Skip to main content

"என்ன சர்ச்சை செய்தார்?" - ராஜமௌலிக்காக கொதித்தெழுந்த கங்கனா ரணாவத்

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

kangana ranaut supports ss Rajamouli

 

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தற்போது 'எமர்ஜென்சி' படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். மேலும், தமிழில் 'சந்திரமுகி 2' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, அவ்வப்போது அரசியல் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். தன்னை ஒரு வலதுசாரி ஆதரவாளராகக் காட்டிக்கொண்டு வரும் கங்கனா தொடர்ந்து மத்திய அரசுக்கும் மோடிக்கும் ஆதரவாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

 

இந்த நிலையில், மதம் குறித்து ராஜமௌலி கூறிய கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் கங்கனா. சமீபத்தில் ராஜமௌலி தி நியூயார்கர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "நான் மதத்தின் பாதையில் இருந்து விலகிச் செல்வதால் எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் கடவுளைப் பற்றி தவறாகப் பேசுவதில்லை. நான் அதைச் செய்வதில்லை. நான் மக்களின் உணர்வுகளை மதிக்கிறேன். ஏனென்றால், நிறைய பேர் கடவுளைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனாலும், எனக்கு மதச்சடங்குகளிலோ, அப்படிப்பட்ட விஷயங்களிலோ நம்பிக்கை இல்லை. 

 

நாங்கள் ஒரு பெரிய குடும்பம். அதில் என் தந்தை, அம்மா உள்ளிட்ட அனைவரும் ஆழ்ந்த மதநம்பிக்கை கொண்டவர்கள். ஆனால், நான் சிறுவயதில் இந்து கடவுள்களைப் பற்றிய கதைகளைப் படித்த பிறகு எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது உண்மையாகத் தெரியவில்லை. பின்னர் எனது குடும்பத்தின் மதநம்பிக்கையில் சிக்கிக்கொண்டேன். நான் மதநூல்களைப் படிக்க ஆரம்பித்தேன், புனித யாத்திரைகள் செல்ல ஆரம்பித்தேன், காவித் துணி அணிந்து சில வருடங்கள் சன்னியாசியாக வாழ ஆரம்பித்தேன். சில நண்பர்களுக்கு நன்றி, பின்னர் நான் கிறிஸ்துவத்தைப் பிடித்தேன். நான் பைபிளைப் படிப்பேன், சர்ச்சுக்குப் போவேன், எல்லாவிதமான காரியங்களையும் செய்வேன். படிப்படியாக இந்த விஷயங்கள் அனைத்தும் மத அடிப்படையில் ஒரு வகையான சுரண்டல் என்பதை எனக்கு உணர்த்தியது.

 

எனது உறவினர் ஒருவரின் கீழ் சில மாதங்கள் பணிபுரிந்தேன். அவர் எனக்கு அய்ன் ராண்டின் தி ஃபவுண்டன்ஹெட் மற்றும் அட்லஸ் ஷ்ரக்ட் ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். நான் அந்த நாவல்களைப் படித்தேன். அவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். அவர்களுடைய தத்துவம் எனக்குப் புரியவில்லை. ஆனால், அதன் அடிப்படைகளைப் புரிந்துகொண்டேன். அந்தச் சமயத்தில்தான் நான் மெல்ல மெல்ல மதத்தை விட்டு விலக ஆரம்பித்தேன். அந்தக் காலத்திலும் மகாபாரதம், ராமாயணம் போன்ற கதைகள் மீதான என் காதல் குறையவே இல்லை. நான் அந்த நூல்களின் மத அம்சங்களிலிருந்து விலகிச் செல்ல ஆரம்பித்தேன். ஆனால், என்னுடன் தங்கியிருப்பது அவற்றின் நாடகம் மற்றும் கதைசொல்லலின் சிக்கலான தன்மையும் மகத்துவமும்தான்" என்றார்.

 

ராஜமௌலியின் கருத்துக்கு கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளதாவது, "மிகைப்படுத்தத் தேவையில்லை. எல்லா இடங்களிலும் காவிக்கொடியை எடுத்துச் செல்லாமல் இருப்பது நல்லது. நம் செயல்கள் வார்த்தைகளை விட சத்தமாகப் பேசுகின்றன. ஒரு பெருமைமிக்க இந்துவாக இருப்பதால் எல்லாவிதமான தாக்குதல்கள், விரோதம், கிண்டல் மற்றும் அதிக அளவு எதிர்மறை உணர்வுகளை எதிர்கொள்கிறோம். நாங்கள் அனைவருக்கும் திரைப்படங்களை உருவாக்குகிறோம். கலைஞர்களான நாங்கள் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

 

