Skip to main content

“கடையேழு வள்ளல், மாமனிதன், கர்ணன்” - சூரி அஞ்சலி

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
soori tribute to vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் சூரி, “கடையேழு வள்ளல்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் கேப்டன் விஜயகாந்தை பார்த்திருக்கிறோம். மாமனிதன், உதவின்னு யார் கேட்டாலும் வாரி வழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எளியவர்கள் எல்லாருக்கும் பசி போக்கும் அன்ன சத்திரமா இருந்துச்சு. தமிழ் கூறும் நல்லுலகம் இருக்கும் வரை விஜயகாந்த் சாரின் புகழ் இருக்கும். கேப்டனின் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ரசிகர்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

சசிகுமார், “மாமனிதரை இழந்துவிட்டோம் கேப்டன் மக்கள் மனதில் என்றும் நிற்பார்” எனப் பதிவிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“மேக்கிங் தேவையில்லை; எமோஷனே போதும்” - வெற்றி குறித்து சூரி    

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
soori speech at samuthirakani Ramam Raghavam Teaser launch

சமுத்திரகனி, தனராஜ் கொரனானி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராமம் ராகவம். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ் தயாரிப்பில் தனராஜ் கொரனானியே இப்படத்தை இயக்கியும் உள்ளார். அருண் சிலுவேரு இப்படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் டீசர் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடந்த டீசர் விழாவில், படக்குழுவினரோடு பாலா, சூரி, பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

அப்போது சூரி பேசுகையில், “வெண்ணிலா கபடி குழு படத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது என்னுடைய கேரக்டரில் நடித்து, இங்கு என்னைவிட அங்கு அதிக வரவேற்பை பெற்றவர் தனராஜ். அப்போது முதல் என்னுடைய படங்கள் வெளியாகும் போதெல்லாம் எனக்கு ஃபோனில் பண்ணி பேசுவார். நிமிர்ந்து நில் படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது கூட நிறைய பேசுவோம். நான் பேசுவது அவருக்கு புரியாது, அவர் பேசுவது எனக்கு புரியாது. விடுதலை பார்த்துவிட்டு அரை மணிநேரம் பேசினார். டைரக்டர் எல்லாம் நடிகராக மாறிவரும் காலத்தில் ஒரு காமெடி ஆக்டர் டைரக்டராகி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள்.  

காமெடி நடிகரா ஒரு கூடுதல் நன்மை என்னவென்றால், ஹீரோவை விட அதிக படங்களில் நடித்திருப்போம். அதனால் நிறைய டைரக்டர்களுடன் வேலை பார்த்திருப்போம். அவர்களிடமிருந்து எதாவது ஒன்று தனராஜ் கத்துக்கிட்டு இருப்பார். அதை எல்லாமே இந்த படத்தில் பதிவு செய்திருப்பார் என நம்புறேன். பொதுவாக அப்பா மகன் கதையென்றால், மேக்கிங் பெரிதாக தேவையில்லை. இருவருக்கும் இடையிலான எமோஷன்களை சரியாக பதிவு செய்தால் போதும். அப்படி பதிவு செய்த படங்கள் தோற்றதில்லை. உதாரணத்திற்கு அப்பா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாரடி நீ மோகினி, முத்துக்கு முத்தாக, பாண்டிய நாடு என சொல்லிக்கொண்டே போகலாம். அதனால் இந்த படத்திலும் அப்பா மகன் எமோஷனை நன்றாக காட்டியிருப்பது போல் தெரிகிறது. அதனால் இந்த படமும் தோற்காது. சமுத்திரக்கனியை உண்மையான ஹீரோ என அவரிடம் பழகும் நிறைய பேர் சொல்வார்கள். அந்த வகையில் எனக்கும் அவர் ஹீரோ மாதிரி தான். எப்போதுமே பாசிட்டிவாக இருப்பார்” என்றார். 

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.