Skip to main content

தமிழர்கள் ஏன் இந்தி பேச வேண்டும்? பிரபல பாடகர் கேள்வி

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Sonu Nigam says Hindi not national language Tamil world's oldest language

 

இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என்று சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளானதோடு அமித்ஷாவின் பேச்சிற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ஏ.ஆர் ரஹ்மான் ழகரம் தாங்கிய தமிழ் அன்னையின் புகைப்படத்தை பகிர்ந்தார். ஏ.ஆர் ரஹ்மானை தொடர்ந்து இந்தி மொழிக்கு எதிராக கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு பட விழாவில் 'இந்தி தேசிய மொழி இல்லை' என பேசியிருந்தார். 

 

இதனையடுத்து இந்திதான் நமது தேசிய மொழி என்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதிவிட்டு மீண்டும் பரபரப்பைக் கிளப்பினார். இவரின் பதிவுக்கு பதிலளித்த நெட்டிசன்கள் இந்தியாவிற்கு தேசிய மொழி என்ற ஒன்றே கிடையாது என்று கூறி வறுத்தெடுத்தனர். இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற நடிகை கங்கண ரனாவத் இந்தி, ஆங்கிலம், ஜெர்மனி உள்ளிட்ட மொழிகள் சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது. அதனால் சமஸ்கிருதம் தான் தேசிய மொழி எனக் பேசினார். இதையடுத்து அஜய் தேவ்கனின் லிஸ்டில் கங்கனாவையும் சேர்த்த இணையவாசிகள் பாரபட்சமின்றி வறுத்தெடுத்தனர். 

 

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பதிலளித்த பிரபல பாடகர் சோனு நிகம், "இந்திய அரசியல் அமைப்பில் இந்தி ஒரு தேசிய மொழி என்று எங்கும் குறிப்பிடவில்லை. இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்திதான். ஆனால் உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்று சொல்லப்படுகிறது. நீங்கள் தமிழர், ஆனால் நீங்கள் இந்தி பேச வேண்டும் என்று அவர்கள் மீது திணிக்கப்படுவது நாட்டின் நல்லிணக்கம் சீரழிக்கப்படுகிறது. அவர்கள் ஏன் இந்தி பேச வேண்டும்? எந்த மொழி பேச வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு இருக்க வேண்டும். ஒரு பஞ்சாபி பஞ்சாபியில் பேசட்டும், தமிழர் தமிழில் பேசட்டும். அவர்களுக்கு இடையில் பேச ஆங்கிலம் வசதியாக இருந்தால் ஆங்கிலத்தில் பேசட்டும். நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் கூட ஆங்கிலத்தில் தான் தீர்ப்பு வழங்குகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்