வலதுசாரிகள் என்று அழைக்கப்படுபவர்களிடம் இருந்தும் எங்களுக்கு ஆதரவு கிடைக்காததால், நாங்கள் முற்றிலும் சுயமாக இருக்கிறோம். எனவே ராஜமௌலி சாருக்கு எதிராக விமர்சனம் வந்தால் அதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவர் ஒரு மேதை. அவரைப் பெற்ற நாம் பாக்கியவான்கள். இப்படி சொல்வதனால் எனக்கு எந்த லாபமும் இல்லை. நான் இதுவரை ராஜமௌலி சாரை சந்தித்துப் பேசியது இல்லை. இந்த எதிர்மறை விமர்சனங்களால் அவர் துவண்டுவிடமாட்டார் என நினைக்கிறேன். உலகம் எதற்காக அவர் மீது சர்ச்சைக்குரிய முத்திரை பதித்துள்ளது? என்ன சர்ச்சை செய்தார்? தொலைந்து போன நமது நாகரீகத்தை பெருமைப்படுத்த பாகுபலி என்ற படத்தை எடுத்தார் அல்லது ஆர்.ஆர்.ஆர் படத்தை உருவாக்கினார்? அல்லது சர்வதேச சிவப்பு கம்பளங்களுக்கு அவர் வேட்டி அணிந்தாரா? அவர் என்ன சர்ச்சை செய்தார்? தயவு செய்து சொல்லுங்கள்" எனக் கோபமாகப் பதிவிட்டுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஆஸ்கரில் சந்திப்போம்” - வார்னரால் டென்ஷனான ராஜமௌலி  

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
ss rajamouli david warner ad viral

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், இந்தியாவிலும் ரசிகர்களை வைத்துள்ளார். முன்னதாக அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படம் பிரபலமடைந்த சமயத்தில் அல்லு அர்ஜுன் போல் வசனம் பேசி மற்றும் படத்தில் இடம்பெற்ற ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் செய்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பரவலாக ரசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறைய இடங்களில் புஷ்பா படத்தில் இடம்பெறும் அல்லு அர்ஜுன் ஸ்டைலை செய்து மகிழ்ந்து வந்தார். மேலும், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளுக்கு புஷ்பா பட ஸ்டைலில் தனது குழந்தையுடன் சமூக வலைத்தளப் பக்கம் வாயிலாக வாழ்த்து தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இயக்குநர் எஸ்.எஸ் ராஜமௌலியோடு இணைந்து ஒரு யுபிஐ விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த விளம்பரத்தில், வார்னரிடம் ஃபோன் பேசும் ராஜமௌலி, அவரின் மேட்ச் டிக்கெட்டுக்கு டிஸ்கவுன்ட் கிடைக்குமா என கேட்கிறார். அதற்கு பதிலளித்த வார்னர், உங்களிடம் சம்மந்தப்பட்ட யுபிஐ செயலி பெயரைச் சொல்லி, அது இருந்தால் கேஷ்பேக் கிடைக்கும் என்கிறார். உடனே, ராஜமௌலி, “என்னிடம் வழக்கமான யுபிஐ இருந்தால்...” என கேட்க, “அப்போது டிஸ்கவுன்ட் கிடைக்க நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்” என வார்னர் சொல்கிறார். 

உடனே வார்னரை வைத்து ராஜமௌலி படமெடுப்பதாக காட்டப்படுகிறது. அவரை நடிக்க வைக்க படாத பாடு படுகிறார் ராஜமௌலி. அதை ஜாலியாக வெவ்வேறு காட்சிகளைக் கொண்டு காட்டப்படுகிறது. ஒரு காட்சியில், “ஆஸ்கரில் சந்திப்போம்” என ராஜமௌலியிடம் வார்னர் சொல்கிறார். அதற்கு டென்ஷனாகி ராஜமௌலி வார்னரை பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Next Story

“நான் பெருமைமிக்க இந்து” - மாட்டிறைச்சி சர்ச்சைக்கு கங்கனா விளக்கம்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
kangana explained beaf issue

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேலும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும், அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் “நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?” என கேள்வி எழுப்பியது சர்ச்சையானது. 

இதைத் தொடர்ந்து தற்போது கங்கனா 2019ஆம் ஆண்டு பேசிய கருத்து தற்போது வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது. காங்கிரஸ் தலைவர் விஜய் வாடேட்டிவார், இந்தப் பதிவை வெளியிட்ட நிலையில் அதில், “மாட்டிறைச்சி சாப்பிடுவதிலோ அல்லது வேறு எந்த இறைச்சி சாப்பிடுவதிலோ தவறில்லை. இது மதத்தைப் பற்றியது அல்ல” என பதிவிட்டிருந்தார். மேலும் “வீட்டை விட்டு வெளியேறிய போது மாட்டிறைச்சி சாப்பிடக் கூடாது என தாயார் தடை விதித்தார். ஆனால் அந்த மாட்டிறைச்சியில் என்னதான் இருக்கிறது என்பதற்காக நான் அதை சாப்பிட்டும் பார்த்தேன்” என கங்கனா பேசியிருந்ததாக கூறப்படுகிறது.  

இந்த நிலையில் இந்த கருத்து சர்ச்சையானது குறித்து விளக்கமளித்துள்ள கங்கனா, “நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த இறைச்சியையும் சாப்பிடாத பெருமைமிக்க இந்து. நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதாக என்னைப் பற்றி ஆதாரமற்ற வதந்திகள் பரப்பப்படுகின்றன. நான் பல தசாப்தங்களாக யோக மற்றும் ஆயுர்வேத வாழ்க்கை முறையை ஆதரித்தும், ஊக்குவித்தும் வருகிறேன். அதனால் இது போன்ற யுக்திகள் என்னுடைய இமேஜை ஒன்னும் செய்யாது. என் மக்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். அவர்களை யாரும் தவறாக வழிநடத்த முடியாது” என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.