Skip to main content

"சிம்புவிற்கு ரெட் கார்டு போட முதல்வர் ஸ்டாலின் துணை போகமாட்டார்..." சிம்புவின் அம்மா வெளியிட்ட அதிரடி வீடியோ!

Published on 13/08/2021 | Edited on 13/08/2021

 

usha rajendar

 

நடிகர் சிம்பு விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மளேனத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்புவின் கடந்தகால செயல்பாடு காரணமாக நான்கு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த விவகாரங்களுக்கு தீர்வு எட்டப்படும்வரை சிம்புவின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள் பணியாற்றக்கூடாது என்றும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மளேனத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்பதாக முதலில் பெப்சி அமைப்பு கூறிய நிலையில், திருச்செந்தூரில் நடைபெற்றுவரும் கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். இது இரு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடை ஏற்படுத்தியுள்ளது. அதன் உச்சகட்டமாக பெப்சி அமைப்போடு முன்னர் செய்துகொண்ட ஒப்பந்தம் இனி தங்களைக் கட்டுப்படுத்தாது என தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர செயற்குழு கூடி முடிவெடுத்துள்ளது. இதையடுத்து, வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் கலந்து கொண்டது ஏன் என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

 

இரு தரப்பும் மாறிமாறி அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்திரன் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தக் காணொளியில், "'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை முழுமையாக முடித்து கொடுத்துவிட்டார் சிலம்பரசன். சம்பள பாக்கி இருந்தபோதும் சிலம்பரசன் டப்பிங்கும் பேசிக்கொடுத்தார். அவருக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை பட வெளியீட்டுக்கு முன்பு கொடுப்பதாகக் கூறிய மைக்கேல் ராயப்பன், பேசியபடி பணத்தைக் கொடுக்கவில்லை. எனது மீதி சம்பளத்தைக் கொடுத்துவிட்டுத்தான் படத்தை வெளியிட வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் சிலம்பரசன் புகார் அளித்தார். பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிலம்பரசனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை விட்டுக்கொடுத்தால் மட்டுமே, படம் நாளை வெளியாகும் என மைக்கேல் ராயப்பன் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக சிலம்பரசனிடம் கேட்டபோது  பணமே வரவிட்டாலும் பரவாயில்லை, படத்தைத் தயாரிப்பாளர் வெளியிடட்டும் என்று சொல்லிவிட்டார். இந்த பணம் தவிர்த்து, முன்னதாக சிலம்பரசனுக்குக் கொடுத்த பணத்துக்கு மைக்கேல் ராயப்பன் ஜிஎஸ்டி கட்டவில்லை. டிடிஎஸ் பிடித்த தொகையையும் கட்டவில்லை. முதலில் கொடுத்த செக்கும் பணமில்லாமல் திரும்பிவிட்டது. இப்படி எந்தவிதத்திலுமே மைக்கேல் ராயப்பன் சிம்புவிற்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பணத்தையும் விட்டுக்கொடுத்து, படத்தையும் வெளியிட்ட பிறகு மீண்டும் ஒரு பஞ்சாயத்து வைத்தார். அதாவது சம்பளமே வாங்காமல் சிலம்பரசன் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விஷால் ஒரு தீர்மானம் போடுகிறார். மைக்கேல் ராயப்பனுக்கு சம்பளமே இல்லாமல் சிலம்பரசன் ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒவ்வொரு படத்துக்கும் 2 கோடியே 40 லட்ச ரூபாய் கப்பம் கட்டவேண்டும் என்று எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் போடுகிறார்.

 

சிலம்பரசன் ஒப்புதல் இல்லாமல் தீர்மானம் கொண்டு வருவதற்கு இவர் என்ன உச்சநீதிமன்ற நீதிபதியா?. தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் கொண்டு வந்த தீர்மானத்துக்கு மேல்முறையீடே கிடையாது. எங்களைக் கப்பம் கட்டச் சொல்வதற்கு விஷால் யார்?. தயாரிப்பாளர் சங்கத்தின் ட்ரஸ்ட்டில் இருந்த 7 கோடி ரூபாய் பணத்தையும், உறுப்பினர்கள் பணமான 7 கோடியையும் பலவிதத்தில் விரயம் செய்து காலி செய்துவிட்டார். இந்த 14 கோடி ரூபாயை என்ன செய்தீர்கள் என்று பொதுக்குழுவில் கேட்டபோது, பதில் சொல்ல முடியாமல் ஜனகன மண பாடிவிட்டு விஷால் ஓடிவிட்டார். நாங்கள் வெற்றி பெற்றால் 14 கோடி ரூபாயை பெற்றுத் தருவோம் என்று சொல்லி ஜெயித்தவர்கள் விஷாலை எதுவும் கேட்காமல், அவர் போட்ட தீர்மானத்தை வைத்துக் கொண்டு சிலம்பரசனுக்கு ரெட் கார்டு போடுகிறார்கள். இதை என்னவென்று சொல்வது.

