சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்'. இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிக்கின்றனர். முன்னணி பிரபலங்கள் ஒன்றாக நடித்துள்ளதால், படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. வருகிற 10 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் சிறப்பு மற்றும் அதிகாலைக் காட்சி திரையிடப்படவில்லை. முதல் காட்சி காலை 9 மணியிலிருந்து தொடங்குகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரைப் பார்க்கையில், ரஜினிக்கு ஒரு வினோத நோய் இருக்கிறது. பூனையாக இருப்பதும், திடீரென்று புலியாக மாறுவதும் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வில்லன் விநாயகத்திற்கும், இவருக்கும் ஏற்கனவே ஒரு முன் பகை இருப்பதாக தெரிகிறது. அதனால் ரஜினியைப் பழிவாங்க விநாயகம் திட்டம் தீட்ட, அவரைப் பற்றித் தெரிந்த மற்றொரு வில்லனான ஜாக்கி ஷெராஃப், விநாயகத்திற்கு எடுத்துரைக்க, இறுதியில் விநாயகன் பழிவாங்கினாரா இல்லையா... இருவருக்கும் என்ன தொடர்பு என்பதை விரிவாகச் சொல்லியிருப்பது போல் உணர முடிகிறது.
மேலும் நெல்சனின் முந்தைய படங்களில் வரும் டார்க் காமெடி காட்சிகளை இப்படத்திலும் தொடர்கிறார். அதோடு ஆக்ஷன் கொஞ்சம் அதிகமாகக் காட்டியிருப்பது போல் அமைந்துள்ளது. ட்ரைலரில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியைப் பார்த்து ‘கொஞ்சம் இதோட நிறுத்திக்கலாம்ல ...’ என கேட்க அதை ஏற்க மறுக்கும் ரஜினி, 'ரொம்ப தூரம் போயிட்டேன்... ஃபுல்லா முடிச்சிட்டுதான் திரும்ப வரமுடியும்', என சொல்லும் வசனம் மாஸாக இருக்கிறது. மேலும் 'ஓரளவுக்கு மேல நம்மக்கிட்ட பேச்சே கிடையாது...வீச்சுதான்' என்ற வசனம் ரசிகர்களை ரசிக்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.