அதிமுக அமைச்சர், சி.வி.சண்முகத்தைப் பொறுத்த வரை, பா.ம.க. தயவில் ஜெயிப்பதைவிட, மாவட்டத்தில் தனக்குள்ள சமுதாய வாக்குகளால் அ.தி.மு.க.வை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பதாக சொல்லப்படுகிறது. வெற்றிக்கு பாமக உரிமை கொண்டாடக்கூடாது என்று கணக்குப் போட்டு, பா.ம.க.வைவிட, தே.மு.தி.க. ஆதரவு வாக்குகளில் கூடுதல் கவனம் செலுத்தி, கேப்டன் கட்சிக்கு முதல் மரியாதை தருவதாக சொல்லப்படுகிறது. விஜயகாந்த் உடல்நிலை நன்றாக இருந்திருந்தால், மு.க.ஸ்டாலின் காணாமல் போயிருப்பார் என்று சண்முகம் பேசியிருந்தார்.
இது கட்சி நிர்வாகிக்களுக்குள் சலசலப்பு ஏற்பட்டு, ஸ்டாலினை எதிர்ப்பதற்காக விஜயகாந்த்தை இந்தளவு தூக்கலாமா? நம்ம அம்மா ஜெ.வே விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்து, ஓரங்கட்டியிருப்பதை அமைச்சர் மறந்துட்டார் என்று முதல்வர் வரை விஷயத்தைக் கொண்டு போயுள்ளனர். சண்முகமோ, "நான் விஜயகாந்த்தைப் பாராட்டியது தப்பு என்று கூறினால், அம்மாவே முறித்த அ.தி.மு.க-தே.மு.தி.க. கூட்டணியை மீண்டும் விஜயகாந்த்தோட வீட்டுக்குப் போய் உருவாக்கியது தப்பில்லையா'ன்னு கேட்டிருக்கிறார். அதோடு, சூழலுக்கேற்ப முடிவெடுப்பதுதானே அரசியல்னும் சொன்னதாக கூறுகின்றனர். ஆனாலும் பா.ம.க. தலைமையுடன் அட்ஜஸ்ட் பண்ணிப்போகும்படி அமைச்சருக்கு இ.பி.எஸ். அட்வைஸ் பண்ணியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர்.