Skip to main content

ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி விவகாரம் - மாநகராட்சி நோட்டீஸ்

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

ar rahman concert issue municipality corporation notice

 

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்ற தலைப்பில் கடந்த 10.09.2023 ஆம் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை ஏசிடிசி என்ற நிறுவனம் செய்திருந்தது. நிகழ்ச்சியைக் காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். மேலும் மணிரத்னம், அஜித்தின் மனைவி ஷாலினி, அவரது மகள் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதனால் ஓ.எம்.ஆர் சாலையில் ரசிகர்கள் பெரும் திரளாகக் கூடியிருந்ததால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

மேலும் ஆயிரக்கணக்கில் டிக்கெட்டுகளை வாங்கிய பல ரசிகர்கள் உரிய இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பார்த்ததாகவும், சிலர் இடம் கிடைக்காமல் பார்க்காமலேயே வீடு திரும்பியதாகவும், பார்க்கிங் வசதி சரியாக இல்லாமல் சாலையிலேயே பலர் வாகனங்களை நிறுத்தி வைத்துவிட்டுச் சென்றதாகவும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகளை வைத்தனர். மேலும் இதுபோன்ற ஒரு மோசமான இசை நிகழ்ச்சியைப் பார்த்ததே இல்லை என்றும் சில ரசிகர்கள் அவர்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதோடு கூட்டத்தில் பெண்கள் சிலருக்கு பாலியல் ரீதியான அத்துமீறல்கள் நடந்ததாக அதிர்ச்சியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். 

 

இதுபோன்று ஏகப்பட்ட குளறுபடிகள் நிகழ்ச்சியில் ஏற்பட அது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதையடுத்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனம், மன்னிப்பு கோரியது. இதையடுத்து ஏ.ஆர். ரஹ்மான், டிக்கெட் வாங்கிவிட்டு மைதானத்திற்குள் நுழைய முடியாமல் போனவர்கள் தங்களது டிக்கெட் நகலைப் பகிரவும், குறைகள் குறித்து எங்கள் குழு பதிலளிக்கும் என்றும் எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் குறிப்பிட்டு ஒரு மின்னஞ்சலைப் பகிர்ந்து வேண்டுகோள் விடுத்திருந்தார். பிறகு "நானே பலி ஆடாக மாறுகிறேன்" எனவும் இன்ஸ்டாகிராம் மூலம் வேதனை அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, இது தொடர்பாகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இதனிடையே ஏ.ஆர். ரஹ்மானை சிலர் விமர்சித்து வந்த நிலையில் அதைக் கண்டித்து ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். மேலும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாக, யுவன் ஷங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு, சரத்குமார், தங்கர் பச்சான், சீமான் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டனர். இருப்பினும் ஏ.ஆர். ரஹ்மான் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளானதால் நிகழ்ச்சி ஏற்பாடு செய்த நிறுவனம், "ஏ.ஆர். ரஹ்மானுக்கும் இந்த குளறுபடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடந்த குளறுபடிகளுக்கு நாங்களே பொறுப்பேற்கிறோம். இதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் மன்னிப்பு கேட்கிறோம்" என ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. இதில் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹேமந்த் பேசியிருந்தார்.

 

இதையடுத்து டிக்கெட் இருந்தும் நிகழ்ச்சியைக் காண முடியாத ரசிகர்களுக்கு கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் பணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு காவல்துறைக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வழங்கியுள்ள கடிதம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அதில் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனை செய்துள்ளதாகவும், 400க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் ஈடுபட வேண்டும் எனவும், காவல்துறை இந்த நிகழ்ச்சிக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் தாம்பரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் ஏசிடிசி நிறுவனம் கேளிக்கை வரியை செலுத்தாததால் விளக்கம் கேட்டு சென்னை மாநகராட்சி சார்பில் அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இசை நிகழ்ச்சிக்கான கேளிக்கை வரியை அந்நிறுவனம் குறிப்பிட்ட நாட்களுக்குள் செலுத்தத் தவறினால் விதிகளின்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

Next Story

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் படம் - இணையும் இரண்டு ஆஸ்கர் இசையமைப்பாளர்கள்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல ஹீரோயினாக வலம் வரும் சாய் பல்லவி, இப்போது தமிழில் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் கதாநாயகியாகவும், நாக சைதன்யாவின் 23-வது படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். இதையடுத்து பாலிவுட்டில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் புகழ் யஷ்ஷும், சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. இதனிடையே சீதை கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடிப்பதாகக் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது. 

அனுமான் கதாபாத்திரத்தில் சன்னி தியோல் கமிட்டாகியுள்ளதாக சொல்லப்படும் சூழலில் மூன்று பாகங்களாக இப்படம் உருவாகுவதாக பேசப்படுகிறது. இத்தகவல் அனைத்தும் உறுதியாகிவிட்டதெனவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில் படத்தின் இசையமைப்பாளர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்கர் வென்ற இரண்டு இசையமைப்பாளர்கள் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

sai pallavi as sita in ramayanam movie Hans Zimmer And AR Rahman to create music

ஹாலிவிட்டில் தி லையன் கிங், தி டார்க் நைட், இன்டெர்ஸ்டெல்லர் உள்ளிட்ட உலகலளவில் கவனம் பெற்ற ஏகப்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஹன்ஸ் ஜிம்மரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றன. மேலும் ஏ.ஆர் ரஹ்மானிடமும் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. ஹன்ஸ் ஜிம்மர், தி லையன் கிங் மற்றும் டியூன் உள்ளிட்ட படங்களுக்காக இரண்டு முறையும் ஏ.ஆர் ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக இரண்டு ஆஸ்கர் விருதுகளை வாங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.