Skip to main content

என்.ஐ.ஏ-வால் சம்மன்; வரலட்சுமி விளக்கம்

Published on 29/08/2023 | Edited on 29/08/2023

 

varalakshmi ani summon issue

 

போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாகத் தேசியப் புலனாய்வு முகமை எனப்படும் என்.ஐ.ஏ, நாடு முழுவதும் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மற்றும் ஏகே 47 துப்பாக்கிகள் கடத்தப்பட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த வழக்கில் தொடர்ந்து என்.ஐ.ஏ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை மொத்தமாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் 10 பேர் இலங்கைத் தமிழர்கள் என்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜேஷ் ஹலீம் என்ற நபரின் உதவியுடன் இவை கடத்தப்படுவதாகத் தகவல்கள் வெளியானது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 14வது நபராக இந்த வழக்கில் ஆதிலிங்கம் என்ற நபர் கைது செய்யப்பட்டார். கடந்த வெள்ளிக்கிழமை என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம் நடிகை வரலட்சுமிக்கு உதவியாளராக பணியாற்றியது தெரியவந்துள்ளது.

 

போதைப்பொருள் மற்றும் ஆயுதம் கடத்தல் வழியாக வந்த பணத்தின் மூலம் சினிமாவில் பலருக்கும் ஆதிலிங்கம் பைனான்ஸ் உதவி செய்திருப்பதும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 'டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா' என்ற அரசியல் கட்சியில் தேசிய துணைத் தலைவராகவும் இவர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. 

 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நடிகை வரலட்சுமிக்கு ஏதேனும் தகவல்கள் தெரியுமா என்ற அடிப்படையில் விசாரிக்கவும், எந்த அடிப்படையில் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்தார் என்பது பற்றி தெரிந்து கொள்ளவும் நடிகை வரலட்சுமியிடம் விசாரிக்க திட்டமிட்டு என்.ஐ.ஏ, சம்மன் அனுப்பியுள்ளனர். தற்பொழுது ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்காக ஆஜராக இயலாது என அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. 

 

இந்நிலையில் வரலட்சுமி தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அறிக்கையில், "ஆதிலிங்கம் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ.வினால் எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட அனைத்து செய்திகளும் தவறானவை மற்றும் வெறும் வதந்திகள். அப்படி எந்த சம்மனும் எனக்கு அனுப்பப்படவில்லை.

 

ஆதிலிங்கம் 3 வருடங்களுக்கு முன்பு என்னுடன் ஃப்ரீலான்ஸ் மேலாளராக ஒரு குறுகிய காலம் மட்டுமே பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் நான் பல ஃப்ரீலான்ஸ் மேலாளர்களுடன் ஒரே நேரத்தில் பணிபுரிந்தேன். அவரது பதவிக் காலத்துக்குப் பிறகு இன்றுவரை எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வரலக்‌ஷ்மி சரத்குமார்  போலீஸாக களம் இறங்கும்  'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்'

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Varalaxmi Sarathkumar Crime thrill movie

 

ஆஹா தமிழ் ஒரிஜினல் வழங்கும் இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கத்தில் வரலக்‌ஷ்மி சரத்குமார் நடித்திருக்கும் க்ரைம்-த்ரில்லர் படத்திற்கு 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

 

கதையம்சம் சார்ந்த நல்ல திரைப்படங்கள் விமர்சகர்கள், சினிமா பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பிடமும் நல்ல வரவேற்பைப் பெறும். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களில்  ஒருவரான இயக்குநர் தயாள் பத்மநாபன் படங்களில் சிறந்த பரிமாணங்களைக் கொடுத்துள்ளார்.  சமீபத்தில் வெளியான ‘கொன்றால் பாவம்’ திரைப்படம் சினிமா பிரியர்களின் கவனத்தைக் கவர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, தனது அடுத்த இயக்கமாக வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஆரவ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும்  படப்பிடிப்பை இப்போது முடித்துள்ளார். இந்தப் படத்தை தயாள் பத்மநாபனே தயாரிக்கவும் செய்கிறார். படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்த நிலையில், தற்போது படத்திற்கு 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

 

இந்த தலைப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்தப் படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான தயாள் பத்மநாபன் கூறுகையில், “அடிப்படையில், நான் ஹனுமானின் தீவிரமான பக்தர் மற்றும் அவரது இருப்பை உள்ளடக்கிய சில தலைப்புகளை என்னுடைய படங்களுக்கு வைக்க விரும்பினேன். இந்தப்படம் பல சாதக பாதகங்களைக் கொண்ட காவல் நிலையத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களைக் கதையாகக் கொண்டது. உண்மையான ஸ்டேஷன் பெயர்கள் மற்றும் பகுதிகளை நாங்கள் இதில் படமாக்க விரும்பவில்லை. அதனால், 'மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்' என்று கற்பனையான பெயரைக் கொண்டு வர முடிவு செய்தோம். தற்போது படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டோம். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது." என்றார்.

 

வரலக்‌ஷ்மி சரத்குமார்&ஆரவ் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நான்-லீனியர் பாணியில் புதிய பரிமாணத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் முக்கிய வேடங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

 

 

Next Story

பேராசை என்ன செய்யும்? - 'கொன்றால் பாவம்' விமர்சனம்!

Published on 15/03/2023 | Edited on 15/03/2023

 

 kondraal paavam review

 

தமிழ் சினிமாவில் அவ்வப்போது கதைக்கு மட்டும் முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாகி அதில் சில வரவேற்பும் பல சொதப்பலும் நடக்கும். அந்த வரிசையில் எப்பொழுதும் விஜய் சேதுபதி போல் பல்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களை தைரியமாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியாக இருக்கும் கொன்றால் பாவம் திரைப்படம் சொதப்பியதா? இல்லை வரவேற்பை பெற்றதா?

