
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று(12.6.2025) மதியம் 1.39 மணிக்கு பேயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் லண்டனை நோக்கி புறப்பட்டது. 2 பைலட்கள், 10 பணியாளர்கள், 230 பயணிகளுடன் கிளம்பிய இந்த விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதற்குச் சற்று நேரத்திற்கு முன்பு விமான கேப்டன் சுமீத் சபர்வால் விமான கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு மேடே அழைப்பை(விமானம் பேராபத்தைச் சந்திக்கும் சமிக்ஞையாகும்) விடுத்துள்ளார்.
இதையடுத்து விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேப்டன் சுமீத் சபர்வாலை தொடர்பு கொள்ள முயன்றபோது, தொடர்பு கிடைக்கவில்லை. ஆனால் அதற்குள் விமானம் விபத்தில் சிக்கி வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். அவரை தற்போது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விமானம் வெடித்துச் சிதறி விழுந்ததில் அந்த பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரியின் மாணவர்களின் விடுதி பலத்த சேதமடைந்துள்ளது. இந்த விமான விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் கூறப்படுகிறது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு டாடா குழுமத்தின் சார்பாக தலா ரூ.1.கோடி நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூரமான விமான விபத்தில் பல கனவுகளை சுமந்துகொண்டு பயணித்த கேரள செவிலியர் ஒருவர் பற்றிய தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி புல்லாடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சிதா(39). இவருக்கு திருமணமாகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஓமன் நாட்டில் 9 ஆண்டுகள் செவிலியராக பணியாற்றிய ரஞ்சிதா, கடந்த இரண்டு ஆண்டுகளாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் ரஞ்சிதாவிற்கு கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசுப் பணி கிடைத்துள்ளது. அதற்காக கேரளா வந்த அவர், லண்டனில் பணியாற்றிய மருத்துவமனைக்குச் சென்று தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கேரள அரசுப் பணியில் சேர முடிவெடுத்துள்ளார். அதற்காக நேற்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்வதற்காக விமானத்தில் சென்ற போதுதான் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
பல ஆண்டுகளாக உழைத்து சொந்த ஊரில் வீடு ஒன்றையும் ரஞ்சித கட்டி வந்திருக்கிறார். வீட்டின் பணிகளில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அதே சமயம் கேரள மாநிலத்தில் அரசுப் பணியும் கிடைத்துள்ளது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியுடன், இனி நிம்மதியாக தனது குடும்பத்தாருடன் சேர்ந்து வாழலாம் என்று நினைத்த ரஞ்சிதாவிற்கு நேற்றைய தினமே இறுதிநாளாக அமைந்தது பலரையும் கலங்கச் செய்துள்ளது.