34வது அகில இந்திய மத்திய வருவாய் கலாச்சார கலை கூடல் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இசையமைப்பாளர் மற்றும் நியமன எம்.பி. இளையராஜா தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது 'ஜனனி ஜனனி...' பாடல் மூலம் பேச்சை ஆரம்பித்த இளையராஜா நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் வாழ்த்து கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஸ்டூடியோவில் நடைபெறும் ரெக்கார்டிங் பணிகளை நேரடியாக உங்களுக்கு காட்டுகிறேன் எனக் கூறி அதை செய்து காண்பித்தார்.
மேடையில் இருந்தபடியே அவரது ஸ்டூடியோவிற்கு போன் செய்த இளையராஜா, "அங்கு 15 இசை கலைஞர்கள் இருக்கிறார்கள். ஒத்திகை நடைபெற்று கொண்டிருக்கிறது. அவர்களை இங்கிருந்தே போன் மூலம் இயக்குகிறேன்" எனக் கூறி அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். தொடர்ந்து அவர்கள் வாசித்து வந்த நிலையில், அவர்களிடம், "ஸ்ருதி சேராம இருக்கு... அதை சரி செய்யுங்கள்" என்றார். மேலும், சில குறிப்புகளை சரி செய்ய சொல்லி மேடையில் இருந்தவாறு ரெக்கார்டிங் பணிகளை மேற்கொண்டார். இது அங்கிருந்தவர்கள் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தது.