Skip to main content

மீண்டும் ஆஜராக விஷாலுக்கு நீதிமன்றம் உத்தரவு

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

 Court orders Vishal to appear again regards lyca case

 

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்த கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர் நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். 

 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். மேலும் தொகையைச் செலுத்தாவிட்டால் விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படங்களைத் திரையரங்கம் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது எனத் தடை விதிக்கப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்து விசாரணையை ஒத்திவைத்தது. அடுத்த விசாரணையில் லைகா நிறுவனம் சார்பில் நடிகர் விஷால் இன்னும் ரூ. 15 கோடியை நீதிமன்றத்துக்குச் செலுத்தவில்லை என்றும், நீதிமன்றத்துக்குத் தவறான தகவலைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டு வாதிடப்பட்டது. பின்பு அவர் நடிப்பில் உருவான 'மார்க் ஆண்டனி' படத்தை வெளியிடத் தடை விதித்து விஷால் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. 

 

பின்பு நீதிபதி உத்தரவின்படி விசாரணைக்கு நேரில் ஆஜரானார் விஷால். அப்போது கடந்த 2021 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான விஷாலின் 4 வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய விஷாலுக்கு உத்தரவிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவருடைய குடும்ப உறவினர்களின் அசையும் சொத்துக்கள் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்யவும் வங்கிக் கணக்கில் முரண் இருந்தால் எதிர்காலத்தில் படம் எதுவும் நடிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி விஷாலை எச்சரித்தார். மேலும் மார்க் ஆண்டனி படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி விசாரணையை ஒத்திவைத்தார். அதன் பிறகு சொன்ன தேதியில் படம் வெளியாகி வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.  

 

இந்த நிலையில், இந்த வழக்கனது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதே சமயம், நான்கு வங்கிக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்தின் விவரங்களின் ஆவணங்களும் விஷால் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. அதனால் வருகிற 22 ஆம் தேதி விஷாலை நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பின்பு, பிற்பகலில் விஷால் தரப்பு வழக்கறிஞர், நீதிபதியிடம் விஷால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க கோரிக்கை வைத்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, விஷால் வருகிற 22 ஆம் தேதி நேரில் ஆஜராக வலியுறுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்” - விஷால் பகிரங்க குற்றச்சாட்டு 

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
vishal allegation about theatre owners for not allocating theatres for rathnam movie

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வந்தனர். மேலும் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் திருச்சி, தஞ்சாவூர் பகுதி திரையரங்குகளில் ரத்னம் படம் வெளியிடுவதற்கு தடை விதித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக விஷால் குற்றச்சாட்டு குறித்து பேசிய ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், “சங்கத்தின் தலைவர் மீனாட்சி மற்றும் செயலாளர் சிதம்பரம் என்னுடைய ஃபோனை எடுக்க மறுக்கிறார்கள். என் நண்பர் சீனு சார், ரத்னம் படத்தை வடக்கு மற்றும் தெற்கு பதிகளில் வாங்கியிருக்கிறார். ஒரு திரைப்படம் வெளியாவதே பெரிய விஷயம். இந்த காலகட்டத்தில் இப்படி நீங்க பண்ணும் போது இதற்கு பெயர் கட்டப்பஞ்சாயத்து.   

இதில் முதலமைச்சர் திருச்சி கலெக்டர், எஸ்.பி, காவல் துறையினர் என அனைவருக்கும் நான் சொல்ல விருப்பப்படுவது, அவர்கள் செய்வது கட்டப்பஞ்சாயத்தை தவிர்த்து வேற எதுவும் கிடையாது. விஷாலுக்கே இந்த கதி என்றால் நாளைக்கு ஒரு புதுமுக நடிகருக்கு என்ன நடக்கும். நீங்க ஃபோன் எடுக்காமல் இருப்பது, தியேட்டர் ஒதுக்கப்படாமல் இருப்பது, அது உங்களுடைய அலட்சியம். ஆனால் அந்த அலட்சியத்தைப் பார்த்து நான் சும்மா இருக்க மாட்டேன்” என கூறுகிறார். 

