
நடிகர் சிவாஜி கணேசனின் 92வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடினர். பிறந்தநாளையொட்டி சென்னை அடையாரில் உள்ள சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார், பிரபு, பேரன் விக்ரம் பிரபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஆளும் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், திரையுலகினரும் சிவாஜி மணிமண்டபத்தில் அவரது திருவுருப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஆளும் கட்சி, எதிர் கட்சியைச் சேர்ந்தவர்கள், பிரபலங்கள் வந்து சென்ற பின்னர் சிவாஜி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர் அவரது ரசிகர்கள். அவர்களில் சிலரை நாம் சந்தித்தோம்.

''சிவாஜின்னா எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். சிவாஜி படம் ஒரு படம் கூட தவறமாட்டோம். பார்த்துவிடுவோம். மனோகரா, பராசக்தி, பாகப்பிரிவினை, வசந்தமாளிகை என சொல்லிக்கொண்டே போகலாம்'' என்றார் சுசீலா. ''பாரதவிலாஸ் படத்தை மட்டும் 25 முறை பார்த்தேன். சிவாஜின்னா எனக்கு உயிர். ஒவ்வொரு வருடமும் சிவாஜி பிறந்த நாளன்று அவரது சிலைக்கு வந்து மரியாதை செலுத்துவேன். சென்னை மந்தைவெளி என்பதால் இடையில் அடிக்கடி இந்த மணிமண்டபத்திற்கு வருவேன். காங்கிரஸ் கட்சிக்காக ஜீப்பில் ஓட்டுக் கேட்டுக்கொண்டு வந்தபோது அவரை நேரில் பார்த்திருக்கேன்'' என்றார் லலிதா.

இவர்கள் நம்மிடம் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு தனியார் பேருந்தில் இருந்து ஆண்கள், பெண்கள் என 50 பேர் இறங்கினர். அவர்களிடம் நாம் பேசும்போது, ''வேலூர் மாவட்டம், ஆற்காடு ஒன்றியத்தில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தில் இருந்து வருகிறோம். வேலூருக்கு அவர் அப்ப அடிக்கடி வருவார். அதனால எங்களுக்கு அவருடன் நெருக்கமாக பழக வாய்ப்பு ஏற்பட்டது. அவரது பிறந்த நாளன்று கடந்த 30 வருடமாக சென்னைக்கு வருகிறோம். முன்பு அவரது வீட்டில் அவரை சந்தித்து வாழ்த்து சொல்லுவோம். அவர் இறந்த பிறகு கடற்கரையில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தோம். இப்போது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தி வருகிறோம்.

பூபதி
நேற்றே எங்களின் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் சார்பாக, பள்ளிக் குழந்தைகளுக்கு நோட்டு, பென்சில், பெண்களுக்கு புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினோம். இதற்காக நாங்கள் யாரிடமும் உதவி கேட்பதில்லை. நாங்கள் எல்லோரும் கூலி வேலை செய்து வருகிறோம். சிவாஜி பிறந்த நாளுக்காக ஒவ்வொரு வருடமும் ஒன்று கூடுவோம். செலவுகளை பிரித்துக்கொள்வோம் என்றனர் பூபதி, ஜி.பழனி, ரவி, சின்னபையன், ஆர்.பாண்டு, சுப்பிரமணி ஆகியோர்.

இதேபோல் விருதுநகரில் இருந்து ஏழு பேர் சிவாஜி மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தினர். அவர்களில் அந்தோணி நம்மிடம், ஒவ்வொரு வருடமும் சிவாஜி பிறந்த நாளன்று சென்னை வருவோம். சிவாஜி வீட்டுக்கு சென்று அங்கு அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு, அங்கிருந்து நேராக இங்கு வந்துவிடுவோம். எனது 15 வயதில் இருந்து நான் சிவாஜிக்கு ரசிகராக இருக்கிறேன். இப்போது எனக்கு வயது 68. விருதுநகருக்கு அவர் வந்திருந்தபோது பார்த்திருக்கிறோம். சிவாஜி கணேசனைப்போல் நடிகர் யாரும் கிடையாது. இனிமேல் யாரும் வரப்போவதும் கிடையாது. ஒவ்வொரு படத்திலும் முத்திரை பதித்துள்ளார். எல்லா வயதினருக்கும் பிடித்த நடிகர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் எல்லோருக்கும் பிடித்த நடிகர். விருதுநகரில் சிவாஜி பிறந்த நாளில் முதியோர்கள், வசதியற்றவர்களுக்கு சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்குவோம். விருதுநகர் பக்கத்தில் முத்துராம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் 20 பேருக்கு தலா ஒரு செட் உடைகள் கொடுப்பேன் என்றார்.

எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தான் மதிக்கும் நடிகர் மறைந்தாலும் இத்தனை வருடங்களுக்கு பிறகும் அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்த சென்னைக்கு வருவதும், அவரது நினைவாக நலத்திட்ட உதவிகள் செய்வதும் வழக்கமாக வைத்துள்ள இவர்கள்தான் உண்மையான ரசிகர்கள்...