Skip to main content

“கலைஞருடைய விசுவாசி” - விஜயகாந்த் குறித்து செந்தில்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
senthil about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் நடிகர் செந்தில் கண்ணீர் மல்க ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசுகையில், “எந்த செய்தி கேட்கக்கூடாதோ அந்த செய்தியை கேள்விப்பட்டேன். மனசே இல்லை. விஜயகாந்த் நல்ல நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதர். அவருடன் நிறைய படங்கள் நடிச்சிருக்கேன். இனிமையாக பழகக்கூடியவர். என்கிட்ட மட்டமில்லை டெக்னீஷியன் முதற்கொண்டு எல்லாரிடமும் பழகுவார். சாப்பிடும்போது கூட சமத்துவமாக எல்லாரையும் பார்ப்பார். அவர் இருக்கும்போது நடிகர் சங்க கடன் அவ்ளோ இருந்தது, அதை அடைத்தார். அதன் பிறகு கலைஞருக்கு தங்க பேனா, பெரிய விழா நடத்தினார். அவர் கலைஞருடைய விசுவாசி. பல நன்மைகள் எல்லாருக்கும் செய்திருக்கார். வேலை செய்பவர்கள் கூட விஜயகாந்த் படம் என்றால் குஷியாக இருப்பார்கள். அவரைப் பிரிந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

சார்ந்த செய்திகள்