Skip to main content

மோடியின் பிரச்சாரம்; உள்ளே நுழைந்த இளைஞரால் பதறிய பாதுகாப்பு அதிகாரிகள் 

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

 pm Modi campaigning Karnataka young man breached security  entered into stir

 

கர்நாடகாவில் ரோட் ஷோ பிரச்சாரத்தில் இருந்த பிரதமரிடம், 5 அடுக்கு பாதுகாப்பை மீறி இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்த சம்பவம் பாஜகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடக மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜக அரசு தங்களுடைய ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதே சமயம், எதிர்க்கட்சியாக இருக்கும் தேசிய காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற பல யூகங்களை வகுத்து வருகிறது. இதனால் கர்நாடக அரசியலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

 

மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கர்நாடகாவிற்குச் சென்றுள்ளார். அப்போது, ஹப்பாள்ளி பகுதிக்குச் சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் ROAD SHOW நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட மோடி, காரில் நின்றபடி நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சாலை மார்க்கமாக சென்றுகொண்டிருந்தார். அதே சமயம் பிரதமர் மோடியை வரவேற்பதற்காக ஏராளமான பாஜக தொண்டர்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றுகொண்டிருந்தனர். பிரதமரும், அங்கு கூடியிருந்த பொதுமக்களைப் பார்த்து கைகளை அசைத்துக்கொண்டே சென்றார்.

 

இந்நிலையில், பிரதமரைச் சுற்றி எப்போதும் எஸ்பிஜி எனப்படும் சிறப்புப் பாதுகாப்புப் படையினர் இருப்பார்கள். பிரதமர் மோடி எந்த இடத்திற்குச் செல்கிறாரோ அந்த இடம் முழுக்க அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இந்த சூழ்நிலையில், எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தை மீறி கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் கையில் மாலையுடன் திடீரென பிரதமர் மோடிக்கு அருகில் வந்துவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறப்புப் பாதுகாப்புப் படையினர், உடனே அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அதற்குள் பிரதமர் மோடி அவரிடம் இருந்த மாலையை வாங்கிக் கொண்டார். பிரதமர் எந்த இடத்திற்குச் சென்றாலும், அவருக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். இருப்பினும், அதையும் தாண்டி அந்த இளைஞர் பிரதமர் மோடிக்கு மிக அருகே வந்துள்ளார். இதை பிடித்துக்கொண்ட எதிர்க்கட்சிகள், பாஜக ஆளும் மாநிலத்திலேயே பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்துள்ளதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு மாலை அணிவிக்க வந்த இளைஞரைப் பிடித்து கர்நாடக போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

- சிவாஜி 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

''இன்னும் சில நாட்களில் கண்ணீர் விடுவார் மோடி''-ராகுல் பேச்சு 

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
"Modi will shed tears on the stage in a few days" - Rahul's speech

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் பீஜப்பூரில் நடைபெற்ற மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் மோடியின் பேச்சுகளைப் பார்த்தால் அவர் பதற்றமாக இருக்கிறார் எனத் தெரிய வருகிறது. இன்னும் சில நாட்களில் மேடையில் கண்ணீர் விடுவார். வறுமை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து உங்கள் கவனத்தைத் திசை திருப்ப முயல்கிறார். ஒரு நாள் சீனா அல்லது பாகிஸ்தானைப் பற்றி பேசுகிறார். மறுநாள் சாப்பாட்டு தட்டை தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் எனக் கூறுகிறார். 400 தொகுதிகளில் வெற்றி எனக் கூறிய மோடி தற்போது அந்தப் பேச்சையே கைவிட்டு விட்டார். முதற்கட்ட வாக்குப்பதிவுக்குப் பின்னர் பிரதமர் மோடி பீதி அடைந்துள்ளார்” எனப் பேசினார்.