 

'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் வெளியான பிறகு தயாரிப்பாளர் அனைத்து பத்திரிகைகளிலும் சிலம்பரசனைப் பற்றி எவ்வளவு தவறாக சொல்ல முடியுமோ சொல்லிவிட்டார். ஒரு நடிகரை இந்தளவுக்கு ஒரு தயாரிப்பாளர் தவறாக பேசவே முடியாது. இதனைத்தொடர்ந்து மைக்கேல் ராயப்பன் மீது சிலம்பரசன் 1 கோடி ரூபாய்க்கு மானநஷ்ட வழக்குப் போட்டுள்ளார். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது, இவர்கள் எப்படி கட்டப் பஞ்சாயத்து செய்ய முடியும்? நாங்கள் சிலம்பரசனின் படத்துக்கு எந்தவித இடையூறும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் சொல்லியிருக்கிறார்கள். தற்போது ஆகஸ்ட் 6ஆம் தேதி 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பு தொடங்க விடமாட்டோம் என்று சொன்னார்கள். இந்த பஞ்சாயத்தைப் பேசி தீர்க்காமல் சிலம்பரசன் படப்பிடிப்புக்குப் போக முடியாது என்றார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இவர்கள் என்ன செய்துவிடுவார்கள் என்று பஞ்சாயத்து பேச வரச் சொன்னதுக்காக சென்றேன். நீதிமன்றத்தில் உள்ள மைக்கேல் ராயப்பன் விஷயத்தை எடுத்து வைத்து பேசுகிறார்கள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. நீதிமன்றத்தில் இருக்கும் விஷயத்தை எடுத்துப் பேசுவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது. ஒவ்வொரு சிலம்பரசன் படத்துக்குப் பிரச்சினை. 'வெந்து தணிந்தது காடு' படத்தையும் அவ்வளவு கஷ்டப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியிருக்கிறோம்.

 

ஒரு நடிகருக்கும், தயாரிப்பாளருக்கும் பிரச்சினை இருக்கும் போது பஞ்சாயத்து கூட்டப்படுகிறது. அதற்கு செல்வமணி சார் ஏன் வந்தார் என்று புரியவில்லை. பெப்சியில் ஏதேனும் பிரச்சினை என்றால் செல்வமணி சார் வருவது நியாயம். அவரே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்னை அடியாள் மாதிரி பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஒரு வேளை பஞ்சாயத்து பேசி தீர்க்கப்படவில்லை என்றால், படத்துக்கு பெப்சி ஆட்களை அனுப்பக் கூடாது என்று சொல்வதற்காக அவரை வர வைத்துள்ளார்கள். தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் என்று தொடங்கியதே இவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்துகொண்டே இருப்பதால்தான். தயாரிப்பாளர்களுக்கு நன்மை செய்வதற்காக மட்டுமே இதை உருவாக்கினோம். என்ன தைரியத்தில் செய்கிறார்கள் என்று கேட்டால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் எங்களுடைய பாக்கெட்டில் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால், இப்படியொரு விஷயத்துக்கு முதல்வர் ஸ்டாலின் துணைபோகமாட்டார் என்று சொல்வேன். ஏனென்றால், திமுக கட்சிக்காக என்னுடைய கணவர் எப்படியெல்லாம் பாடுபட்டு இருக்கிறார் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

 

திமுக கட்சிக்காக பல்வேறு மேடைகளில் என் கணவர் பேசியிருக்கிறார். காலை 5 மணி வரை எல்லாம் பேசுவார். ஒரு கட்டத்தில் தொண்டையிலிருந்து ரத்தமாக வரும். அதெல்லாம் பொருட்படுத்தாமல் போய் பேசுபவர் என் கணவர். அதிமுக ஆட்சியில் கருணாநிதி ஐயாவை கைது செய்தார்கள். அப்போது நான் போய் ஜெயிலை உடைத்து அவரை கூட்டுட்டு வருவேன் என்று சென்றவர் என் கணவர். அந்த அளவுக்கு திமுக கட்சிக்காக பாடுபட்டுள்ளார். திமுக கட்சிக்காக எந்தவொரு பிரதிபலனும் பாராமல் கடுமையாக உழைத்துள்ளோம். ஒரு காலமும் சிலம்பரசனின் படத்தை நிறுத்தவதற்கோ, ரெட் போடுவதற்கோ முதல்வர் ஸ்டாலின் துணையாக இருக்கமாட்டார். ஆனால், அவருடைய பெயரைத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தவறாக பயன்படுத்துகிறார்கள். இது தொடர்ந்தால் முதல்வர் ஸ்டாலினை சந்திப்பேன், பாரத பிரதமர் மோடி ஐயாவையும் போய் சந்திப்பேன்" என அதிரடியாகப் பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்