Skip to main content

ஸ்டாலின் முதல்வராக கூடாது... ராமதாஸ் போடும் அதிரடி ப்ளான்... ரஜினியுடன் பாமக கூட்டணி பற்றி வெளிவராத தகவல்! 

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

"பா.ம.க.வும் ரஜினியும் கூட்டணி சேர வாய்ப்பு இருக்கிறது; அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது' என தமிழருவி மணியன் வீசிய குண்டு அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணிக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ரஜினி தொடர்பான கேள்விகளுக்கு பூடகமாகவே பதிலளித்தார் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். அவருடைய பதிலால் அதிர்ச்சியடைந்திருக்கிறது அ.தி.மு.க. தலைமை.

"சினிமாக்காரர்களை கூத்தாடிகள்' என விமர்சிப்பவர் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ். குறிப்பாக, ரஜினியின் "பாபா' பட விவகாரத்தின்போது ரஜினிக்கு எதிராக முன்வைத்த விமர்சனம் இது. அந்த விமர்சனத்தின் மீது அழுத்தமான நம்பிக்கையை ஆழமாக வைத்திருக்கும் ராமதாஸ், தற்போது ரஜினிக்கு எதிராக எந்த விமர்சனத்தையும் வைப்பதில்லை.

 

rajini



"பத்திரிகையாளர்கள் கேட்கும் எப்படிப்பட்ட கேள்விகளுக்கும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என நேரடியாகவே பதில் சொல்லிப் பழக்கப்பட்ட ராமதாசிடம் ஏற்பட்டிருக்கும் அண்மைக்கால மாற்றங்களுக்கு ரஜினியுடனான அன்புமணியின் நெருக்கமும் கூட்டணி முயற்சிகளும்தான் காரணம்' என்கிறார்கள் பா.ம.க.வினர்.

ராமதாஸ், ரஜினி, எடப்பாடியைச் சுற்றி அரசியலில் என்ன நடக்கிறது என மூன்று தரப்பிலும் விசாரித்தோம். பா.ம.க. வின் உள்வட்டங்களில் விசாரித்தபோது, ""நேரடி அரசியலுக்கு ரஜினி வராமல் போனால் அ.தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும்தான் சட்டமன்றத் தேர்தலில் பிரதானமாக களத்தில் நிற்கும். அப்படிப்பட்ட சூழல் உருவானால் ஆட்சியை தி.மு.க. கைப்பற்ற வாய்ப்பு உண்டு என சில கணக்குகளை ராமதாசிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

 

pmk



தி.மு.க.வை தனது எதிரியாக நினைக்கும் ராமதாஸ், என்ன விலை கொடுத்தாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராவதை தடுக்க வேண்டும் என்பதில் உறுதி காட்டி வருகிறார். அதற்குப் பல கணக்குகளும் காரணங்களும் இருக்கின்றன. குறிப்பாக, ஆட்சி அதிகாரத்தில் இந்தமுறை பா.ம.க. பங்குபெறாமல் போனால் அப்படி ஒரு வாய்ப்பு எப்போது வாய்க்கும் என தெரியாது. அதனாலேயே, அதிகாரத்தை கைப்பற்ற பல்வேறு காய்களை நகர்த்தியபடி இருக்கிறது பா.ம.க. தலைமை. அதில் ஒன்றுதான் ரஜினி.

அரசியலுக்கு ரஜினி வருவது உறுதி என ராமதாசுக்கும் அன்புமணிக்கும் சொல்லப்பட்டுள்ளது. ரஜினியுடன் கூட்டணி வைப்பதை விரும்பும் அன்புமணி, பா.ம.க. -ரஜினி -பா.ஜ.க. என ஒரு கூட்டணியை உருவாக்கத் திட்டமிடுகிறார். அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, ரஜினியை சந்தித்து விவாதித்திருக்கிறார் அன்புமணி. அந்த வகையில்தான், ரஜினிக்கு எதிரான விமர்சனங்களை ராமதாஸ் தவிர்ப்பதுடன் பா.ம.க. தரப்பிலிருந்து பாசிட்டிவ் சிக்னலும் ரகசியமாக ரஜினிக்கு கொடுக்கப்பட்டு வருகிறது'' என்கிறார்கள் நம்மிடம் பேசிய பா.ம.க.வின் வடதமிழக மூத்த நிர்வாகிகள்.

