
வாழ்க்கையின் அந்திம காலங்களாவது நிம்மதியாகக் கழியவேண்டுமென்றிருக்கிற முதியோர்களைப் புறக்கணிக்கும் கூட்டுக் குடும்பங்கள், குடும்பக் குடைச்சலால் வெளியேறும் வயதானவர்கள் போன்றவர்களின் புகலிடம் தான் ஆதரவற்றோர் இல்லம். ஆனால் அங்கேயும் அவர்கள் படும் பாடு அவர்களின் வேதனையை அதிகரிக்கத்தான் செய்கின்றன. அதுபோன்ற முதியோர் காப்பகத்தில் உணவருந்தியவர்களில் 4 முதிய மக்கள் பலியானது அருவிகளின் மாவட்டத்தை உலுக்கி இருக்கிறது. தென்காசி அருகேயுள்ள சுந்தரபாண்டியபுரத்தில் அன்னை நல்வாழ்வு ட்ரஸ்ட் என்ற ஆதரவற்றோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு பதிவு பெற்ற இக்காப்பகத்தை செங்கோட்டையைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் நடத்திவருகிறார். முழுக்க முழுக்க பொதுமக்கள், சமூக நல ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் போன்றோர்களிடம் நன்கொடை பெற்று நடத்தப்பட்டு வருகிற இந்த இல்லத்தில் மனநலம் குன்றியவர்கள் மற்றும் முதியவர்கள் என்று 59 பேர் தங்கியுள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து அவர்களின் பொருளாதார நிலைக்கேற்ப மாதம்தோறும் ஓரளவு தொகை வசூல் செய்யப்படுவதாகவும் சொல்லப்படுகின்றன. அருகிலுள்ள செங்கோட்டை, கோவில்பட்டி, கடையநல்லூர், சொக்கம்பட்டி, கீழப்புலியூர் ஆகிய இடங்களிலிருந்து புறக்கணிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் இங்குத் தங்க வைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுக்குக் காப்பகம் அன்றாடம் தரும் உணவுடன் சில பல வேலைகளில் முக்கியப் புள்ளிகள், அரசியல் பிரமுகர்கள் போன்றவர்களின் பிறந்தநாளின் போதும் பணம், வாய்க்கு ருசியான உணவு, உடைகள் ஸ்பான்சர் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இக்காப்பகத்தில் உள்ளவர்கள் மதிய உணவு சாப்பிட்ட பிறகு செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ், அம்பிகா, சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகம்மாள் ஆகிய மூன்று பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதையடுத்து காப்பகத்துக்காரர்கள் அவர்களை அருகிலுள்ள தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். நேற்று (12.06.2025) காலை கோவில்பட்டியின் செல்வராஜ், மதுரையைச் சேர்ந்த விஜயா, மும்தாஜ், சாந்தி, கோமதி, கடையநல்லூரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், பேச்சியம்மாள் உள்ளிட்ட 8 பேர் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சங்கர் கணேஷ், முருகம்மாள், அம்பிகா ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் போய் அலர்ட்டான மாவட்ட எஸ்.பி. அரவிந்த் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரி கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி புஸ்பராஜ் ஆகியோர் சம்பவ இடமான முதியோர் இல்லத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். எஸ்.பி. அரவிந்த் முதியோர்களுக்கான நிவாரண பணிகளைத் துரிதப்படுத்தினார். முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட உணவு, குடிநீர் போன்றவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் அவற்றைச் சோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

அவர்கள் சாப்பிட்டதில் ஃபுட் பாய்சன் ஆகியுள்ளதா அல்லது வேறு ஏதேனும் கலந்திருக்கிறதா, அவர்கள் சாப்பிட்டது சைவ உணவா அசைவா உணவா, அவர்களின் மரணத்திற்கான காரணம் எந்த வகை என்பது ஆய்வுக்குப் பின்னர் தான் தெரிய வரும் என்றார்கள் அதிகாரிகள். மேலும் இக்காப்பகத்தில் உள்ள 48 பேர் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அருகிலுள்ள அரசு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாய் தென்காசி நகரம் பரபரப்பாக, மாவட்ட கலெக்டர் கமல்கிஷோர், தொகுதி எம்.எல்.ஏ பழனிநாடார் ஆகியோர் சிகிச்சையிலிருந்த முதியோர்களைப் பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.
தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை தலைமை அதிகாரிகளிடம் பேசியதில், கடந்த 10ம் தேதி இரவு சிகிச்சைக்காகச் சேர்ந்த ஒருவர் இறந்துள்ளார். அவர் தனது வீட்டு முகவரியையும் கொடுத்திருந்தார். நேற்று (12.06.2025) காலையில் 3வது நபர் இறந்த பிறகு தான் அவர்கள் காப்பகத்தில் உள்ளவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. 47 பேர் அனுமதிக்கப்பட்டதில் 15 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உணவு செரிமானக் கேளாறால் பாதிக்கப்பட்ட தனலட்சுமி (70) இன்று காலை (13.6.2025) உயிரிழந்தார். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கிடையே கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு பண்டிகை காரணமாக அசைவ உணவு அந்தக் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறதாம். அதனால் விளைந்த செரிமானக் கோளாறு காரணமாக வயது முதிர்ந்தோர் இறந்ததாகவும் பேச்சுக்கள் கிளம்புகின்றன.

முதியோர் இல்ல உயிரிழப்பு குறித்து நிர்வாகத்தின் மீது முதற்கட்டமாக, பி.என்.எஸ். 194 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து, அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதில் முதியோர் இல்ல நிர்வாகிகள், அவர்கள் சமீபத்தில் நடந்த பண்டிகையையொட்டி தானமாகக் கிடைத்த இறைச்சியைச் சமைத்து முதியோர்களுக்கு வழங்கியதாகத் தெரிவித்தனர். ஆனால் அந்த இறைச்சியைச் சாப்பிட்டவர்களும் சாப்பிடாதவர்களும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். சாப்பிட்ட உணவால் அவர்கள் இறந்தார்களா என்று இப்போதைக்குக் கூறமுடியாது. அது தொடர்பான விசாரணை நடந்து வருகின்றது என்றார் நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொ.) சந்தோஷ் ஹதிமானி.
இது குறித்து கீழப்புலியூரின் சுப்புலட்சுமி சொல்லுவது, 27 வயதான எனது சகோதரி இசக்கியம்மாள் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவரை நாங்கள் இந்த காப்பகத்தில் சேர்த்திருந்தோம். இப்ப 4 பேர் இறந்த சம்பவத்தால் பதறிப்போன நான் அங்க வந்து விசாரிச்சப்ப அவரை அன்பு இல்லம் என்னும் காப்பகத்தில் சேர்த்துள்ளோம் என்று நேற்று எனக்கு தொலைப்பேசியில் சொன்னார்கள். அது எங்கிருக்கிறது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறேன் என்றார் வேதனையாய். இதனிடையே இச்சம்பத்தின் எதிரொலியாய் உணவுத் துறை அதிகாரிகள் அக்கம்பக்க பகுதியிலுள்ள இறைச்சிக் கடைகள், தென்காசி, மேலப்பாவூர், ரயில்நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சோதனை செய்ததில் இரசாயனம் கலந்த பால் தயாரித்து விற்பனை செய்ததாக ஒரு சிலரையும் கைது செய்திருக்கிறார்கள். கோட்டாட்சியர் லாவண்யா முன்னிலையில் மேற்படி தனியார் காப்பகம் சீல் வைக்கப்பட்டது. அரசு தன் பார்வையை அந்திமகால ஆதரவற்றோர்களின் காப்பகத்தின் பக்கமும் திருப்ப வேண்டியது அவசியமாகியிருக்கிறது.