Next Story

“சாதியைத் தூக்கிப் பிடித்து எந்தக் காலத்திலும் படம் வந்தது கிடையாது” - ஹரி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
hari about caste related cinema in rathnam movir promotion

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ரத்னம் படத்தின் போஸ்டர் மற்றும் பெரிய திரை (எல்இடி) உடன் கூடிய வேன் கடந்த 4ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உலா வரும் என அறிமுகப்படுத்தப்பட்டது. 

பின்பு விஷால் மற்றும் ஹரி இருவரும் சென்னை, திருச்சி உள்ளிட்ட ஊர்களில் கல்லூரியில் புரொமோஷன் நிகழ்ச்சி நடத்தி படத்தை விளம்பரப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் ஹரி, கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று படத்தை பார்க்கும்படி கேட்டுக்கொண்டார். பின்பு திரையரங்கு ஒன்றில், ரசிகர்களைச் சந்தித்து பேசிய அவர், “ஒரு படம் நல்லாயிருக்கு என்றால் எந்த காலத்தில் ரிலீஸ் செய்தாலும் வருவோம் என வந்திருக்கிறீர்கள். அதற்கு நன்றியும் வாழ்த்துகளும். உங்களை மாதிரி ஆடியன்ஸ் இருக்கும் போது எங்களுக்கு நல்ல சினிமா எடுக்க வேண்டும் என தோன்றும். அந்த வகையில் என்னுடைய ரத்னம் படம் ரிலீஸாகிறது. முதல் முறையாக யோகி பாபு ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். ரோட்ல ஒரு பொண்ணுக்கு பிரச்சனை என்றால் விடக்கூடாது. இந்தக் காலத்தில் போலிஸுக்கு பயந்து கொண்டு எதுவுமே பண்ணுவதில்லை. ஆனால் பிரச்சனை என்றால் தட்டி கேக்கணும். அந்த மாதிரி தட்டி கேட்கும் வேலையை தான் விஷால் படத்தில் பண்ணியிருக்கார்” என்றார்.     

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரத்னம் படம் ஆக்‌ஷம் படம் என்றாலும் எமோஷனலும் இருக்கும். அதனால் குடும்பத்தோடு வந்து பார்க்கலாம். நாட்டில் எவ்வளவோ அநியாயம் நடந்துட்டு இருக்கு. நிறைய பேரு கெட்டவனா மாறிட்டான். சூழ்நிலை மாற வைக்கிறது. போதை பொருள்களும் புழக்கத்தில் சுத்திட்டு இருக்கு. இதனிடையே நல்லவர்களும் இருக்கிறார்கள். கெட்டவங்கிட்ட இருந்து நல்லவங்கள காப்பாத்தனும். மனிதனுக்கு மனிதன் தான் எதிரி” என்றார்.  

அவரிடம் சாதி வைத்து படமெடுப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சாதியை மையமாக வைத்து எடுப்பது என்பதை, அவரவர்களுக்கு தெரிந்ததை வைத்து படமாக்குகிறார்கள் என்று தான் நல்ல நோக்கத்தோடு பார்க்க வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட ஊரை வைத்து படமெடுத்தாலே அங்கிருக்கிற சாதி, இயல்பாகவே கதைக்குள் வந்துவிடும். யாருமே வேணும் என்று சாதி வைத்து படமெடுப்பேன், என் சாதிக்காரன் மட்டும் பார்த்தால் போதும் என நினைப்பதில்லை. எல்லாருமே படம் பார்க்கணும். பக்கத்து மாநிலங்களில் இருப்பவர்களும் படம் பார்க்க வேண்டும். 

சாதி உயர்ந்தது, சாதியை தூக்கிப் பிடியுங்கள் என யாருமே படமெடுக்க மாட்டார்கள். எந்தக் காலத்திலும் அப்படி வந்தது கிடையாது. படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டர் இருக்கும். அவன் அப்படித் தான் சாதி பற்றி பேசிட்டு இருப்பான். ஆனால் கடைசியில் மனம் திருந்துவது போல் தான் இருக்கும். சினிமாவைப் பொறுத்தவரை எல்லா இன மக்களும் வேலை பார்த்தால் தான் படமெடுக்க முடியும். எல்லா மக்களும் பார்த்தால் தான் ஒரு சினிமா வெற்றியடைய முடியும். அதனால் சினிமா என்பது மதம், சாதி, இனம், மொழி என எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது” என்றார்.