Skip to main content

“எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்” - கமலுக்கு பதிலடி கொடுத்த இயக்குநர்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
lenin bharathi replied to kamalhassan statement regards pudhucherry child issue

புதுச்சேரி மாநிலம் சோலை நகர் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி ஒருவர் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தெருவில் தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றார். ஆனால், சிறுமி மாலை ஆகியும் வீடு திரும்பாததால், சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடினர். சிறுமி காணாமல் போனது குறித்து முந்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் அக்கம்பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுமியைத் தேடி வந்தனர். அதனடிப்படையில் நேற்று மதியம் அங்குள்ள அம்பேத்கர் நகர் சாக்கடை கால்வாயில் சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் மூட்டையை கைப்பற்றிப் பிரித்துப் பார்த்த போது அதில் சிறுமி கை, கால்கள் கட்டப்பட்டு கிடந்தார்.

இந்த கொலையில் கஞ்சா குடிக்கும் இளைஞர்கள் சிறுமியின் கை கால்களைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்துள்ளனர் எனச் சிறுமியின் தந்தை பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விசாரணையில் அந்த பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் அவனுக்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியைக் கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டபோது, சிறுமி மயங்கி விழுந்துள்ளதால் அவரைக் கொலை செய்து மூட்டைக் கட்டி சாக்கடையில் வீசி இருப்பது தெரியவந்தது. 

இந்தச் சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், எங்கே போகிறோம்? என்ற தலைப்பில் நிறைய சம்பவங்களை மேற்கோள்காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சம்பவம் குறித்து பதிவிட்ட அவர், “ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் எனும் ஆழமான ஐயத்தை இந்தச் சம்பவங்கள் ஏற்படுத்துகின்றன. ஒருபுறம் வளர்ச்சி, வல்லரசு, நல்லாட்சி என்று பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். மறுபுறம் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற, போதையின் பிடியில் சீரழிகிற, சாதி, மத வெறி பிடித்தாட்டுகிற சமூகமாக மாறிக் கொண்டிருக்கிறோம். 

மானுட நேயத்தைத் தொலைத்துவிட்டு மிருக நிலைக்குத் திரும்புவதை வளர்ச்சி என்று கருத முடியுமா? குற்றங்கள் எதுவாயினும், அதன் காரணிகள் எவையாக இருந்தாலும் எல்லாவற்றுக்குப் பின்னாலும் இருப்பது மனிதத்தன்மையை மரத்துப்போகச் செய்யும் போதை வஸ்துகள்தான். போதை வஸ்துகள் சகஜமாகப் புழங்கும் தேசத்தில் பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக வாழவே முடியாது என்பது நிதர்சனம். இந்தச் சீரழிவை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்காவிடில் எதிர்காலம் நம்மை மன்னிக்காது. போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் கமல்ஹாசன் பதிவை இயக்குநர் லெனின் பாரதி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்து, “எங்கே போகிறோம் என்று ஆராய்வதைப் போல், கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை, போதை, வெற்றுப் பெருமை, வக்கிரம், குரூரம் என இளம் உள்ளங்களில் விஷக் விதைகளை விதைத்து, ‘எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்’ என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரம்மாண்ட பட்ஜெட் -  ஒரே மாதத்தில் வெளியாகும் கமலின் இரண்டு படங்கள் 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
kamal indian 2 and kalki 2898 ad both will released in june month

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏடி’. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்க, அஸ்வின் தத் பெரும் பொருட் செலவில் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கும் இப்படம் சைன்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகிறது. படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ கடந்த ஆண்டு ஜூலையில் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வெளியிடப்பட்டது. 

இதையடுத்து பிரபாஸின் கதாபாத்திர போஸ்டர் முன்னதாக வெளியிடப்பட்டது. அவர் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அண்மையில் அமிதாப் பச்சன் அஸ்வத்தாமா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவித்து  டீசர் வெளியிட்டிருந்தனர். இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் வருகிற மே 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலால் இப்படம் தள்ளிப்போகும் என கூறப்பட்டது. 

kamal indian 2 and kalki 2898 ad both will released in june month

இந்த நிலையில் இப்படத்தின் புது ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஜுன் 27ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புது ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்துள்ள இந்தியன் 2 படம், கல்கி  2898 ஏடி வெளியாகவுள்ள அதே மாதத்தில் வெளியாகவுள்ளது. தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த சூழலில் ஒரே மாதத்தில் கமலின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் 2 மற்றும்  கல்கி 2898 ஏடி இரு படங்களும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த்,ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.