Skip to main content

காவி வண்ணம் அவமானம் என்று தெரிந்ததால் தான் பெரியார் சிலை மீது காவி பூசுகிறார்கள்..!! - சுப.வீ கிண்டல்!

Published on 20/09/2021 | Edited on 21/09/2021

 

ljk

 

பெரியார் பிறந்த தின சிறப்பு விழா மற்றும் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நூல் வெளியிட்டு விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெரியார் குறித்தும், அவரின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். அவர் பேசியதாவது, " பெரியார் பிறந்த தினம் இன்றைக்குச் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரைப் பெரியார் என்று அழைத்தால் அவரின் புகழ் அதிகரித்துவிடுமோ என்று அஞ்சி, சிறியோர் சிலர் அவரை ஈவேரா என்கிறார்கள். பெரியாருக்கு ஏன் அத்தனை உயரமான சிலை என்று சில குள்ளமான நபர்கள் கேட்கிறார்கள். இப்போதும் சிலர் பெரியார் சிலைகளை உடைக்கிறார்கள். காவிச்சாயம் பூசி அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். காவி என்றால் அவமானம் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. சாகும் வரையில் சாதியை எதிர்த்துப் போராடிய ஐயா பெரியாரை நாயக்கர் என்று சிலர் நக்கல் அடிக்கிறார்கள். இறந்து 50 ஆண்டுகளை நெருக்கும் இந்த வேலையிலும் பெரியார் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால் அதற்கு என்ன காரணம் இருக்கிறது.

 

நம்முடைய ஆசிரியர் மிக அழகாகக் கூறுவார், " பெரியாருக்கு அசையும் சொத்தும் உண்டு, அசையா சொத்து உண்டு, நாமெல்லாம் அசையும் சொத்து, அவர் கொடுத்துவிட்டுப் போயிருக்கின்ற சமூகநீதி அசையா சொத்து" என்பார். இது அத்தனையும் உணர்ந்ததால் தான் கடந்த 6ம் தேதி நம்முடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெரியார் பிறந்த தினம் சமூக நீதி நாள் என அறிவித்தார்.  இந்த அறிவிப்பு இன்னமும் பலருக்குப் பிடிக்கவில்லை. இன்றைக்கு ஒரு நாளிதழில் நடுப்பக்க கட்டுரை வெளிவந்துள்ளது. அதை எழுதியவர், ஈவேராவின் பிறந்த நாளை எதற்குச் சமூகநீதி நாள் என்று அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார். ஜப்பானில் உள்ளவர்களுக்கே பெரியாரைப் பற்றித் தெரிந்திருக்கின்ற போது, இந்த சனாதனவாதிகளுக்குத் தெரியாமல் போய் உள்ளது. ஜப்பான் காரர்களை இந்த விழாவுக்கு அழைத்திருக்கலாம் போல, அவர்களுக்குப் பெரியாரின் அருமை புரிந்திருக்கிறது. இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டிய வேலை நம்முடையதும் அல்ல. அதற்கான அவசியம் இல்லை. அவர்கள் திருந்தவும் மாட்டார்கள். ஆசிரியர் அவர்கள் 'கற்போம் பெரியாரியம்' என்ற புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறார். அந்த புத்தகத்தை முழுவதும் படித்து முடித்துவிட்டேன். அந்த புத்தகம் ஆய்வு நூல் அல்ல, அறிமுக நூல். நம் எல்லோருக்கே அது பாடநூல். பெரியாரை ஏற்கனவே படித்திருந்தாலும் நாம் அனைவரும் மீண்டும் அந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும். 

 

