தமிழில் 'ப்ரண்ட்ஸ்', 'எங்கள் அண்ணா', 'சாது மிரண்டா', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மலையாள இயக்குநர் சித்திக் கடந்த 8ஆம் தேதி காலமானார். நிமோனியா மற்றும் கல்லீரல் பிரச்சனைக் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் திரையுலகத்தை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து சூர்யா, கேரளாவில் கொச்சியில் உள்ள சித்திக்கின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு அங்குள்ள குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். சூர்யாவுடன் இயக்குநர் ராஜசேகரும் இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னதாக, ட்விட்டரில் சித்திக்கின் மறைவுக்கு, "சித்திக் சார் இயல்பாகவே ஒரு ஊக்கமளிக்கும் மனிதர். படப்பிடிப்பின் போது நடிப்பில் சிறிய முன்னேற்றம் செய்தாலும் நடிகர்களைப் பாராட்டுவார். படப்பிடிப்பைத் தாண்டி எடிட் செய்யும் போதும், எனது நடிப்பு குறித்த தனது அபிப்ராயங்களை அன்புடன் தெரிவிப்பார். ப்ரண்ட்ஸ் படம் பண்ணும்போது அவர் புகழ்பெற்ற மூத்த இயக்குநர். ஆனால் அவர் தனது நட்பு அணுகுமுறையால் படப்பிடிப்பின் போது நம் அனைவரையும் சமமாக நடத்துவார்" என நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.