 

1980களில் உள்ள ஒரு சிறிய கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் வரலட்சுமி சரத்குமார், சார்லி, ஈஸ்வரி ராவ் ஆகியோரின் ஏழ்மையான குடும்பம் வசித்து வருகிறது. அந்த ஊரில் வழிப்போக்கனாக வரும் சந்தோஷ் பிரதாப் ஓர் இரவு மட்டும் தங்கிக்கொள்ள இவர்கள் குடும்பத்திடம் அனுமதி கேட்கிறார். அவர்களும் சம்மதிக்க, சந்தோஷ் பிரதாப் அந்த வீட்டில் தங்குகிறார். முதிர்கன்னியாக இருக்கும் வரலட்சுமி, மிகவும் ஏழ்மையில் தவிக்கும் சார்லியின் குடும்பம் என இவர்களின் நிலைமையை பார்த்து பரிதாபப்பட்ட சந்தோஷ் பிரதாப் தான் கொண்டு வந்த பணம், நகைகளை கொடுத்து உதவி செய்ய நினைக்கிறார்.

 

முதலில் இந்த உதவியை மறுத்துவிடும் சார்லியின் குடும்பம், பின்னர் வரலட்சுமி சரத்குமாரோடு சேர்ந்து கொண்டு சந்தோஷ் பிரதாப்பை கொலை செய்துவிட்டு அந்த நகை, பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். இதை அடுத்து வரலட்சுமி குடும்பத்தின் கொலை, கொள்ளை திட்டம் நிறைவேறியதா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

 

படத்தின் கதையாக பார்க்கும் பொழுது மிக எளிமையான கதையாக இருந்தாலும் ஒரு நாவலை படிக்கும் பொழுது நமக்கு எந்த அளவு சுவாரசியம் ஏற்படுமோ அதுபோல் ஒவ்வொரு ஸ்டெப் பை ஸ்டெப்பாக கதையை நகர்த்தி கிரிப்பிங்கான திரைக்கதையோடு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் தயாளன் பத்மநாபன். 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியான ஒரு நாடகத்தை மையமாக வைத்து கன்னடத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு 'ஆ காரல ராத்திரி', பின்னர் 2020ஆம் ஆண்டு தெலுங்கில் 'அனகனகா ஓ அதிதி' என்று அதே படத்தை ரீமேக் செய்து வெற்றி கண்ட இயக்குநர் தற்போது இதே படத்தை தமிழிலும் கொடுத்து பாஸ் மார்க் வாங்கியுள்ளார். இருந்தும் முதல் பாதி சற்றே மெதுவாக நடந்து நம்மை சோதித்தாலும் இரண்டாம் பாதி அதை சரிகட்டி பார்ப்பவர்களை சீட்டின் நுனிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

 

முதிர்கன்னியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார் அந்த கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதை மீண்டும் ஒருமுறை சிறப்பாக செய்து கவனிக்க வைத்துள்ளார். இவரது வெர்சடைலான நடிப்பும், சின்ன சின்ன முகபாவனைகளும் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஓரக்கண்ணில் சைட் அடிப்பதில் இருந்து ஆரம்பமாகி, பின்னர் கொலைகாரியாக மாறும் வரை ஒவ்வொரு அத்தியாயத்தையும் அழகாக கடந்து, தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.

 

வளர்ந்து வரும் நடிகர் சந்தோஷ் பிரதாப் சொல்லிக் கொள்ளும்படி சிறப்பாக நடித்து கவனம் பெற்றுள்ளார். இவரது எதார்த்தமான நடிப்பு கதைக்கு நன்றாக உதவியுள்ளது. மிகவும் கவனிக்கத்தக்க வகையில் குருடனாக நடித்திருக்கும் சென்ராயன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மூத்த நடிகர் சார்லி எப்பொழுதும் போல் தனது அனுபவ நடிப்பால் கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் உயிரூட்டி உள்ளார். வழக்கம்போல் தனது டிரேட் மார்க் எதார்த்தமான நடிப்பை இப்படத்திலும் வெளிப்படுத்தி காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் வலுவை சேர்த்து படத்திற்கும் பக்கபலமாக அமைந்துள்ளார் ஈஸ்வரி ராவ். ஒரு திரில்லர் படத்திற்கு என்ன தேவையோ அதை சிறப்பாக செய்திருக்கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இன்னபிற இதர நடிகர்களும் அவரவருக்கான வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர்.

 

டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இரவுநேரக் காட்சிகளை மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்து படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். குறிப்பாக இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வழக்கம்போல் இரைச்சலான பின்னணி இசை மூலம் சற்றே படத்தை திரும்பிப் பார்க்க வைக்க முயற்சித்துள்ளார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசையை இன்னும் கூட சிறப்பாக செய்து இருக்கலாம். எங்கெல்லாம் அமைதி தேவையோ அங்கு கூட மிகவும் இரைச்சலான கத்தக்கூடிய இசையை திரும்பத் திரும்ப அனைத்து படங்களிலும் கொடுப்பதுபோல் ஒரே மாதிரி கொடுத்து வரும் சாம் சி.எஸ். தனது பின்னணி இசை டெக்னிக்கை இன்னும் கூட மறுபரிசீலனை செய்யலாம்.

 

முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி பரபரப்புடன் நகர்ந்து அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி நாம் சற்றும் எதிர்பாராத அளவிற்கு மிகவும் அதிரடியாக அமைந்து அதுவே இப்படத்தை தாங்கிப் பிடித்து கரை சேர்த்திருக்கிறது.

 

கொன்றால் பாவம் - பேராசை பெருநஷ்டம்!