தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்த எஸ்.பி.ஜனநாதன், சமீபத்தில் மரணமடைந்தார். அவரது இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வந்த ‘லாபம்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நடந்து அனைவரையும் சோகத்திற்குள்ளாக்கியது. அதன் பிறகு, எஞ்சியுள்ள பணிகளை நிறைவு செய்து, திட்டமிட்டபடி படத்தினை திரைக்குக் கொண்டுவரும் முனைப்போடு படக்குழு பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில், லாபம் படத்தில் இடம்பெற்றுள்ள 'யாமிலி யாமில்லியா...' என்ற பாடல் இரண்டாவது பாடலாக சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு முன்னதாக ‘யாழா யாழா...’ என்ற பாடல் வெளியிடப்பட்டிருந்தது. 'யாமிலி யாமில்லியா...' என்ற பாடலை வெளியிட்ட படக்குழு, இப்பாடலை மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தது. இப்பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்த நிலையில், பாடல் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் பார்வையாளர்களால் கேட்டு ரசிக்கப்பட்டுள்ளதாகப் படத்தின் நாயகன் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.