அதை நாம் படித்தால் தான் அவர் நிஜமாகவே ஆசிரியர் என்று நமக்குத் தெரியவரும். அவர் விடுதலையின் ஆசிரியர் மட்டும் அல்ல, நமக்கு பெரியாரியத்தைச் சொல்லிக்கொடுக்கின்ற நிஜமான ஆசிரியராக அந்த புத்தகத்தைப் படித்து முடித்தால் நமக்கு அவர் தெரிவார். அந்த புத்தகத்தில் அவர் மொழிக்காகக் கட்சி தோன்றியுள்ளது, வர்க்கத்துக்காகக் கட்சி தோன்றி இருக்கிறது, நிலத்திற்காகக் கட்சி தோன்றி இருக்கிறது, ஆனால் சுயமரியாதைக்காக ஒரு கட்சி உலகத்தில் எங்கேயாவது தோன்றி இருக்கிறதா என்று கேட்கிறார். அதில் ஒரு தகவலை ஆசிரியர் கூறியுள்ளார். பெரியார் அவர்கள் பத்து வயதாக இருக்கும் போது அவர்கள் வீட்டிலிருந்தவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது தாகம் எடுத்தால் மேல் சாதியினர் வீட்டில் தண்ணீர் வாங்கி குடி என்று கூறியுள்ளனர். பெரியார் அவர்கள் ஒருமுறை தண்ணீர் தாகம் எடுக்கவே, ஒருவருடைய வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வாய்ப் படாமல் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நீர் அருந்திய பிறகு உள்ளிருந்த சிறிது தண்ணீர் எடுத்து வந்து அந்த பாத்திரத்தில் தெளித்துவிட்டு பிறகு அதனை எடுத்துச் சென்றுள்ளனர். இது பெரியாரைச் சுருக்கென்று தைத்துள்ளது. அதுதான் இன்று நாம் இந்த இடத்தில் நிற்பதற்குக் காரணமாக இருக்கிறது" என்றார்.


 

 

Next Story

சனாதனம்.. தேர்தல் தோல்வி..! - சுப. வீரபாண்டியன்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Sanathanam.. election failure..! - Suba.  Veerapandian

அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில், பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றுவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வியது என்றும் சில ஊடகங்கள் எழுதுகின்றன. மக்களில் ஒரு பகுதியினரும் அதனை நம்புகின்றனர். ஐந்து மாநிலங்களில், மூன்றில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்பதை வைத்து இப்படி விமர்சனங்கள் வெளிப்படுகின்றன. அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சில உண்மைகளை வேறு சில கோணங்களில் பார்த்தால்தான், உண்மை நமக்கு புரியும் என்கிறார் திராவிடர் கழக மூத்த தலைவர் சுப.வீரபாண்டியன்.

மேலும் அவர், இந்தத் தேர்தல் முடிவுகளை விமர்சனம் செய்யும் வலதுசாரிகள், இது பா.ஜ.க.வின் வெற்றி என்றும், காங்கிரஸின் தோல்வி என்றும் சொல்வதோடு நிறுத்திவிடாமல், சனாதனம் பற்றி உதயநிதி பேசியதால்தான் காங்கிரஸ் இப்படி ஒரு தோல்வியைச் சந்தித்தது என்றும் சேர்த்துச் சொல்கிறார்கள். அங்குதான் இருக்கிறது ஒரு நுட்பமான பஞ்சகம். இந்தக் கூற்றுகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, தேர்தல்களில் கட்சிகள் பெற்ற இடங்களை மட்டும் பார்க்காமல், அவை பெற்ற வாக்குகளையும் நாம் கொஞ்சம் பார்க்கலாம்!

இதோ அந்தப் புள்ளி விவரம், வாக்குகளின் எண்ணிக்கையைச் சற்று கூர்ந்து கவனித்தால், சில உண்மைகள் நமக்குப் புரியும்!

தெலங்கானா, மிசோரம் இரண்டு மாநிலங்களையும் விட்டுவிட்டு பா.ஜ.க. வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் மட்டும் இரண்டு கட்சிகளும் (பா.ஜ.க., காங்கிரஸ்) பெற்றிருக்கும் வாக்குகள் 4.48 கோடியும், 3.98 கோடியும் ஆகும். அதாவது பா.ஜ.க. மூன்று மாநிலங்களிலுமாகச் சேர்த்து 50 லட்சம் வாக்குகள் மிகுதியாக பெற்றிருக்கிறது. இது பெரிய வெற்றிதான், நாம் மறுக்கவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் பெற்றுள்ள வாக்குகளையும் சேர்த்துத்தானே பார்க்க வேண்டும். மிசோரமிலாவது இரண்டு மாநிலக் கட்சிகளுக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவியது. ஆனால் தெலங்கானாவில் அப்படி இல்லை. எனவே தெலங்கானாவில் இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளை மட்டுமாவது நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.

