக்கிறாரே?"ஆமாங்க தலைவரே, பல்லடம் கூட்டத்தில் மோடி பேசும்போது, நான் தமிழ்நாட்டிற்கு வந்தபோது மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என் நினைவுக்கு வந்தார். இலங்கையில் அவர் பிறந்த ஊரான கண்டிக்குச் செல்லும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. இன்று அவர் மக்களுக்காகப் பணியாற்றிய தமிழ்நாட்டிற்கு நான் வந்திருக்கிறேன். இப்போது வரை ஏழை மக்கள் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆரை ஒப்பற்ற தலைவராகப் புகழ்ந்து வருகின்றனர். எம்.ஜி.ஆருக்குப் பிறகு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் ஒரு சிறப்பான ஆட்சியைக் கொடுத்தார். தமிழ்நாட்டிற்காகவும் தமிழ்நாட்டின் மக்களுக்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அவர் அர்ப்பணித்தார் என்றெல்லாம், அவர்கள் இருவர் மீதும் திடீர் பாசம் கொண்டு மாறி மாறி புகழ்ந்து தள்ளினார். இதற்கெல்லாம் காரணம், இப்போதும் அவர் அ.தி.மு.க. கூட்டணியை விரும்புகிறார் என்றும், அதைத்தான் அவர் வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். இந்தப் பேச்சின் மூலம் அ.தி.மு.க.வினரின் அனுதாபத்தையும் பெறமுடியும் என்று மோடி கனவு காண்பதாக அ.தி.மு.க. தரப்பு கிண்டலடிக்கிறது.''

"அதே நேரம் தி.மு.க. மீது கசப்பையும் கக்கிவிட்டுப் போயிருக்கிறாரே மோடி?” "ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் தி.மு.க. அரசுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதை உணர்ந்த மோடி, எந்த இடத்திலும் தி.மு.க.வினரையோ, தி.மு.க. அரசையோ பாராட்டி விடக்கூடாது என்பதில் இந்த முறை ரொம்பவே கவனமாக இருந்தாராம். குறிப்பாக தூத்துக்குடி குலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளத்தைக் கொண்டு வரவேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்துப் போராடியவர் தி.மு.க. எம்.பி.யான கனிமொழி. இந்த ராக்கெட் தளத்தைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் மோடி, அங்கே வந்திருந்த பா.ஜ.க. பிரமுகர்கள் பெயரையெல்லாம் சொல்லிவிட்டு, கனிமொழி பெயரை கவனமாகத் தவிர்த்துவிட்டார். அதேபோல் விழா அழைப்பிதழில் பெயர் இருந்தும், தி.மு.க. அமைச்சர் கீதா ஜீவன் பெயரையும் மோடி சொல்லவில்லை. இது ஒருபுறம் இருக்க, அன்று அதே நெல்லையில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தி.மு.க. பொய் வேஷம் போடுகிறது. தி.மு.க. பிரித்தாளும் சூழ்ச்சியை செய்து வருகிறது. இதையெல்லாம் நாம் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இனிமேல் தி.மு.க.வை பார்க்க முடியாது. எனென்றால் அது இருக்காது. குடும்பத்திற்காகவும் வாரிசுகளுக்காகவும் அரசியல் செய்யும் தி.மு.க.வை இனிமேல் நீங்கள் தேடினாலும் கிடைக்காது என்றெல்லாம் சகட்டுமேனிக்குத் தாக்கிவிட்டும் போயிருக்கிறார்.''

