Skip to main content

"அவனுக்கும் தாய், தங்கை, மகள் இருக்கும்" - சமந்தா பாடல் சர்ச்சை குறித்து கவிஞர் விவேகா பேட்டி!

Published on 20/12/2021 | Edited on 20/12/2021

 

 lyricist Viveka

 

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வாவேற்பைப் பெற்றுள்ளது. படத்தில் சமந்தா நடனமாடியுள்ள குத்து பாடல் தமிழ்நாட்டிலும் ஆந்திராவிலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், தமிழில் இப்பாடலை எழுதிய கவிஞர் விவேகாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்த சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசிய கவிஞர் விவேகா, 'ஊ சொல்றியா... ஊஊ சொல்றியா...' பாடல் சர்ச்சை குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு... 

 

ad

 

இந்தப் பாடல் பெரிய வெற்றியடையும் என்று எனக்கு முன்னரே தெரியும். பாடலின் டியூன், வரிகள் எல்லாம் சிறப்பாக அமைந்தன. ஒரு பாடல் பதிவிற்காக கோவா சென்று கொண்டிருந்தேன். அப்போது விமான நிலையத்தில் வைத்து 'ஊ சொல்றியா... ஊஊ சொல்றியா' பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளேதே... அது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ஒரு நிருபர் கேட்டார். நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியும் என்று அவரிடம் கூறினேன். படைப்பு சுதந்திரம் என்ற ஒன்று இருக்கவேண்டும். எல்லா ஆண்களையும் இந்தப் பாடலில் நாம் குறிப்பிடவில்லை. கேளிக்கை விடுதிக்கு போகக்கூடிய ஆண்களைத்தான் இந்தப் பாடலில் குறிப்பிட்டுள்ளோம். பெண்களை பூ என்று சொல்கிறோம். ஆண்களை வண்டு என்று சொல்கிறோம். பெண்களை நாம் சுற்றிச்சுற்றி வருவதை கௌரவமாக சொல்லிக்கொள்கிற ஆண்களாக இருக்கிறோம். அப்படி இருக்கையில் இந்தப் பாடலுக்கு ஏன் கோபித்துக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.

 

கேளிக்கை விடுதியில் நடனமாடும் பெண் தான் சந்தித்த ஆண்களை பற்றி இந்தப் பாடலில் கூறுகிறாள். பெண்களை நம்பாதே, பெண் எனும் மாயப்பிசாசு என்று ஒருவர் எழுதுகிறார் என்றால் எந்தப் பெண்ணால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ அந்தப் பெண்ணைத்தான் குறிப்பிடுகிறார். சீறி வரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று எழுதுகிறோம் என்றால் அனைத்து பெண்களையும் குறிப்பிட்டு அதை எழுதுவதில்லை. அவனுக்கும் தாய், தங்கை, மகள் இருக்கும். பெண்களை கேலி செய்து ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்திருக்கின்றன. ஆண்களை கேலி செய்து ஒரு பாடல் வந்ததற்கு நாம் இப்படி குதிக்கலாமா என்பதுதான் என்னுடைய கேள்வி. வெகுசிலர்தான் இதை எதிர்க்கிறார்கள். என்னிடம் பேசியவர்கள் அனைவரும் இந்தப் பாடலை பாராட்டத்தான் செய்கிறார்கள். ஸ்க்ரீனே தெரியாத அளவிற்கு இந்தப் பாடலுக்கு திரையரங்கில் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் சங்கம் எதிர்க்கிறது என்கிறார்கள்; ஆனால் ஆண்களின் சங்கமம் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. 

 

ஒரு ஐட்டம் சாங்கை பெண்கள் கொண்டாடுவது இதுதான் முதன்முறை. கருத்தியல் ரீதியாக எடுத்துக்கொண்டு பெண்களும் இப்பாடலைக் கொண்டாடுகிறார்கள். இந்தப் பாடல் இவ்வளவு உயரத்தை அடைந்தது மகிழ்ச்சிதான். இந்தப் பாடலை முழு சுதந்திரத்துடன் எழுதுங்கள் என்று தேவி ஸ்ரீ பிரசாத் சார் கூறினார். பாடலில் நான் பயன்படுத்தியிருந்த ஆம்பள புத்தி என்ற வார்த்தையை தேவி பிரசாத் சாருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் பாடல் முழுவதும் அது வருவதுபோல எழுதினோம். அதன் பிறகு ஆம்பள புத்தி பாடலாக இது மற்ற மொழிகளுக்கும் போனது. இந்தப் பாடலின் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத் சாரின் ரசனையும் முக்கிய காரணம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘புஷ்ப ராஜ்...’ - அடுத்தடுத்த பாகங்கள் குறித்து அல்லு அர்ஜுன்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
allu arjun about pushpa 3

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் வெளியான படம் 'புஷ்பா – தி ரைஸ்'. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார். இவர் இசையில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. குறிப்பாக சமந்தா சிறப்புத் தோற்றத்தில் நடனமாடிய 'ஊ...சொல்றியா மாமா' பாடலை இளைஞர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் ‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் தற்போது உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ, கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 74வது பெர்லின் சர்வதேச திரைப்படவிழாவில் புஷ்பா படம் திரையிடப்படுகிறது. இதில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், புஷ்பா படத்தின் மூன்றாம் பாகம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக பிரபல ஆங்கில இணையதளத்திற்கு பேட்டியளித்த அவர், “நிச்சயமாக புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்தை எதிர்பார்க்கலாம். நாங்கள் அதை ஒரு தொடராக உருவாக்க விரும்புகிறோம். அற்புதமான யோசனைகளும் திட்டங்களும் அடுத்தடுத்து உள்ளன. புஷ்பா 1 இல் பார்த்ததை விட புஷ்பா 2வில் வித்தியாசமான புஷ்பாவை பார்ப்பீர்கள். அதைவிட பெரிய படமாகவும் இருக்கும்” என்றார். 

Next Story

நடிகை தற்கொலை; புஷ்பா பட நடிகர் கைது

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

Pushpa Actor jagadeesh Arrested regards actress passed away

 

தெலுங்கில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த துணை நடிகை ஒருவர் கடந்த 29 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் யாரோ ஒருவருடைய தூண்டுதலின் பெயரால் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் நடிகர் ஜெகதீஸ்தான் அந்த துணை நடிகையை மிரட்டி வந்ததாக அறியப்பட்ட நிலையில், அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படத்தில் கேசவா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர். 

 

இவரும் அந்த துணை நடிகையும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர். பின்பு இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து அந்த துணை நடிகை வேறோரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு உறவில் இருந்துள்ளார். அப்போது அவருடன் நெருக்கமாக இருக்கும் பொழுது ஜெகதீஸ் அதை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அந்த புகைப்படங்களை இணையத்தில் கசிய விடுவேன் என துணை நடிகையை மிரட்டி வந்துள்ளார். இதன் அழுத்தம் காரணமாகவே துணை நடிகை தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.