Skip to main content

டி.டி.வி.யும், குக்கரும்...

Published on 07/02/2019 | Edited on 07/02/2019

 

ttv

 

சசிகலா உறவினர்களில் முக்கியமானவர், தொடக்கத்திலிருந்தே ஜெயலலிதாவுடன் இருந்தவர், 1999-2004 வரை மக்களவை உறுப்பினர், பின் 2004 முதல் 2010 வரை மாநிலங்களவை உறுப்பினர், 2011ல் அந்நிய செலாவணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். ஜெயலலிதாவால் 2011ம் ஆண்டு கட்சியில் இருந்து விலக்கப்பட்டவர், ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது சசிகலாவால் அதிமுக துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டவர்... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அரசியல் வாழ்வில் அவருக்கு அவ்வளவு அனுபவம் இருக்கிறது. கட்சியின் துணை பொதுச்செயலாளராக அவர் இருந்தபோது, அதிமுக சின்னத்தையும், கட்சி பெயரையும் மீட்பதற்கு லஞ்சம் அளித்ததாகக்கூறப்பட்டது. அதன்பின் அவர் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். அதிமுக ஓ.பி.எஸ். அணி, ஈ.பி.எஸ். அணி, தினகரன் அணி என பிரிந்தது. அதன்பின் ஓ.பி.எஸ். அணியும், ஈ.பி.எஸ். அணியும் இணைந்தது. இதனால் தினகரன் தனியாக பிரிந்தார். இந்நிலையில்தான் ஆர்.கே. நகர் தேர்தலும் வந்தது. இதில் சுயேட்சையாக போட்டியிடுவது என முடிவுசெய்தார் தினகரன். அதில் வென்றார், பிறகு அமமுக கட்சியை தொடங்கி நடத்திவருகிறார்.  தினகரனுக்கு இப்படியான நெடிய அரசியல் வரலாறு உள்ளது. இந்த வரலாற்றின் பிற்பகுதியில் முக்கியமான இடத்தை பெற்றது குக்கர் சின்னமும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும்தான்...
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, தினகரன் முதலில் தொப்பி சின்னத்தைதான் கேட்டார். ஆனால் தேசிய மக்கள் சக்தி கட்சி, நமது கொங்கு முன்னேற்றக் கழகம், எழுச்சித் தமிழர் முன்னேற்றக் கழகம் என பதிவு செய்யப்பட்ட மூன்று கட்சிகளும் கோரின. இதையடுத்து, குலுக்கல் முறை பின்பற்றப்பட்டது. இதில் நமது கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர் ரமேஷூக்குத் தொப்பி சின்னம் கிடைத்தது. அடுத்ததாக தினகரன் விசில், பேட் ஆகிய சின்னங்களைக் கோரினார். ஆனால் அவையும் வெவ்வேறு வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.

 

ttv


அதன்பின், தனது ஆதரவாளர்களான செந்தில் பாலாஜி, வெற்றிவேல், வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் ஆகியோருடன் மாலை ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு சென்று தேர்தல் அலுவலருடன் சின்னம் தொடர்பாகப் பேசினார். ஏற்கனவே அவர் கேட்ட சின்னங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததால், தேர்தல் ஆணையம் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கியுள்ள சின்னங்களிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்யுமாறு கூறினார். அதில் ஒரு சின்னம்தான் பிரஷர் குக்கர் சின்னம். பிரஷர் குக்கர் சின்னத்தை தனக்கு ஒதுக்கும்படி தினகரன் கேட்ட தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை ஒதுக்கியது. எதிரிகளுக்கு பிரஷர் கொடுக்கவே இந்த குக்கர் சின்னத்தை பெற்றேன் எனக் கூறினார். இதுதான் டிடிவி கைக்கு பிரஷர் குக்கர் வந்த கதை.
 

அதன்பின் அந்த சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார். அமமுக கட்சியை தொடங்கி குக்கர் சின்னத்தையே கட்சியின் சின்னமாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அமமுக பதிவுசெய்யப்படாத கட்சி எனக்கூறி தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதனால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
இன்று (07.02.2019) இந்த வழக்கை நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனின் அமமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது எனவும், பொது பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சி உரிமை கோர முடியாது எனவும் கூறியிருந்தது.
 

ttv

 

தற்போதைய நிலையில் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க உத்தரவிட இயலாது என்றும், டெல்லி ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ள இரட்டை இலை சின்ன வழக்கை 4 வாரத்தில் முடிக்க வேண்டும் என்றும் கூறியது. மேலும் அவ்வாறு 4 வாரத்திற்குள் வழக்கை முடிக்காவிட்டால் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்கலாமா, வேண்டாமா என்பதை தேர்தல் ஆணையமே முடிவெடுக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.
 

இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரையிலேயே அமமுக செயல்படும் எனக்கூறிய தினகரன். இரட்டை இலையை மீட்பாரா அல்லது குக்கர் சின்னத்திற்காக அ.ம.மு.க.வை தனிக்கட்சியாக பதிவு செய்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள, இரட்டை இலை சின்னத்தை மதுசூதனனுக்கு அளித்துள்ளதை எதிர்த்து தான் தொடுத்துள்ள வழக்கிலிருந்து நீங்கிக்கொள்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.