Skip to main content

கொல்கத்தாவில் ஸ்டாலின் நடத்திய சர்ஜிகல் ஸ்டிரைக்!

Published on 21/01/2019 | Edited on 21/01/2019
mk stalin


மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மிகப்பெரிய பிரிகேட் மைதானத்தில் இந்தியாவில் உள்ள முக்கியமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூடி மோடி அரசைத் தூக்கி எறிவோம் என்று சபதம் எடுத்திருக்கிறார்கள்.
 

22க்கு மேற்பட்ட கட்சிகள் தனக்கு எதிராக அணி அமைத்திருப்பதாகவும், அது மக்களுக்கு எதிரான அணி என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார். அதாவது தனக்கு எதிராக அணி அமைத்தால் அது மக்களுக்கு எதிரானது என்றால் அர்த்தம்? மோடி என்றால் மக்கள்… மக்கள் என்றால் மோடி என்று சொல்ல வருகிறாரா?
 

2014 ஆம் ஆண்டு அவர் பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மோடியை விமர்சிப்பவர்கள் அனைவரும் தேசவிரோதிகள் அல்லது ஆண்ட்டி இண்டியன் என்று குற்றம்சாட்டப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அதாவது, மோடி என்றால் தேசம்… தேசம் என்றால் மோடி என்பதைப்போல.
 

இப்படித்தான், 1977 ஆம் ஆண்டுக்கு முன் இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா என்று காங்கிரஸ் தலைவர்கள் ஒரு முழக்கத்தை உருவாக்கினார்கள். ஆனால், அதே இந்திரா தனது தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். காங்கிரஸும் படுதோல்வி அடைந்தது.
 

அதே நிலைதான் இப்போதும் இந்தியாவில் நிலவுகிறது. பதவியேற்ற நாளில் இருந்து இன்றுவரை மோடி இந்தியாவில் தங்கிய நாட்களைவிட வெளிநாடுகளில் சுற்றித்திரிந்த நாட்களே அதிகம். அவரை சுற்றுலா பிரதமர் என்றே அழைக்கத் தொடங்கிவிட்டார்கள்.
 

மக்களுடைய வாழ்வாதாரத்தையும், இந்தியாவின் அடிப்படைத் தன்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டையும் தகர்த்து, மக்களை பிரித்தாளும் முயற்சியிலேயே பாஜக காலத்தை ஓட்டிவருகிறது. கார்பரேட் நிறுவனங்களின் வேலைக்காரரைப் போல மோடி, இந்திய மக்களின் பணத்தை எடுத்து பெருமுதலாளிகளுக்கு தாரைவார்த்து, அவர்களை வெளிநாடுகளுக்கு தப்பவிடும் வேலையையும் செய்துவருகிறார். எப்போதும் இல்லாத அளவுக்கு, அம்பானிகளும், அதானிகளும் விரும்புகிற வேலையை அவர்கள் விரும்பியபடி நிறைவேற்றித்தரும் நம்பிக்கையான வேலைக்காரராக மோடி செயல்படுகிறார் என்று பகிரங்கமாகவே அவர்மீது குற்றம்சாட்டுகிறார்கள்.
 

அவருக்கு எதிராக எத்தனையோ ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் எதற்குமே அவர் பதிலளிப்பதில்லை. இது ஒருவிதமான கல்லுளிமங்கன் நிலை என்றும் கேலிசெய்கிறார்கள். நாடாளுமன்றத்தில் 19 நாட்களே இருந்திருக்கிறார். எந்த ஒரு விவாதத்திலும் உறுப்பினர்களின் கேள்விகளை நேரடியாக எதிர்கொண்டு பதிலளிக்கவில்லை. ஒரு விவாதம் நடந்தால், இறுதியாக காட்டுக்கூச்சலாக ஏற்ற இறக்கத்தோடு நீளமாக பேசுவதையே தனது பாணியாக வைத்திருக்கிறார் மோடி. குறுக்கே யாரும் புக முடியாத நிலையை உருவாக்கிக் கொண்டே பேசுகிறார்.
 

