Skip to main content

"நான் குடித்திருந்தால் இந்நேரம் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருப்பேன்" - யாஷிகா விளக்கம்!

Published on 04/08/2021 | Edited on 04/08/2021

 

htdhjdth

 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில், நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற கார், நிலை தடுமாறி சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதியதில், அவருடன் காரில் சென்ற அவரது தோழி பவனி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், விபத்திற்குப் பிறகு கண்விழித்த நடிகை யாஷிகா, விபத்தின்போது தான் வாகனம் ஓட்டியது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

"சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். வண்டி ஓட்டும்போது நான் குடித்திருந்ததாகப் புரளிகளைக் கிளப்பும் மலிவான நபர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். நான் குடிக்கவில்லை என்று காவல்துறை உறுதி செய்துள்ளது. அப்படி நான் குடித்திருந்தால், இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருந்திருப்பேன். மருத்துவமனையில் இருந்திருக்க மாட்டேன். போலியான நபர்கள் போலியான செய்திகளைப் பரப்புவது நீண்ட நாட்களாக நடந்துவருகிறது. ஆனால், இது மிகவும் உணர்வுபூர்வமான விஷயம். இதில் நீங்கள் கொஞ்சம் மனிதத்தன்மையையும், இறந்த என் தோழியின்பால் கொஞ்சம் துக்கத்தையும் காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன். மருத்துவர்களின் அறிக்கையும் இதைத்தான் சொல்கிறது. போலியான ஊடகங்கள் அதிகப் பார்வைகளைப் பெறவும், சப்ஸ்க்ரைபர்களைப் பெறவும் இப்படி போலியான செய்திகளைப் பரப்புகிறார்கள். அவர்களெல்லாம் வெட்கித் தலைகுனிய வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதற்காக நான் சிலர் மீது அவதூறு வழக்கு தொடுத்தேன். ஆனால் இதுபோன்ற கிசுகிசு செய்திகள் வேண்டுமென்றால் அந்த நபர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்.

 

kbjvjhvg

 

என் இடுப்பு எலும்பில் பல முறிவுகள் ஏற்பட்டுள்ளன. வலது கால் முறிந்துள்ளது. என் காயங்களுக்கான அறுவை சிகிச்சை முடிந்து நான் ஓய்வில் இருக்கிறேன். அடுத்த ஐந்து மாதங்களுக்கு என்னால் எழுந்து நிற்கவோ நடக்கவோ கூட முடியாது. நாளெல்லாம் படுக்கையில்தான் இருக்கிறேன். அதிலிருந்தபடியேதான் எனது இயற்கை உபாதைகளையும் கழிக்க வேண்டும். என்னால் எந்தப் பக்கமும் திரும்ப முடியவில்லை. இப்படியேதான் பல நாட்களாக விறைப்பாக இருக்கிறேன். என் பின்பகுதி முழுவதும் காயமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக எனது முகத்துக்கு எதுவும் ஆகவில்லை. அதனால், இது கண்டிப்பாக எனக்கு மறுபிறவிதான். ஆனால், இப்படி ஒரு மறுபிறவியை நான் கேட்கவில்லை. உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் காயப்பட்டிருக்கிறேன். கடவுள் என்னைத் தண்டித்திருக்கிறார். நான் இழந்தவற்றைவிட இந்தத் தண்டனை எனக்குப் பெரிய விஷயம் இல்லை" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்