 

pmk



ரஜினிக்கு நெருக்கமான நட்பு வட்டாரங்களில் விசாரித்தபோது,’ சென்னை -கேளம்பாக்கத்திலுள்ள ரஜினியின் பண்ணை வீட்டில் அவரை சந்தித்திருக்கிறார் அன்புமணி. அந்த சந்திப்பில், "நேரடி அரசியலுக்கு நீங்கள் வருவதன் மூலம் தமிழகத்தில் ஒரு மாற்றம் நடக்கும். நாங்களும் நீங்களும் கூட்டணியாக இணைந்தால் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை தர முடியும்' என அன்புமணி சொல்ல, அதனை ஆமோதித்த ரஜினி, "அய்யா ராமதாசின் போராட்டங்களை நிறைய படித்திருக்கிறேன். சமூக நீதிக்கான போராட்டங்களில் அவரது பங்களிப்பு பிரமிக்கத்தக்கது. அவரை விட்டால் இப்போது தமிழகத்தில் மூத்த சமூகப் போராளி யாருமில்லை. தமிழக அரசியலில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அது பற்றி நிறைய விவாதிக்கலாம்' என சொல்லியிருக்கிறார்.

இந்த சந்திப்பையடுத்து ரஜினி-அன்புமணி யின் நட்பு இறுகியிருக்கிறது. பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பதில் ரஜினியும் விருப்ப மாகத்தான் இருக்கிறார். காரணம், பா.ஜ.க.வின் செயல் திட்டங்களுக்கேற்ப தி.மு.க.வை எதிரியாக கருதும் ரஜினி, தி.மு.க.வுக்கு எதிராக அரசியல் செய்யும் பெரும்பான்மை சமூகத்தை உள்ளடக்கிய பா.ம.க.வுடன் கூட்டணி வைப்பது தனக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப் போடு வதுதான். இதற்கான பல புள்ளிவிபரங்கள் ரஜினியிடம் தரப்பட்டிருக்கின்றன'' என்கிறார்கள் அழுத்தமாக.


இந்த நிலையில், ரஜினி-பா.ம.க. உறவு குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு உத்தர விட்டிருந்தார் முதல்வர் எடப்பாடி. உளவுத் துறை உறுதி செய்தது. இது குறித்து தனது தரப்பிலிருந்து ராமதாசிடம் பேச, "அ.தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறோம். நமது கூட்டணி தொடரும். பா.ம.க.வை சந்தேகப் பட வேண்டாம்' என தெரிவித்திருக்கிறார். இருப்பினும் பா.ம.க. மீதான தனது சந்தேகத்தை எடப்பாடி விலக்கிக்கொள்ள வில்லை'' என்கிறார்கள் மூத்த அமைச்சர் களுக்கு நெருக்கமானவர்கள்.


பா.ஜ.க.வின் அரசியல் ஆலோசகர்களி டம் இது குறித்து விசாரித்தபோது, ""பா.ம.க.வில் அதிகரித்துவரும் அதிருப்தி யாளர்கள் அங்கிருந்து வெளியேற தருணம் பார்க்கிறார்கள். இத்தகைய அதிருப்தியாளர் கள் அ.தி.மு.க., தி.மு.க.வுக்குள் போக விரும்பு வதில்லை. ரஜினி போன்ற மாஸ் ஹீரோக்கள் கட்சி ஆரம்பிக்கும்போது அங்கு சென்றால் நல்ல பதவிகள் வாங்க முடியும் என எதிர் பார்த்திருக்கிறார்கள். அதனைத் தடுப்பதற்காக வும், அ.தி.மு.க.விடம் சீட் சேரிங்கை அதிகரித்துக்கொள்ளவும்தான் ரஜினியும் பா.ம.க.வும் நெருங்குவது போல தோற்றத்தை உருவாக்குகிறது பா.ம.க. தலைமை''‘என சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால், தி.மு.க.வை வீழ்த்த ரஜினியை வைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்க பலே பலே திட்டங்களைப் போடத் துவங்கியிருக்கிறது பா.ஜ.க.வின் தேசியத் தலைமை.

 

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.