நடிகர் விக்ரம், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்த பின்பு எந்தப் படத்திலும் நடிக்காமல் தன்னுடைய மகன் துருவ் விக்ரம் நடிக்கும் ஆதித்ய வர்மா படத்தை மேற்பார்வையிட்டு வந்தார். இதனிடையே அவருக்கு வந்த பட வாய்ப்புகள் அனைத்தையும் தள்ளிப்போட்டோ அல்லது தவிர்த்தோ வந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தின் வேலைகள் முடிவடைந்தவுடன் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் 'கோப்ரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடைய நடிப்பிற்குத் தீனி போடும் வகையில் பல வேடங்களில் நடிப்பதாகத் தெரிகிறது. அண்மையில்தான் இந்தப் படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதுமட்டுமல்லாமல் 'பொன்னியின் செல்வன்' படத்திலும் ஆதித்ய கரிகாலனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் விக்ரம்.
இந்நிலையில் சமூகவலைத்தளத்தில் திடீரென, கோப்ரா படத்துடன் விக்ரம் நடிப்பதிலிருந்து ஓய்வுப்பெற போகிறார். தன்னுடைய மகனின் எதிர்காலத்தை முன்னேற்ற அவர் இதுபோன்ற தீர்மானத்திற்கு வந்திருக்கிறார் என்றெல்லாம் தகவல் பரவியது. இதனையடுத்து, இது முற்றிலும் வதந்தி, விக்ரம் அடுத்தடுத்து படங்களில் நடிக்கிறார் என்று விக்ரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.