Skip to main content

“இதை எழுதுகையில் நான் கண் கலங்குகிறேன்; ஏனென்றால்...”- தன்னை சீண்டியவருக்கு பதில் சொன்ன அமிதாப்

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
amitab bachan

 

 

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சான் அண்மையில் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று கடந்த வாரம்தான் வீடு திரும்பினார். தான் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்திருந்தார் அமிதாப்.

 

அமிதாப்பின் இந்த பதிவில் கருத்து பதிவிட்டிருந்த பெண் ஒருவர், "உங்களிடம் இருக்கும் கூடுதல் செல்வத்தை நீங்கள் ஏன் தேவைப்படுபவர்களுக்கும், ஏழைகளுக்கும் தானமாக தரக்கூடாது? கண்டிப்பாக உங்கள் பணப்பையில் நிறைய அன்பும், ஆசீர்வாதங்களும் நிறையும் என்று எனக்கு கண்டிப்பாக தெரியும். உதாரணமாக முன் நின்று வழி நடத்துங்கள். அறிவுறுத்தல் நல்லதுதான் ஆனால் உதாரணமாக இருப்பதில் இன்னும் மதிப்புடையது" என்று குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த கேள்விக்கு ரிப்ளை செய்திருந்த அமிதாப், “ஏழைகளுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் மட்டுமல்ல, ஆந்திரா, விதர்பா, பிஹார் மற்றும் உ.பியில் ஆயிரக்கணக்கான விவசாயிகளை நான் எனது நிதி உதவி மூலம் தற்கொலையிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன்.

 

நீங்கள் தவறான தகவல்களுடன் பாதுகாப்பாக இங்கே ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட, ஜம்மு காஷ்மீர் மற்றும் புல்வாமாவில் நம்மைப் பாதுகாக்கும், உயிர்த் தியாகம் செய்திருக்கும் இந்திய ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவியிருக்கிறேன்.

 

எனது துறையில் இருக்கும் பணியாளர்களில் 1 லட்சம் குடும்பங்களுக்கு, 6 மாதங்களுக்கு தேவையான மளிகை மற்றும் உணவுப் பொருட்களைத் தந்திருக்கிறேன். மும்பையில், ஊரடங்கு ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை, தினமும் 5000 பேருக்கு மதிய உணவும், இரவு உணவும் தந்து வருகிறேன்.

 

மும்பையிலிருந்து நடந்தே தங்களது கிராமங்களுக்குச் செல்லும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு 12,000 காலணிகள் தந்திருக்கிறேன். நாஸிக் நெடுஞ்சாலையில் நடந்து கொண்டிருப்பவர்களைப் பிடித்து உணவும், நீரும் அளித்து, பிஹார் மற்றும் உ.பியில் இருக்கும் அவர்கள் வீடுகளுக்கு திரும்ப 10 பேருந்துகளை ஏற்பாடும் செய்திருக்கிறேன்.

 

2009 புலம் பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்ப ஒரு முழு ரயிலை ஏற்பாடு செய்தேன். அரசியலால் அது ரத்தானபோது, அடுத்த ஒரு மணி நேரத்தில், இண்டிகோவில் 6 தனி விமானங்களை ஏற்பாடு செய்தேன். ஒவ்வொரு விமானத்திலும் 180 பயணிகள். 2 வாரணாசிக்கு, 2 கோரக்பூருக்கு, ஒன்று அலகாபாதுக்கு, ஒன்று பாட்னாவுக்கு என சென்றன. அவர்களுக்கு விமானத்தில் உணவு, விமான நிலையத்திலிருந்து அவரவர் கிராமங்களுக்கு செல்ல போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டன. எல்லாம் என் செலவு மட்டுமே.

 

களப் பணியாளர்களுக்காக, மும்பையில் இருக்கும் மருத்துவ மற்றும் காவல்துறை ஊழியர்களுக்காக 15,000 தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 10,000 முகக் கவசங்களை தந்திருக்கிறேன். சிக்கலில் இருக்கும் ஏழைகளுக்கு உணவளித்து உதவும் டெல்லி சீக்கிய சமூகத்துக்கு, கணிசமான நிதியுதவி அளித்திருக்கிறேன். இதை எழுதுகையில் நான் கண் கலங்குகிறேன். ஏனென்றால் நான் செய்யும் உதவிகள் குறித்து நான் பேசக்கூடாது, செய்ய மட்டும் தான் வேண்டும் என்ற எனது நம்பிக்கையை, கொள்கையை இந்த பெண்மணி உடைத்து விட்டார்.

 

சீமா படேல் அவர்களே, ஆம் எனது பணப்பையில் அன்பும், ஆசீர்வாதங்களும் நிறைந்துள்ளன. உதாரணமாக முன் நிற்க வேண்டும் என்ற உங்கள் அறிவுரையை நான் ஏற்கவில்லை. நான் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் தருவேன், ஏனென்றால் நீங்கள் ஒரு மாய உலகில் இருக்கிறீர்கள். நான் என்ன செய்திருக்கிறேன், செய்து கொண்டிருக்கிறேன், செய்யவிருக்கிறேன் என்பது பற்றி உங்களுக்கு எந்த அறிவும், தகவலும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்