அப்படிப் பார்க்கும்போது, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 92 லட்சம் வாக்குகளையும், பா.ஜ.க. வெறும் 32 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளன. இரண்டுக்கும் இடையில் 60 லட்சம் வாக்குகள் வித்தியாசம். இப்போது நான்கு மாநிலத் தேர்தல்களிலும், இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ 10 லட்சம் வாக்குகள் பா.ஜ.க.வைவிட கூடுதலாகப் பெற்றிருப்பது புலப்படும். மிசோரமில் இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளைக் கூட்டினால், காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் மேலும் கூடுதலாக ஆகின்றன. உண்மை இவ்வாறிருக்க, பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது, காங்கிரஸ் தோற்றுவிட்டது என்று சொல்வது எப்படி முழு உண்மை ஆகும்?

இவற்றைத் தாண்டி, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குள் எந்தத் தொடர்பும் இல்லாத உதயநிதியை உள்ளே இழுத்துக்கொண்டு வருவதன் நோக்கம் என்ன என்று நாம் பார்க்க வேண்டும். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசிய காரணத்தால்தான், காங்கிரஸ் கட்சி தோற்றுவிட்டது என்று, வெட்கமே இல்லாமல் ஒரு பொய்யைச் சொல்கின்றனர். அதாவது, சனாதனத்தின் மீது ஒரு சிறு விமர்சனத்தை முன்வைத்தால் கூட, மக்கள் எதிராகத் தீர்ப்பளித்துவிடுவார்கள் என்பது போன்ற ஓர் அச்சுறுத்தலை உருவாக்குவதுதான் அதன் உள்நோக்கம்.

சனாதனத்தை விமர்சித்ததால் தான் இப்படித் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன என்னும் முழுப் பொய்யை, உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட, சனாதனத்தை எதிர்த்த உதயநிதி ஆதரித்த காங்கிரஸ் கட்சி தானே 10 லட்சம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அப்படியானால், சனாதனத்தை எதிர்ப்பதைத்தான் பெரும்பான்மையான மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று நாம் முடிவுக்கு வந்துவிடலாமா?

சனாதன ஆதரவோ, எதிர்ப்போ இந்தத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு வரவில்லை என்பதுதான் உண்மை. பிறகு ஏன் அவர்கள் இப்படி ஒரு காரணத்தைக் கற்பிக்கின்றனர்? அங்குதான் அவர்களின் உள்நோக்கமும், மத அடிப்படையிலான பாசிசமும் தொக்கி நிற்கின்றன. கடவுள், மதம், வழிபாட்டு முறைகள் ஆகியனவெல்லாம் அவரவருடைய தனிப்பட்ட நம்பிக்கை, வாழ்க்கைச் சூழல், அனுபவத்தைப் பொறுத்தவை. ஆனால் பா.ஜ.க., திட்டமிட்டு மத அடிப்படையிலான அரசியலை இங்கு கட்டமைக்க விரும்புகிறது. இந்தியாவில் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களுக்கான கட்சி தங்களின் கட்சி மட்டும் தான் என்பது போலவும், பிற கட்சிகள் எல்லாம் இந்து மதத்திற்கு எதிரானவை என்பது போலவும் ஒரு கருத்தை அவர்கள் உருவாக்க விரும்புகின்றனர். அப்படி செய்வதன் மூலம், பெரும்பான்மையினரின் வாக்குகளைத் தாங்கள் பெற்றுவிட முடியும் என்பதே அவர்களின் எண்ணம்.

இந்த மதவாத அரசியலைத் தமிழ்நாட்டிற்குள்ளும் கொண்டு செலுத்திவிட வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் திரும்பத் திரும்ப ஒரு கேள்வியை இங்கு அவர்கள் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற மத விழாக்களுக்கு எல்லாம் வாழ்த்துகளைச் சொல்லும் தி.மு.க.வும், தமிழ்நாடு அரசின் முதல்வரும் ஏன் தீபாவளி உள்ளிட்ட இந்து மக்களின் விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்பதுதான் அந்த கேள்வி. நீண்ட நெடுநாட்களாக இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.

