Skip to main content

"அட்டகாசமான விஜய் சேதுபதி; மரண மாஸ் அட்லீ" - தமிழில் பேசி அசத்திய ஷாருக்கான்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

sharukhan speech at jawan event

 

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜவான்'. முக்கியக் கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் வருகிற செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி சென்னையில் ஒரு முன்னோட்ட நிகழ்வு நடந்தது. இதில் ஷாருக்கான், அட்லீ, ப்ரியாமணி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர். கமல்ஹாசன் வீடியோ கால் மூலம் வந்து படக்குழுவினரை வாழ்த்தினார். 

 

பின்பு ஷாருக்கான் பேசுகையில், ஆங்கிலத்தில் பேசிய அவர், "அட்லீ என்னிடம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும் என சொன்னார். நான் இதுவரை இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் என் வாழ்க்கையில் கலந்து கொண்டதில்லை. தமிழ் திரையுலகில் சிறந்த படங்கள் வருவதை நான் முன்னதாக அறிந்து கொண்டேன். என்னுடைய முதல் தமிழ் பட அனுபவம் 'உயிரே' படத்தில் நடந்தது. அதன் பின்பு அற்புதமான மனிதர் கமல்ஹாசன் இயக்கிய 'ஹே ராம்'. அந்த படத்தில் தமிழில் ஒரு வசனம் பேசியிருக்கேன். அதுதான் முதலும் கடைசியுமாக நான் தமிழில் பேசியது. அதன் பிறகு 'ரா.1' படத்தில் ஒரு ஷாட்டிற்காக ரஜினி சாரை பார்த்தேன்" என்றார். பின்பு படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என பலருக்கும் நன்றி தெரிவித்தார். அவர்களுடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து பகிர்ந்தார். 

 

தொடர்ந்து பேசிய அவர், "அட்லீயை தமிழில் புகழ வேண்டும் என்றால் மரண மாஸ். ஒளிப்பதிவாளர் விஷ்ணு, ஒளிமயமானவர். தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் கம்பீரமானவர். படத்தொகுப்பாளர் ரூபன் விறுவிறுப்பானவர். விஜய் சேதுபதி அட்டகாசமானவர். அவரிடம் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இந்த படத்தில் பணிபுரிந்த தமிழ் கலைஞர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். கற்றுக்கொண்டதை தமிழ் மக்கள் முன்னால் காட்டியுள்ளேன். படத்தை பார்த்து நான் தமிழ் கலைஞர்களிடம் எவ்வளவு கற்றுக்கொண்டேன் என்பதை சொல்லுங்கள். அனிருத் வித்தைக்காரன். அவர் என் மகன் போன்றவர். 

 

நடன அமைப்பாளர் ஷோபி, என்னை பயங்கரமாக நடனமாட வைத்துள்ளார். அவரிடம் நான் சொன்னேன்... என்னால் ரஜினி சார், விஜய் சார் போல் நடனமாட முடியாது என்று. சோபிக்கு எனது நன்றி. அவர் ஆட்டம் போடுபவர். ஸ்டண்ட் இயக்குநர்கள் அனல் மற்றும் அரசு, அவர்கள் நெருப்பானவர்கள். யோகிபாபு கலகலப்பானவர். நயன்தாரா வசீகரமானவர்" என்றார்.  

 


 

சார்ந்த செய்திகள்