Skip to main content

நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட இளவரசு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
ilavarasu cinematography Association issue

தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு, சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக தியாகராய நகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாகப் புகார் அளித்தது. இதையடுத்து புகார் குறித்து போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை எனக் கூறி கடந்த 2022-ம் ஆண்டு போலீசாருக்கு எதிராக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்த நீதிமன்றம், விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.  

இதனைத் தொடர்ந்து, ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு, நீதிமன்ற தீர்ப்பின்படி குறிப்பிட்ட காலத்துக்குள் போலீஸார் வழக்கு விசாரணையை முடிக்கவில்லை என சென்னை உயர்நீதி மன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த டிசம்பர் மாதம் வந்த நிலையில், டிசம்பர் 12 ஆம் தேதி இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகக் கூறி, அது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் காவல்துறை தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டன. இதை மறுத்த இளவரசு தரப்பு, டிசம்பர் 13 ஆம் தேதிதான் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவித்து
சிசிடிவி காட்சிகள் போலியானவை எனக் கூறியது. 

இதையடுத்து, குறிப்பிட்ட தேதியில் இளவரசு எங்கு இருந்தார் என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சி.டி.ஆர் எனும் மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சமர்ப்பித்த விவரங்களை ஆய்வு செய்த நீதிபதி , “நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம். டிசம்பர் 12 ஆம் தேதி நீங்கள் காவல் நிலையத்தில் ஆஜர் ஆனதற்கான ஆதாரங்கள் உள்ளன. இதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என எச்சரித்து காவல்துறை தாக்கல் செய்த விவரங்கள் தொடர்பாக மனுதாரர் விளக்கமளிக்க உத்தரவிட்டார். மேலும் விசாரணையை இன்று (30.01.2024) ஒத்திவைத்திருந்தார். 

அதன்படி இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் நிலையத்தில் ஆஜரானது தொடர்பாக தவறான தகவல்களை அளித்ததற்காக இளவரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். அதனைத் தொடர்ந்து நீதிபதி, ‘நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இளவரசு புகார் குறித்து காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் 2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை பாண்டி பஜார் காவல் நிலைய குற்றப்பிரிவில் காவல் ஆய்வாளர்களாக இருந்த அனைவரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்’.

சார்ந்த செய்திகள்

Next Story

“பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” - இளையராஜா வழக்கில் நீதிமன்றம் கேள்வி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
ilaiayaraaja copyright case update

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள்,  இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து, பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம் என்றும் அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் எக்கோ நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த மனு கடந்த மாதம் நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பிற்கும் இளையராஜா தரப்பிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தது. 

இந்த நிலையில் இந்த மனு இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் முன்பு மீண்டும் விராணைக்கு வந்தது. அப்போது எக்கோ நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இசையமைத்ததற்கு இளையராஜாவிற்கு தயாரிப்பாளர் ஊதியம் கொடுத்து விடுவதால், அதன் உரிமை தயாரிப்பாளரிடம் சென்றுவிடும். தயாரிப்பாளரிடம் உரிமை பெற்றுள்ளதால் பாடல்கள் தங்களுக்கு சொந்தமாகிவிடும்” என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், “இசையமைப்பது என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் பொருந்தாது” என்றார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை. அப்படி இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்” என்ற கேள்வியை முன் வைத்தார்கள். மேலும் பாடல்கள் விற்பனை செய்ததன் மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்? அவர் பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என தெரிவித்துள்ளனர். அதே போல் பாடலாசிரியருக்கு உரிமை கோருவதற்கு வாய்ப்பிருக்கிறதா, அது குறித்து தங்களின் விளக்கம் என்ன என்று இளையராஜா தரப்பிடம் கேட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்கள். 

Next Story

விஷால் வழக்கில் ஆய்வறிக்கை தாக்கல் 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் படம் வெளியிடும் பணிகளை மேற்கொள்வதாக லைகா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனைத் திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர்நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். 

இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த முறை நடந்த விசாரணையில், உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆஷா, ரத்னம் படத்திற்காக விஷால் வழங்க வேண்டிய நிலுவைச்  சம்பளமான ரூ.2. 60 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த, அந்தப் படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்த போது, லைகா நிறுவனம் விஷாலின் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது. 

இதனிடையே பல கட்டங்களாக நடந்த விசாரணையின் போது, இந்த வழக்கு தொடர்பாக விஷால் - லைகா இருவருக்கும் இடையிலான பண பரிவர்த்தனை குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்க ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மூன்று ஆண்டுக்கான வருமான வரி கணக்கு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி இருவருக்குமான 
பண பரிவர்த்தனை குறித்த ஆய்வறிக்கையை ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதையடுத்து ஆடிட்டரின் அறிக்கை குறித்து ஆராய வேண்டும் எனக் கோரி, விசாரணையை தள்ளிவைக்க விஷால் தரப்பு கேட்டுக் கொண்டது. பின்பு வழக்கு விசாரனை ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.