இந்த கேள்விக்கான உண்மையான விடையை, உள்நோக்கமுடைய அவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றாலும், பொது மக்களுக்கு நாம் சொல்லியாக வேண்டிய கடமை இருக்கிறது. மற்ற மத விழாக்கள் எல்லாம், அவர்களின் இறைத்தூதர்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடும்போது, தீபாவளி என்பது ஒருவரைக் கொன்ற நாளைக் கொண்டாடுவதாக இருக்கிறது. அடுத்தவன் சாவைக் கொண்டாடும் அந்தப் பழக்கம் எப்போதும் தமிழர்களிடம் இல்லை. அது மட்டுமல்லாமல், இந்துக்களின் விழாக்களில் பெரும்பான்மையானவை, தேவ - அசுர யுத்தம் என்னும் கற்பனையில் உருவானவையாகவே உள்ளன.

தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் இங்கு குறிப்பிடப்படுகின்றவர்கள் யார் என்னும் வினாவிற்கு, அவர்களால் உண்மையான, தெளிவான விடையை ஒரு நாளும் சொல்ல முடியாது. பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போரினையே அவர்கள் தேவ அசுர யுத்தம் என்கின்றனர். இதை ஆரிய திராவிடப் போர் என்பார் ஜவஹர்லால் நேரு.

இன்னொன்றையும் நாம் பார்க்கலாம். இயேசுநாதர், நபிகள் ஆகியோர் வரலாற்று மனிதர்கள். பிள்ளையார், ராமர், கிருஷ்ணர் ஆகியோர் புராணப் பாத்திரங்கள். இரண்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு. வரலாறு என்பது உண்மை, புராணம் என்பது நம்பிக்கை. ஒருவர் நம்பிக்கையை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது, நாகரிகமும் இல்லை - ஜனநாயகமும் இல்லை.

இறுதியாக, "சூத்திரர்கள் யார்?' என்னும் நூலில், அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ள சில வரிகளோடு, இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம். "மேலை மதங்களின் பிரபஞ்சத் தோற்றம் குறித்த கருத்தாக்கத்தில், மனிதன் முக்கியத்துவம் பெறுகிறான். ஆனால் இங்கோ, ஒரு வருணம் அல்லது சாதி தான் அடிப்படை அலகாக இருக்கிறது'' என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.

ஆம்! இந்து மதம் என்பது கடவுளை விட, மதத்தை விட, வழிபாட்டு முறைகளை விட வருணத்தையும், சாதியையும்தான் தூக்கிப் பிடிக்கிறது. சாதி அடுக்குகளைக் கொண்டே, இந்து மதம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்னும் உண்மையை நாம் அனைவரும் உணர்ந்திட வேண்டும். அதை உணரும்போதுதான், பா.ஜ.க. என்பது பாசிசத்தின் மறுவடிவம் என்பதையும் நம்மால் உணர முடியும். 

Next Story

"திராவிடம் என்றால் என்ன என்பதை பல வடிவங்களில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது" - பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் பேச்சு!

Published on 08/12/2021 | Edited on 09/12/2021

 

 Jeyaranjan

 

திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீ எழுதிய ‘இடதுசாரி தமிழ்த்தேசியம்’, பத்திரிகையாளர் திருமாவேலன் எழுதிய ‘திரும்பத்திரும்ப திராவிடம் பேசுவோம்’, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘மார்க்சியமும் பெரியாரும்’ ஆகிய நூல்கள் கருஞ்சட்டை பதிப்பகம் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்டது. மூன்று நூல்களையும் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிட, பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் பெற்றுக்கொண்டார்.

 

பின் விழாவில் ஜெயரஞ்சன் பேசுகையில், "இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு நீங்கள் வரவேண்டும் என்று பேராசிரியர் சு.ப.வீ தொலைபேசியில் சொன்னபோது சரி வருகிறேன் என்றேன். நூலை யார் வெளியிடுகிறார் என்று கேட்டதற்கு திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிடுகிறார் என்றார்.

 

இன்றைக்கு வெளியிட்ட நூல்கள் இன்றைய காலத்திற்கு அவசியமான நூல்கள். இன்றைய அரசியலை எதிர்கொள்ளவும் தேவைப்படுகிறது. இன்று 12ஆம் வகுப்பிற்கு பிறகு மேல்படிப்பு படிக்கக்கூடியவர்களின் விகிதம் 55 விழுக்காடு வந்துவிட்டது. இது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. இந்தியாவின் சராசரி விழுக்காடே 26 விழுக்காடுதான். 55 விழுக்காடு அளவில் பிள்ளைகள் படிக்கிறது என்றால் அவர்களுடைய தேடல் அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தேவையானதை இயக்கம் தயாரித்து கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும். 

