
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பைசன்’. பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் உள்ளிட்டோர் நடித்து வந்தனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கும் இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி விறுவிறுப்பாகப் பல கட்டங்களாக நடந்து வந்தது. கடந்த மாதம் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்தது. இது தொடர்பாக துருவ் விக்ரம், இந்த படத்திற்கான படப்பிடிப்பும் தயாரிப்பும் என் வாழ்க்கையை மாற்றியுள்ளது என்றும் என் ஆன்மாவை வலுப்படுத்தி, வாழ்நாள் அனுபவத்தை வழங்கியதற்காக நன்றி மாரி செல்வராஜ் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து நேற்று படக்குழு அப்டேட் வெளியிட்டது. அதாவது நாளை(07.03.2025) ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் எனத் தெரிவித்தது. இந்த நிலையில் நாளை எப்போது வெளியாகும் என்ற அப்டேட்டை தற்போது மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார். நாளை மாலை 5 மணிக்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என தனது சமூக வலைதளப்பக்கங்களில் குறிப்பிட்டுள்ளார்.