Skip to main content

விதார்த் - லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி இணையும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

vfgehshds

 

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. விஜய ராகவேந்திரா ‘கொரில்லா’, ‘மசாலா படம்’, அருண் விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘பார்டர்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். அந்த வரிசையில் இவர் தற்போது விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் நடிப்பில் தனது  அடுத்த தயாரிப்பாக  'புரொடக்ஷன் 6' படத்தைத் தயாரிக்கிறார். இதில் நடிகர் சரித்திரன், பிரேம், சௌமியா, கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனை ‘உறுமீன்’ படப்புகழ் இயக்குநர் சக்திவேல் பெரியசாமி எழுதி இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது எளிமையான பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் சக்திவேல் பெரியசாமி பேசியபோது...

 

"ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் சிந்தனையைத் தூண்டும் வகையில் உருவாகும் படைப்பு இது. தற்காலத்தின் பிரச்சனைகளைச் சுற்றி நடக்கும் கதையென்பதால் ரசிகர்கள் எளிதாக உணரும் வகையில் தங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும்படி இப்படம் இருக்கும். இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தபோது, மக்களைக் கவரும் பிரபல நடிகர் இக்கதைக்குத் தேவைப்பட்டார். கமர்சியல் சினிமாவையும் கருத்து மிகுந்த படங்களையும் இணைக்க ஒரு பாலமாக இருக்கும் நடிகரும் தேவைப்பட்டது. அந்த வகையில் பார்க்கும்போது, முதலில் மனதுக்கு வந்தவர் நடிகர் விதார்த் மட்டும்தான். எனக்கு நிச்சயமாக தெரியும் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தைப் பெற்றுத் தரும். லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பை பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தான் ஏற்கும் பாத்திரங்களில், எந்த ஒரு பெரிய மெனக்கெடலும் இல்லாமல் வலிமையான காட்சிகளில் கூட மிகவும் சுலபமாக நடிக்கக் கூடிய நடிகை. 

 

இந்தப் படம் அவருடைய திரை வாழ்க்கையில்  சிறந்த படமாக அமையும். கருணாகரன் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பை உள்வாங்கி சிறப்பாக நடிக்கும் ஒரு நடிகர். அவரது நடிப்புத் திறனை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நிரூபித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் திரைக்கதைக்குப் பெரிய அளவில் வலு சேர்க்கும் வண்ணம் மிக ஆழமாக அமைந்துள்ளது. ‘டெடி’, ‘90 எம்.எல்’ படங்களில் நடித்துள்ள நடிகை மசூம் ஷங்கர், இந்தப் படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சரித்திரன் தமிழகத்தின் பெரும்பான்மை வீடுகளில் நகைச்சுவை நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர், ரேடியோ, தொலைகாட்சி, இணையதளம் வழியாக மக்களை மகிழ்வித்து வருபவர். அவர் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது

 

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. விஜய ராகவேந்திரா கூறும்போது... "எங்களது தயாரிப்பில், அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பார்டர்’ திரைப்படம், விரைவில் உலகளவில் தியேட்டர் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இந்தக் காலகட்டதில், இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது, எனக்கும் மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. உடனடியாக இப்படத்தைத் தயாரிப்பதென்று முடிவெடுத்துவிட்டேன். அது மட்டுமல்லாது எனது நண்பர் சக்திவேல் அவருக்காகவும் இதை தயாரிக்க வேண்டும் என உறுதியாய் இருந்தேன். இந்தப் படத்திற்காக சிறந்த குழு அமைந்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படம் அமைவதற்கு காரணமாகவும், எந்தவித தடையுமில்லாமல் இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு உதவியாகவும் இருந்த செந்தில் அவர்களுக்கு, இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆல் இன் பிக்சர்ஸ்க்கு இது ஒரு பிரத்யேகமான படம். படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. குறுகிய காலத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படத்தை 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்