
பல பேர் முன்னிலையில் கட்சித் தலைவரை, தொண்டர் ஒருவர் கன்னத்தில் அறைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் சுஹேல்தேவ் ஸ்வாபிமான் என்ற கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சியின் தேசியத் தலைவராக மகேந்திர ராஜ்பர் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் மகாராஜா சுஹேல்தேவின் வெற்றிக் கொண்டாட்டம் மற்றும் பூமி பூஜை விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவுக்கு சுஹேல்தேவ் ஸ்வாபிமான் கட்சியின் தலைவர் மகேந்திர ராஜ்பர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது, கட்சித் தொண்டரான பிரிஜேஷ் ராஜ்பர் என்பவர், கட்சித் தலைவர் மகேந்திர ராஸ்பருக்கு மாலையை அணிவித்தார். அதை மகிழ்ச்சியாக மகேந்திர ராஸ்பர் பெற்றுக் கொண்டார். அப்போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பிரிஜேஷ் ராஜ்பர், கட்சித் தலைவர் மகேந்திர ராஸ்பரின் கன்னத்தில் அறைந்து சரமாரியாக தாக்கினார். அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட அங்கிருந்தவர்கள், அவரை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனை தொடர்ந்து, பிரஜேஷ் ராஜ்பர் மீது மகேந்திர ராஜ்பர் போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மகேந்திர ராஜ்பர், “ஜலால்பூர் காவல் நிலையம் பகுதியில் பூமி பூஜை நிகழ்விற்கு நான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன். விழா முடிவில் நான் பேச முற்பட்டேன். அப்போது பிரிஜேஷ் ராஜ்பர் எனக்கு மாலை அணிவித்து திடீரென்று என்னைத் தாக்கினார். சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் ஓம் பிரகாஷ் ராஜ்பர் மற்றும் யோகி ஆதித்யநாத்தின் அரசின் அமைச்சர் ஆகியோரின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மகேந்திர ராஜ்பர் வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்துப் பேசிய பிரஜேஷ் ராஜ்பர், “மகேந்திர ராஜ்பர் சமாஜ்வாதி கட்சியில் இருந்து நிதியைப் பெற்று நிகழ்வின் போது என்னைப் பற்றி அவதூறாகப் பேசினார். மகேந்திர ராஜ்பர் வந்த பிறகு, நாங்கள் அனைவரும் மகாராஜா சுஹல்தேவின் வெற்றிக் கொண்டாட்டத்தைக் கொண்டாடினோம். நிறைய பிரச்சனைகள் குறித்துப் பேசிய அவர் என்னைத் தாக்கிப் பேசினார்” என்று கூறினார்.