 

அமெரிக்காவில் இன்று சமூக நீதி பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஐரோப்பாவும் இன்று பேச ஆரம்பித்துள்ளனர். புதிய பொருளாதார கொள்கைகள்தான் நம்மை காப்பாற்றும் என்று பேசிக்கொண்டு இருந்தவர்கள் இன்று சமூக நீதிதான் முக்கியம் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். காரணம் சமத்துவமின்மை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. சமத்துவமின்மை அதிகரிக்கும்போது வலதுசாரிகள் வெறுப்பரசியலை வளர்க்கிறார்கள். வெறுப்பரசியல் நம் ஊரில் மட்டும் இல்லை. இன்றைக்கு நம்மை தமிழ்ச்சமூகத்தின் எதிரிகள் எனக் கட்டமைக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்திற்கு நம்முடைய இயக்கம் அளித்துள்ள பங்களிப்பு பல தளங்களில் உள்ளது. 

 

பெரியாரை வெறும் கடவுள் எதிர்ப்பாளராக மத மறுப்பாளராகச் சுருக்கி பார்க்கிறார்கள். இன்றைக்கு நவீன சிந்தனையில் பேசக்கூடிய விஷயங்களை பெரியார் அன்றைக்கே செய்துள்ளார். சமுதாயத்தை பற்றி தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருந்ததால் அந்த அறிவு அவருக்கு கிடைத்தது. பல இயக்கங்கள் தோன்றியிருந்தாலும் அவர்கள் தங்கள் பார்வையை மதவிடுதலை, இன விடுதலை எனக் குறுகலாக வைத்திருந்தனர். ஆனால், பெரியார் அப்படியில்லை. காலையில் அமர்ந்து மடாதிபதிகளுடன் இந்தியை எதிர்த்துக்கொண்டு இருப்பார். மாலையில் அந்த மாடாதிபதிகளை திட்டி கூட்டத்தில் பேசிக்கொண்டு இருப்பார். இங்கிருக்கும் அனைத்து பேதங்களையும் ஒழிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். அதற்கு எவையெல்லாம் எதிராக இருக்கிறதோ அவற்றையெல்லாம் விமர்சனம் செய்தார். பெரியார் என்ன செய்தார் என்பதையும் திராவிடம் என்றால் என்ன என்பதையும் பல வடிவங்களில் சொல்லவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.    

 

பெரியார் என்னென்ன வேலைகள் செய்துள்ளார் என்பதை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல வேண்டும். அண்ணன் ராசா டெல்லியில் பெரியார் பற்றி பேசிக்கொண்டு இருக்கையில் பெரியார் பற்றி எதாவது புத்தகம் இருந்தால் கொடுங்கள் என்று யாராவது கேட்டால் நம்மிடம் கொடுக்க என்ன புத்தகம் இருக்கிறது? இந்த அனுபவம் எனக்கே நிகழ்ந்துள்ளது. ஆகவே அந்த தளத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

 

திராவிட இயக்கத்தின் கொள்கை என்பது பிச்சைக்காரராக இல்லாமல் அனைவரையும் மானுடராக மாற்றுவது. தலை நிமிர்ந்து நடக்கும்போதுதான் ஒருவன் மானுடராக மாறுகிறான். தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் என்றால் அவனுக்கு சமஉரிமை வேண்டும் . கோடீஸ்வரனாக இருந்தாலும் சரி குப்பை அள்ளுபவராக இருந்தாலும் சரி ஒருத்தருக்கு ஒரு ஓட்டு என்றார் அம்பேத்கர். அது வழியாகத்தான் அரசியல் அதிகாரம் ஜனநாயகப்படுத்தப்பட்டது. பொருளாதார அதிகாரத்தையும் சமூக அதிகாரத்தையும் ஜனநாயகப்படுத்த முடியாத நாடுதான் இந்த நாடு. இவர்கள் அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை 1967இல் இருந்து செயல்வடிவத்தில் கட்டிக்கொண்டு இருக்கிறோம்" எனக் கூறினார்.