Skip to main content

“அவர் பேசியதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்”- சிரஞ்சீவி பட கதை திருட்டு விவகாரம்! 

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

chiranjeevi

 

 

சிரஞ்சீவி தற்போது நடித்து வரும் ஆச்சார்யா திரைப்படத்தை கொரட்டலா சிவா இயக்கி வருகிறார். சிரஞ்சீவி பிறந்தநாளின்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அந்த சமயத்திலிருந்து ராஜேஷ் என்பவர் இது என்னுடைய கதை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் என் கதையை படமாக எடுக்கிறது என்று குற்றச்சாட்டை வைத்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். 

 

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ராஜேஷ் மண்டூரி என்பவரது கதையை (அண்ணய்யா என்று தலைப்பு வைக்கவிருந்த கதை) இயக்குனர் கொரட்டாலா சிவாவிடம் நாங்கள் சொல்லிவிட்டோம் என்ற குற்றச்சாட்டை எங்கள் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மறுக்கிறது. ராஜேஷின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது, பொய்யானது.

 

அவர் சொல்வது போல அவர் எங்களிடம் சொன்ன கதை அவ்வளவு நன்றாக இருந்திருந்தால் நாங்களே அதை முறையான நடிகர்களோடு தயாரித்திருப்போம். கடந்த ஒரு வருடத்தில் மூன்று புதுமுக இயக்குநர்களுக்கு நாங்கள் வாய்ப்பு தந்திருக்கிறோம். பரத் கம்மா - 'டியர் காம்ரேட்', ரிதேஷ் ரானா - 'மத்து வதலரா', சனா புச்சி பாபு - 'உப்பென்னா' (வெளியீடுக்கு தயாராக உள்ளது). எனவே கதை நன்றாக இருந்திருந்தால் இன்னொரு புதுமுக இயக்குநரை அறிமுகம் செய்ய வேண்டாம் என எது எங்களைத் தடுத்திருக்கும்?

 

எங்களிடம் சொல்லப்பட்ட கதை மிக பலவீனமாக இருந்தது, அதன் கரு சரியில்லை என்பதால் நிராகரிக்கப்பட்டது. இதுவே உண்மை. இது அவரிடமும் சொல்லப்பட்டது.

 

கதையே நன்றாக இல்லாத போது, அதைத்தழுவி எடுக்க வேண்டும் என கொரட்டாலா சிவா அவர்களிடம் நாங்கள் ஏன் சென்று சொல்ல வேண்டும். கொரட்டாலா சிவா மேதைமையான இயக்குனர், நல்ல கொள்கைகளும் தர்மங்களும் கொண்ட நல்ல மனிதர் என்ற நற்பெயரைப் பெற்றவர். எங்கள் பெயரையும், கொரட்டாலா சிவா அவர்களின் பெயரையும் கெடுக்க, எந்தவித ஆதாரமும் இன்றி இந்த ராஜேஷ் என்பவர் ஊடகங்களில் குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.

 

ஊடகத்தில் அவரது செயல்பாட்டையும் மற்றும் உணர்ச்சி வசப்பட்டு அவர் பேசியதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவருக்கு எதிராக உடனடியாக எந்தவித தயக்கமுமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

அவரது குற்றச்சாட்டுகளை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏனென்றால் அவர் இப்படி மலிவான விஷயங்களைச் செய்து கவனம் ஈர்க்கவே பார்க்கிறார் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

18 வருடம் கழித்து மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியான த்ரிஷா

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
trisha joined in chiranjeevi Vishwambhara

த்ரிஷா தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் ஐடென்டிட்டி, மோகன்லாலின் 'ராம் பார்ட் 1' உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இது மட்டுமல்லாமல் இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படி தொடர்ந்து தமிழ், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் 156வது படத்தில் இணைந்துள்ளார். வசிஷ்டா இயக்கும் 'விஷ்வாம்பரா' படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளார். யுவி க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கடந்த பொங்கலன்று இப்படத்தின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அடுத்த வருடம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இப்படம் மூலம் 18 வருடங்கள் கழித்து மீண்டும் சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட த்ரிஷா, மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு ஸ்டாலின் படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மன்சூர் அலிகான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையான நிலையில் சிரஞ்சீவி, த்ரிஷாவிற்கு ஆதரவாக மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

மன்சூர் அலிகான் மேல் முறையீடு; கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
mansoor alikhan trisha issue case

மன்சூர் அலிகான், சில மாதங்களுக்கு முன்பு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்துப் பேசியது பெரும் சர்ச்சையானது. அவர், லியோ படத்தில் த்ரிஷாவை பாலியல் தொந்தரவு செய்யும் காட்சி தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறியிருந்தார். இதற்கு த்ரிஷா, கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பல்வேறு பிரபலங்கள், தமிழ் திரையுலகை சார்ந்த சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பின்பு இது குறித்து விளக்கமளித்த மன்சூர் அலிகான், நான் பேசியதை திட்டமிட்டே வேறு மாதிரி கட் செய்து தவறாக பரப்புவதாக கூறி மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்திருந்தார். இதையடுத்து மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற சம்பந்தப்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரைத்தது. அதன்படி மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். இதனிடையே முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார். த்ரிஷாவும் மன்னித்துவிட்டதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். பின்பு இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு அனுப்பியது சென்னை காவல்துறை. பின்பு த்ரிஷாவிடம் விளக்கம் கேட்டிருந்தனர். மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என த்ரிஷா பதில் கடிதம் எழுதியிருந்தார். இதனிடையே த்ரிஷா, குஷ்பு மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். அவர்கள் மூவரும் தலா ரூ.1 கோடி தர உத்தரவிடக்கோரி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சதிஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க ஆணை பிறப்பித்து ஒத்தி வைத்தார். அடுத்த விசாரணையின் போது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கில் மனு தொடரப்பட்டுள்ளதாக கூறி மன்சூர் அலிகானுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் அபராதத் தொகையை 2 வாரங்களில் சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனைக்கு செலுத்த உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 10ஆம் தேதி நடந்த விசாரணையில் மன்சூர் அலி கான் தரப்பில், அபராதத் தொகையை செலுத்த பத்து நாட்கள் அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தது. அவரது கோரிக்கை ஏற்று 10 நாட்கள் அவகாசம் வழங்கி விசாரணை ஒத்திவைக்கபட்டது. 

இந்த நிலையில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார் மன்சூர் அலி கான். இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அபராதத் தொகையை செலுத்துவதாக தனி நீதிபதியின் உத்தரவை ஏற்றுக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுக் கொண்டு இப்போது எப்படி மேல்முறையீடு செய்ய முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும் தனி நீதிபதியின் தனி உத்தரவிற்கும் தடை விதிக்க மறுத்துவிட்டார்கள். இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி தனி நீதிபதி முன் நீங்கள் வலியுறுத்தலாம் எனக் கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.