Skip to main content

படத்துக்கு எப்படி இவ்ளோ மோசமா பேர் வைக்குறீங்க?" - செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

தமிழ் யூ-ட்யூப் சேனல்களில் பிரபலமான ஒரு சேனல் 'டெம்பிள் மங்கீஸ்'. இந்த சேனலின் மூலம் பிரபலமடைந்து, சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் ஷாரா. இவரது நண்பரும் விஜய் டிவியின் புகழ்பெற்ற 'கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தவருமான விஜய் வரதராஜ், 'டெம்பிள் மங்கீஸ்' சேனலை ஷாராவுடன் இணைந்து ஆரம்பித்தவர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம்தான் 'பல்லு படாம பாத்துக்க'.
 

vijay varatharaj

 

 

இது ஒரு அடல்ட் காமெடி ஜாம்பி படம் என்று படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே தெரிவிக்கப்பட்டது. 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் அறிமுகமான தினேஷ் ஹீரோவாக நடிக்க, சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் படத்தின் இயக்குனர் விஜய் வரதராஜ், விஜய் டிவி ஜெகன், ஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் இது.

அண்மையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரும், அதன்பின் படத்தின் டீஸரும் வெளியாகின. இப்படத்தின் டைட்டிலில் தொடங்கி, டீசரும் பலத்த விமர்சனங்களையும் கவனத்தையும் பெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது செய்தியாளர்களில் ஒருவர்,  “எப்படி இவ்வளவு மோசமா ஒரு படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறீர்கள்?” என்று இயக்குனர் விஜய்யிடம் கேட்க, அதற்கு அவர் "இல்லை, இது இந்தப் படத்திற்கு தேவைப்பட்டது. அதனால் வைத்திருக்கிறோம்" என்றார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளாக அடுக்கிக்கொண்டுபோக, படத்தின் ஹீரோ உள்ளே வந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார். அப்போது, "முதலில் நான் படத்தின் தலைப்பை கேட்டவுடன் படம் பண்ண மாட்டேன் என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அதன்பின் வேறு ஒருவர் படம் பண்ணுவதாக சொல்லப்பட்டு, மீண்டும் எனக்கே அந்த வாய்ப்பு வந்தது. படத்தில் பேசப்பட்டிருக்கும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் தலைப்பை வைத்துதான் படம் நகரும் என்பதால் மட்டுமே இந்த தலைப்பை வைத்திருக்கிறோம்” என்றார். இறுதியாக, “ படத்தின் தலைப்பு பலரை காயப்படுத்திருக்கிறது. அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையான கேள்விகள் கேட்கப்பட, அதற்கு பதிலளிக்க வந்த இயக்குனர் முதலில் சற்று திணறி, பின்னர் தினேஷுடன் இணைந்து பதிலளித்தார். இந்த நிகழ்வு சற்று சலசலப்புடனேயே நடந்து முடிந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெற்றிமாறனுடன் மீண்டும் இணைந்த மஞ்சு வாரியர்

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

manju warrier and attakathi dinesh joins viduthalai 2

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'விடுதலை பாகம் 1'. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். காவல்துறைக்கும் போராட்டக் குழுவுக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசியிருந்த இப்படம் தமிழைத் தாண்டி தெலுங்கிலும் வெளியானது. படத்தைப் பார்த்த திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் படக்குழுவினரைப் பாராட்டியிருந்தனர். மேலும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் பாராட்டினர். 

 

இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக சூரி தெரிவித்தார். பின்பு இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. அண்மையில் விடுதலை இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் எனவும் வெற்றிமாறன் செய்தியாளர்கள் முன்பு தெரிவித்திருந்தார். 

 

இந்த நிலையில் தற்போது வெற்றிமாறனுடன் நடிகை மஞ்சு வாரியர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் அட்டகத்தி தினேஷும் இடம்பெற்றிருக்கிறார். இதனால் விடுதலை 2வில் மஞ்சு வாரியர் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் தினேஷும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.   

 


 

Next Story

பா.ரஞ்சித் படத்திற்காக புது கெட்டப்பில் தினேஷ்

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

attakathi Dinesh in new getup for pa.Ranjith movie

 

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலமாகவும் கதைத் தேர்வின் மூலமாகவும் கவனம் ஈர்த்த அட்டகத்தி தினேஷ், கடைசியாக 'பல்லு  படாம பாத்துக்க' படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அதியன் ஆதிரை இயக்கும் 'தண்டகாரண்யம்', அறிமுக இயக்குநர் சுரேஷ் மாரி இயக்கும் 'J.பேபி' மற்றும் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் 'லப்பர் பந்து' உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். 

 

இந்நிலையில் மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் தினேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதற்காக புது கெட்டப்பில் இருக்கும் தினேஷின் புகைப்படம் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. ஆடுகளம், மௌன குரு எனச் சிறிய மற்றும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்த தினேஷ், 'அட்டகத்தி' மூலம் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பா.ரஞ்சித். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற இரண்டு பேருக்கும் நல்ல பெயரைப் பெற்றுக் கொடுத்தது. 

 

இதன் தொடர்ச்சியாக பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'கபாலி' படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். பின்பு மீண்டும் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக சொல்லப்படும் நிலையில் தினேஷின் கெட்டப் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.