Skip to main content

வாய்ப்பு கேட்ட இளையராஜா; ஆசிர்வதித்த நாகூர் ஹனிபா - எழுத்தாளர் சுரா பகிர்ந்த சுவாரசிய தகவல்

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

writer sura about talk ilaiyaraaja and nagoor hanifa

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில், இசையமைப்பாளர் இளையராஜா நாகூர் ஹனிபாவிடம் வாய்ப்பு கேட்டது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு....

 

“இளையராஜா ஆரம்பக் காலத்தில் இசையமைப்பாளராக வர வேண்டும் என்று பெரும் கஷ்டப்பட்டார். ஆரம்பக்  காலத்தில் திரைப்படங்கள் தவிர மேடை நாடகம் போன்றவற்றிலும் வசித்து வந்தார். அப்படி ஒரு நாள் வாய்ப்பு தேடி பிரபல பாடகர் நாகூர் ஹனிபாவிடம் சென்றுள்ளார். எம்.எல்.ஏ விடுதியில் தங்கி இருக்கும் நாகூர் ஹனிபா அறையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. அதையடுத்து நாகூர் ஹனிபா கதவை திறந்து பார்க்கையில், இளையராஜா மெலிந்த இளைஞர் உடலுடன், கசங்கிய ஆடையுடன், கதவுக்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார். அவரை பார்த்தும், யாருப்பா நீங்க, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அவர், 'நான் ஒரு இசையமைப்பாளர், அதற்காக வாய்ப்புகளைத் தேடி பல முயற்சிகளை எடுத்து வருகிறேன். அதன்படி நீங்கள் பாடும் ஒரு பாடல்களுக்கு நான் இசையமைக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கேட்க', நாகூர் ஹனிபா, நீங்கள் யார் என்று திரும்பவும் கேட்டார். அதற்கு, 'மதுரை மாவட்டத்தில் நிறைய இசைக் கச்சேரி செய்து மிகவும் பிரபலமான பாவலர் வரதராஜனுடைய சகோதரர்தான் நான், என்னுடைய பெயர் ராசய்யா. நாங்கள் 4 பேர் சகோதரர்கள். அனைவரும் ஒன்றாக இணைந்துதான் மேடை நாடகம், இசைக் கச்சேரி, கம்யூனிஸ்ட் கட்சி விழாக்கள் ஆகியவற்றில் வாசித்து வருகிறோம். அந்த வகையில் தான் உங்களிடம் வாய்ப்பு தேடி வந்துள்ளேன்' என்றார்.

 

அதற்கு, ஹனிபா, பொதுவாக என்னுடைய பாடல்களை எச்.எம்.வி நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. அதனால் நீங்கள் போய் அவர்களை பார்த்து பேசிக்கோங்கன்னு சொல்ல, உடனே இளையராஜா நான் அவர்களை சந்தித்து பேசினேன், அதன் பிறகு தான் அவர்கள் உங்களை பார்க்க சொன்னார்கள் என்றார். அப்படியா நல்லது. சரி நீங்க இப்போ போயிட்டு நாளைக்கு காலைல வாங்க, பாடல் எழுதி வைக்கிறேன்" என்று இளையராஜாவை அனுப்பி வைத்துவிட்டார்.

 

மறுநாள் இளையராஜா சொன்னபடியே வந்துவிட்டார். அதே வேளையில் பாடலின் வரிகளும் தயாராக இருந்த நிலையில் வீட்டில் இருந்த ஹார்மோனிய பெட்டியை எடுத்து இளையராஜாவிடம் கொடுத்து வாசிங்க என்றார். உடனே டியூனை இளையராஜா வாசிக்க ’தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு...எங்கள் திரு நபியிடம் போய் சொல்லு...' என்று ஹனிபா பாடி முடித்தார். 

 

அதன் பிறகு ஹனிபா, 'நீங்க வாசிக்கும் போது தென்றல் காற்றே உள்ள வந்தது மாதிரி உணர்ந்தேன்னு சொல்லிட்டு, இளையராஜா  தலையில் கையை வைத்து 'தம்பி திரைத்துறையில் உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு, நீங்க நல்லா வருவீங்க தம்பி' என்று ஆசீர்வதித்தார்”.

 

சார்ந்த செய்திகள்