Skip to main content

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - ராஷ்மிகா விளக்கம்

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

rashmika mandana reacts aishwarya rajesh speech

 

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'ஃபர்ஹானா' படம் கடந்த 12 ஆம் தேதி வெளியானது. இப்படத்தை எஸ்.ஆர்.பிரபு தயாரித்த நிலையில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. திரைபிரபலங்கள் செல்வராகவன், கார்த்தி உள்ளிட்ட பலர் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

 

இப்படத்தின் ப்ரொமோஷனுக்காக ஒரு நேர்காணலில் தெலுங்கு சினிமா குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியிருந்தார். அதில், "எனக்கு தெலுங்கு திரையுலகம் பிடிக்கும். ஆனால் மீண்டும் ஒரு நல்ல தெலுங்கு படத்தில் நடிக்க விரும்புகிறேன். புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அந்த வாய்ப்பு எனக்கு வந்திருந்தால் கண்டிப்பாக நான் நடித்திருப்பேன். ராஷ்மிகா ஸ்ரீவள்ளியாக நன்றாக நடித்திருந்தார். ஆனால் நான் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமாக இருப்பேன் என நம்புகிறேன்" என்றார். 

 

இதையடுத்து ராஷ்மிகாவை விட நான் நன்றாக நடிப்பேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாயின. இதனால் சமூக வலைத்தளங்களில் சர்ச்சை உருவான நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டார். அதில், "ஒரு உதாரணத்திற்கு புஷ்பாவில் வரும் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும் என பதிலளித்தேன். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. புஷ்பா படத்தில் நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின் கடின உழைப்பை நான் ஒரு போதும் குறை கூறவில்லை. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்." எனக் குறிப்பிடப்பட்டது. 

 

இந்நிலையில் ராஷ்மிகா இந்த சர்ச்சை குறித்து தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில், "ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்லியிருப்பதை நான் நன்றாகப் புரிந்து கொண்டேன். நம்மை பற்றி விளக்குவதற்கு எந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. உங்கள் மீது அன்பும் மரியாதையும் இருக்கிறது. ஃபர்ஹானா படத்திற்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்