"நடிகர் சத்யராஜ் பொண்ணுகிட்ட பா.ஜ.க. தலைமை மூக்குடைபட்டிருக்காமே?'' "ஆமாங்க தலைவரே, தமிழ்நாட்டில் ‘என் மண் என் மக்கள்' யாத்திரை முடிந்த பின்னும் பா.ஜ.க. தலைமை எதிர்பார்த்த ரிசல்ட் இல்லாததால் பா.ஜ.க.வை வளர்த்தெடுக்க, கூட்டணிக் கட்சிகளைத் தாண்டி, திரைப்பட பிரபலங்கள், இளைய தலைமுறையினரை பா.ஜ.க.வுக்குள் இழுக்கும்படி தலைமையிலிருந்து உத்தரவு வந்ததாம். ஏற்கெனவே நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, தொண்டு நிறுவனங்களை நடத்தி வருவதோடு, அரசியலுக்கு வர விருப்பமுள்ளதாகவும் பேட்டியளித்திருந்தார். எனவே அவரை இழுத்துவிடலாமென்ற எண்ணத்தோடு அவரது இல்லத்துக்கே சென்ற பா.ஜ.க.வினர், கட்சியில் சேருமாறும், அப்படி சேர்ந்தால் அவர் கேட்கும் தொகுதியைக் கொடுப்பதாகவும் பேசியிருக்கிறார்கள். ஆனால் அவரோ, "நான் பெரியாரின் பேத்தி. சாதி, மதத்தை தூக்கிப் பிடிக்கும் எந்தக் கட்சியிலும் நான் இணைவதாக இல்லை. பதவிக்காகவும் கட்சிகளில் இணையப் போவதில்லை” என்று அதிரடியாகக் கூறி திருப்பியனுப்பிவிட்டாராம்.

"தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தி.மு.க.வின் மா.செ.க்கள் இருவர் மாற்றப்பட்டிருக்கிறார்களே?” "சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரான இளைய அருணா அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். காரணம், சென்னை பகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களான ஆர்.கே. நகர் எபினேசர், ராயபுரம் ஐட்ரீம் மூர்த்தி, பெரம்பூர் ஆர்.டி. சேகர் ஆகியோருக்கும் இளைய அருணாவுக்கும் ஒத்துப் போகவில்லையாம். எனவே இவர்கள், அவர் மீது புகார்களை எழுப்பி வந்தனர். இந்த விவகாரம் உதயநிதி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் வெடித்ததால், தேர்தல் நேரத்தில் எதற்கு சிக்கல் என்று இளைய அருணாவை தூக்கிவிட்டதாம் அறிவாலயம். அவருக்கு பதில் பெரம்பூர் எம்.எல்.ஏ. சேகர் நியமிக்கப்பட்டிருக்கிறார். களப்பணியில் வேகம் காட்டிவரும் எபினேசருக்கு மா.செ. பதவி கிடைக்காதது இளைஞரணிக்கு வருத்தமாம். ஆனால் உடல்நலப் பிரச்சினையுள்ள சேகரால் தேர்தல் பணிகளை எப்படிப் பார்க்க முடியும்? என எபினேசர் தரப்பினர் சரவெடிகளைப் போட்டு வருகிறார்கள். இதேபோல் பெரம்பலூர் தி.மு.க. மா.செ. குன்னம் ராஜேந்திரன், பொறுப்பில் இருந்து விலகியதால், வீ. ஜெகதீசனை மாவட்ட பொறுப்பாளராக நியமித்திருக்கிறது அறிவாலயம்.”

"நானும் ஒரு முக்கிய தகவலைப் பகிர்ந்துக்கிறேன். வீட்டு வசதித்துறை செயலாளராக இருந்த சமயமூர்த்தி நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்தவர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இணையான அந்தஸ்த்தில் இருந்த இவரது பவரைக் குறைத்து, தற்போது சுற்றுலாத்துறை செயலாளராக மாற்றியிருக்கிறார்கள். காரணம், வீட்டு வசதித்துறையுடன் கூடிய சி.எம்.டி.ஏ.வை கவனித்து வரும் அமைச்சர் சேகர்பாபுவுக்கும் சமயமூர்த்திக்கும் ஒத்துப்போகவில்லையாம். இவரது அதிரடி மாற்றம் அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.''

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.