Skip to main content

விரைவில் மா.செ.க்கள் மாற்றம்? ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். ஆலோசனையால் அ.தி.மு.க.வில் பரபரப்பு!!!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

eps-ops


அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு ஒரு கடிதம் போயிருக்கிறது என்று அ.தி.மு.க. மேலிட வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதில், 'அம்மா ஜெ. எனக்குக் கொடுத்த கட்சியின் பொருளாளர் பதவியிலேயே நான் தொடரனும். அதேபோல் அம்மா இருந்த பொதுச் செயலாளர் பதவியில் சின்னம்மாவான நீங்கள்தான் இருக்கனும். அப்போதுதான், கட்சியைப் பழையபடி பலப்படுத்த முடியும். எடப்பாடி முழு நம்பிக்கைக்கு உரியவர் அல்ல. அவர், அம்மாவின் நம்பிக்கையைப் பெற்ற என்னையே மரியாதை இல்லாமல் நடத்துகிறார் என்று குறிப்பிட்டிருப்பதோடு, அமைச்சர்களில் 90 சதவீதம் பேர், உங்களைத்தான் அம்மாவின் மறுவடிவமாகப் பார்க்கிறார்கள் எனக் குறிப்பிட்டு, சசியின் மனதைக் குளிர வைத்துள்ளார் ஓ.பி.எஸ்' என்கிறார்கள்.
 


இதையடுத்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்ஸை அழைத்து பேசியிருக்கிறார். இவர்கள் இருவர் மட்டுமே இந்தச் சந்திப்பில் இருந்தாகவும், நீண்ட நேரம் இந்த ஆலோசனை நீடித்ததாகவும், இதில் தனது மன குமுறலைக் கொட்டித் தீர்த்திருக்கிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள். நீண்ட நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் சில வாக்குறுதிகளை ஓ.பி.எஸ்.க்கு அளித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள் அ.தி.மு.க. மேலிட தொடர்பில் உள்ளவர்கள். 
 

அமைச்சர்கள் தங்கள் துறையையே கவனிக்க வேண்டும், அடுத்த துறையில் தலையிடுவது கூடாது, கட்சிப் பொறுப்புகள் வழங்குவது, மாற்றுவது நமது இரண்டு பேருக்குள்ளேயே முடிவு எடுக்க வேண்டும், தேர்தல் வருவதால் சில மாவட்டச் செயலாளர்களை மாற்ற வேண்டும், மற்ற கட்சிக்கு இணையாக ஐ.டி. விங்கை பலப்படுத்த நிர்வாகிகளை மாற்ற வேண்டும், ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். இடமாறுதல் தொடர்பாக மற்ற அமைச்சர்கள் தலையீடுகள் இருக்கக் கூடாது, கரோனா விவகாரம் முடிந்த பின்னர் ஐ.பி.எஸ். இடமாற்றம் வைத்துக்கொள்ளலாம் என பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது. அதற்கான உறுதிகளையும் ஓ.பி.எஸ்.க்கு எடப்பாடி கொடுத்துள்ளாராம்.
 


இந்தநிலையில்தான் அ.தி.மு.க.வின் ஊராட்சிக் கழகச் செயலாளர் பொறுப்புகளும் ரத்து செய்யப்படுகிறது என மே 19ஆம் தேதி அதிரடியாக இருவரும் அறிவித்துள்ளனர். மேலும், தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் மற்றும் துணை நிர்வாகப் பொறுப்புகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும் அறிவித்து, சென்னை, மதுரை, கோவை, வேலூர் என நான்கு மண்டலங்களாகப் பிரித்து, இந்த நான்கு மண்டலத்திற்கும் நான்கு செயலாளர்களை நியமித்துள்ளனர். இந்த நான்கு மண்டலங்களுக்கும் துணை நிர்வாகிகள் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். இதில் கோவை, வேலூர் மண்டலங்களில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிகம் இருப்பார்கள், சென்னை, மதுரை மண்டலங்களில் இ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிகம் இருப்பார்கள் எனவும், ஓ.பி.எஸ்.ஸை எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தியுள்ளதால் கட்சியில் மா.செ.க்கள் மாற்றம் என எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்? எனவும் தெரிவிக்கிறார்கள் அ.தி.மு.க. மேலிட தொடர்பில் உள்ளவர்கள். இந்தத் தகவலால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


-மகேஷ்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.