Skip to main content

”எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறது?” - மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி...

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

rahul gandhi questions about pfizer vaccine distributiion in india

 

 

கரோனா வைரஸுக்கு பைசர் நிறுவனம் கண்டறிந்துள்ள கரோனா தடுப்பு மருந்தினை மக்களுக்கு கொண்டுசேர்க்க மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

 

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் வரை பலன் அளிப்பதாக அண்மையில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தடுப்பு மருந்தானது அடுத்த மாதம் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வரும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், இந்த தடுப்பூசியை தகுந்த பராமரிப்பு வெப்பநிலையில் வைப்பது வெப்ப மண்டல நாடுகளுக்கு சிக்கலாக அமையலாம் எனக் கூறப்படுகிறது. பைசர் கண்டறிந்துள்ள இந்த தடுப்பு மருந்து -70 டிகிரி செல்சியஸ் குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும்.

 

குளிர் தேசங்களான மேற்கத்திய நாடுகளில் இவ்வெப்பநிலையில் இந்த மருந்தினை பாதுகாப்பது எளிது. அதேநேரம், ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற வெப்பமண்டல பகுதிகளில், குறிப்பிட்ட இந்த வெப்பநிலையில் இம்மருந்தினை பாதுகாப்பது சவாலான காரியமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "பைசர் நிறுவனம் நம்பகமான கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி இருந்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முறையான உத்திகளை வகுக்க வேண்டியது அவசியம். எனவே அரசு என்ன திட்டம் வைத்திருக்கிறது? எப்படி தடுப்பு மருந்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப் போகிறது?" என கேள்வி எழுப்பியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்