Skip to main content

அலுவலகத்திலேயே விஷம் தரப்பட்டது - இஸ்ரோ விஞ்ஞானி அதிர்ச்சி பதிவு!

Published on 07/01/2021 | Edited on 07/01/2021

 

tapan misra

 

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மூத்த விஞ்ஞானி தபன் மிஸ்ரா. இவர் இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

 

தபன் மிஸ்ரா அந்த பதிவில், இஸ்ரோ அலுவலகத்திலேயே தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர், இஸ்ரோ தலைமையகத்தில் ஒரு நேர்காணலின்போது, மே 23, 2017 அன்று, கொடிய ஆர்சனிக் ட்ரொக்ஸைடு என்ற ஆபத்தான விஷம், தோசையுடன் தரப்பட்ட சட்னி, மற்றும் உணவுக்குப் பிறகான சிற்றுண்டியில் கலந்து தனக்கு தரப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.

 

அதன்பிறகு கடுமையான சுவாச சிரமம், அசாதாரண தோல் வெடிப்புகள், தோல் உதிர்தல் மற்றும் பூஞ்சை தொற்று உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் தான் அவதிப்பட்டதாக கூறியுள்ள தபன் மிஸ்ரா, ஜூலை 2017 இல், உள்துறை பாதுகாப்பு அதிகாரிகள் அவரைச் சந்தித்து, ஆர்சனிக் விஷம் குறித்து எச்சரித்ததோடு, அதற்கு சரியான சிகிச்சையில் கவனம் செலுத்த மருத்துவர்களுக்கு உதவினர் என தெரிவித்துள்ளார். மேலும் அவர், இது ஒரு உளவு தாக்குதலாக இருக்கலாம். மிகப்பெரிய இராணுவ மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு விஞ்ஞானியை அகற்றுவது அதன் நோக்கமாக இருக்கலாம் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

 

ஆர்சனிக் நச்சுத்தன்மைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டதை தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வெளியிட்டுள்ள அவர், இதுகுறித்து இந்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்திய விஞ்ஞானி ஒருவர், தனது அலுவலகத்திலேயே விஷம் தரப்பட்டதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்