Skip to main content

போலீஸை கன்னத்தில் அறைந்த முதல்வரின் சகோதரி; பரப்பரப்பை கிளப்பிய பகீர் சம்பவம்

Published on 25/04/2023 | Edited on 25/04/2023

 

andhra cm jagan mohan reddy sister sharmila who slapped the police

 

தெலுங்கானாவில் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு நடைபெற்று வரும் நிலையில், ஆந்திர மாநில முதல்வரும், ஓய்.எஸ்.ஆர் கட்சியின் தலைவருமான ஜெகம் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஷர்மிளா அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஓய்.எஸ்.ஆர் தெலுங்கான கட்சியைத் தொடங்கி சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசை விமர்சித்தும், கடுமையாக எதிர்த்தும் போராட்டங்கள் நடைப்பயணம் எனத் தொடர்ந்து பயணித்து வருகிறார். 

 

இந்த நிலையில் அம்மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வின் வினாத்தாள் கசிந்து பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இது தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) தீவிரமாக விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ள ஷர்மிளா, சிறப்புப் புலனாய்வு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தத் திட்டமிட்டு அலுவலகம் நோக்கி தனது காரில் சென்றார். இதனை அறிந்த தெலுங்கான போலீசார் ஷர்மிளாவின் காரை வழியிலேயே தடுத்து நிறுத்தினர். அப்போது ஆத்திரமடைந்த ஷர்மிளா பணியிலிருந்த பெண் காவலரின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறைந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரியிடமும் ஷர்மிளா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 

 

இதனைத் தொடர்ந்து ஷர்மிளா கைது செய்யப்பட்டார். இது ஒரு புறமிருக்கக் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் இருக்கும் ஷர்மிளாவை பார்க்க அவரது தாய் விஜயம்மா ஜூப்ளி ஹில்ஸ் காவல்நிலையத்திற்குச் சென்றார். ஆனால் ஷர்மிளாவை பார்க்க போலீசார் அனுமதிக்காததால் விஜயம்மாவும் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் தன்னை தடுத்து நிறுத்திய பெண் காவலரை விஜயம்மா தாக்குவது போன்ற வீடியோவும் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த நிலையில் போலீசாரை அறைந்த ஷர்மிளாவை 14 நாட்கள் சிறை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.