Skip to main content

ஆதிபுருஷ் படம் தொடர்பான வழக்கு - நீதிமன்றம் விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

Adipurush film issue Court notice to censor board

 

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

 

3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும் கிண்டலையும் சந்தித்து வந்தது. இது தொடர்பாக மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, அயோத்தி ராமர் கோயிலின் தலைமை குரு சத்யேந்திர தாஸ், உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் பிரஜேஷ் பதக், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி கண்டனம் தெரிவித்திருந்தனர். 

 

‘ஆதிபுருஷ்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தின் (சிபிஎஃப்சி) சான்றிதழைப் பெறாமல் படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தின் டீசரை வெளியிட்டது விதிகளை மீறுவதாக குல்தீப் திவாரி என்பவர் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். மேலும் சீதாதேவியாக நடிகை அணிந்திருந்த உடை மக்கள் நம்பிக்கைக்கு முரணாகவுள்ளது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனுவானது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேஷ் பிண்டல் மற்றும் நீதிபதி பி.ஆர்.சிங் ஆகியோர் தலைமையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து தணிக்கை வாரியம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை அடுத்த மாதம் 21 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்