இப்படிப்பட்ட பிரதமரை இனியும் விட்டுவிடக்கூடாது என்றே, மக்கள் நலன்சார்ந்த சிந்தனையோடு, இந்தியாவின் அரசியலமைப்பை பாதுகாக்கவேண்டும் என்ற லட்சியத்தோடு எதிர்க்கட்சிகள் இணைந்திருக்கின்றன. அவர்கள் நடத்திய கொல்கத்தா கூட்டத்தில் எல்லாத் தலைவர்களுமே தங்களுக்குள் வேற்றுமையை மறந்து, மோடியை தூக்கியெறிய வேண்டியதன் அவசியத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.
 

பங்கேற்ற தலைவர்களில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய பேச்சுதான் மிகவும் வெளிப்படையான, மோடியை முழுவதுமாகத் தோலுரித்த பேச்சாகும். இந்திய அரசை பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாற்றிவிட்டார் மோடி என்று கூறிய ஸ்டாலின், நூறு கூட்டங்களில் மோடி பேசிய ஆயிரம்பொய்களை அம்பலப்படுத்தினார். இந்தியர்களின் வங்கிக் கணக்கில் ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் போடுவதாக சொன்ன பொய்யை நம்பி வாக்களித்த மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்தவர். ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்பை உருவாக்குவேன் என்று மோடி சொன்ன பொய்யை நம்பி வாக்களித்த இளைஞர்களின் எதிர்காலத்தை நாசமாக்கி, பக்கோடா விற்பதும் ஒரு வேலைவாய்ப்புதான் என்று கேலி பேசியவர் மோடி. கருப்புப்பணத்தை ஒழிக்கப்போவதாக பணமதிப்பிழப்புச் செய்து, நாடு முழுவதும் சிறு, குறு தொழில்களை இழுத்துமூடக் காரணமானவர் மோடி என்று ஸ்டாலின் ஆவேசமாக குற்றம்சாட்டினார்.
 

இப்படிப் பேசியது மட்டுமின்றி, நாடுமுழுவதும் எல்லா மாநிலங்களிலும் இதுபோன்ற கூட்டங்களை நடத்தி மோடியையும் பாஜகவையும் அம்பலப்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார் ஸ்டாலின். அவருடைய பேச்சு இந்திய அளவில் கவனம் பெற்றது. எல்லாக் கட்சிகளும் தங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு மோடி தலைமையிலான பாஜக அரசை தூக்கியெறிய வேண்டும் என்று ஸ்டாலின் எழுப்பிய குரல் எல்லாப் பக்கத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

 

 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

கோடை இளவரசியைக் காணச் சென்ற முதல்வர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
The Chief Minister is coming to see the summer princess with sentiment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் பகுதியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோடை இளவரசியான கொடைக்கானலை காண வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோடை வெயிலை தணிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அதை ரத்து செய்துவிட்டு கோடை இளவரசி கொடைக்கானலை காண முடிவு செய்தார். அதன் அடிப்படையில், இன்று காலை 29ம்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரத்தில் இருக்கும் தயாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4ஆம் தேதி வரை தங்க இருக்கிறார். 

முதல்வர் கொடைக்கானல் வருகையை ஒட்டி கொடைக்கானல் மூஞ்சி கல்லிலிருந்து பாம்பார்புரம் வரும் வரை சாலைகள் பேண்டேஜ் ஒர்க் பார்க்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதுபோல், முதல்வர் பாதுகாப்புக்காக எஸ்.பி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி, 2 டி.எஸ்.பி, ரெண்டு இன்ஸ்பெக்டர், பத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The Chief Minister is coming to see the summer princess with sentiment

கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே முதன் முதலில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தவர், அங்குள்ள கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு சென்றார். அதன் பின், பாராளுமன்றத் தேர்தல் முடிவில் 40க்கு 39 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு சென்ற பின்பு தான் நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் வாங்கியதன் பெயரில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். 

பாம்பாராபுரத்தில் தங்கிய தமாரா ஹோட்டலில் ஒரு வாரம் குடும்பத்தாருடன் தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் யாரையும் முதல்வர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதற்கான ஆலோசனையும் குடும்பத்தாருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இப்படி சென்டிமென்ட் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு செல்வது போலத்தான் தற்பொழுதும் கோடை இளவரசியைக் காண கொடைக்கானல் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.