Skip to main content

என் டார்கெட் அவளது விழிகள்! லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #9

Published on 03/09/2020 | Edited on 03/09/2020
beautiful eyes

 

முந்தைய பகுதி:

"இருள் மூடிய அந்த இடத்தில் அவள் வேகமாய் ஓடிக்கொண்டு இருந்தாள்.." - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #8

 

இறுக்கமாய் சாத்தப்பட்ட கதவுகள் திறப்பு குமிழின் மேல் எப்போதோ பிராணன் விட்டுப் போயிருந்த அவளின் சிகப்பு திரவத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட யாரோ ஒருவனின் கைரேகைப் பதிவுகளாய். இரவு ஒரு மணியை நெருங்கிக் கொண்டு இருந்த கடிகாரம் அவனால் மூர்க்கத்தனம் செலுத்தப்பட்ட அவளின் உடலைக் கண்டு ஒரு விநாடி தயங்கி பின் தன் ஓட்டத்தைத் துவங்கியது. டிக் டிக் என்று துல்லியமான சப்தம் நிசப்தக் குறட்டையை விரட்டும் மருந்தாய்.

 

ருத்ரமான கண்களில் ஒரு வித பளபளப்பை உணர்ந்து எச்சரிக்கை தூறலில் அவள் நனைவதற்குள் எதிர்கொண்ட முதல் தாக்குதல் வயிற்றுப்பிரதேசம் முழுவதும் நான்கு அங்குல வெண்கல வஸ்துவை பவ்யமாய் தாங்கிக் கிழிந்த திசைகளில் சூடாய் வழிந்த திரவத்தை வெகு ஆர்வமாய் நீல நிற பாட்டில்களில் நிரப்பிக்கொண்டேன் நான்.

 

தடால் என்ற உடலதிர்வில் மீதம் புள்ளிகளாய் மொசைக் தரையில் பீய்ச்சியடித்து, சிதறிய ரத்தக் குழம்புகளை விரற்கரண்டியில் வழிக்க ஆறு மாத பெண்ணின் கர்ப்பத்தைப் போல முழுமையடையாமல் முக்காவாசியில் நிறைந்திருந்ததில் என் நீண்ட கரங்களை வைத்து முதுகைத் தட்டிக்கொண்டே வெல்டன் டார்கெட் அட்சீவ் பண்ணிட்டே என்றேன் நான்.

 

டார்கெட் இந்த ஒரு வார்த்தைதான் வருடம் முழுமைக்கும் என்னைத் துரத்திக் கொண்டு இருக்கிறது. பந்தயக் குதிரையின் மேல் ஓட்டப்படும் ஸ்டிக்கரைப் போல, டார்கெட் ஒட்டப்பட்ட பயணக்குதிரையாய் ஓடி ஓடி எது இலக்கு எது எல்லை என்றே அறியமுடியாமல்....?! வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த என் குதிரையின் லகானை பிடித்தது ஷீலாவின் அந்த கண்கள்தானே!

 

man with knife

 

ஹால் முழுவதும் வண்ண விளக்குகளில் கைகளில் பளபளக்கும் ஷீல்ட்டை ஸ்பரிசித்து கொண்டே எப்படி டியர் உங்களால் மட்டும் ஒவ்வொரு வருடமும் டார்கெட் கம்ப்ளீட் பண்ண முடியுது என்ற அந்த ரோஜா நிற லிப்ஸிட்டிக் பெண்ணின் வார்த்தைகளையும், இவனுக்கு எங்கேயோ மச்சம்டா என்ற சக ஊழியர்களின் பொறாமைப் பார்வைகளையும் வாங்கிக்கொண்ட சுகானுபவம். 26 வருட எக்ஸ்பீரியன்ஸ். ஆனால் கடந்த இரண்டு வருடமாக பூஜ்ஜியமாகிப் போனேன்.

 

ச்சே....என்று தலையில் அடித்தபடியே என் இந்த புரோஜெக்ட்டில் யாரும் என்னை ஓவர்டேக் பண்ண முடியாது முக்கியமாய் அந்த ஷீலா.... ஆணிவேராய் இருந்த என்னை அலங்காரப்பொருளைப் போல அழகாய் ஒதுக்கியவள். உங்களுக்குத் தெரியுமா ஏமாற்றங்கள் அழியச் சொல்லும் வெகு அபூர்வமாய் அழிக்கவும் சொல்லும் எனக்கு அழிக்கச் சொல்லியது.

 

இன் பண்ண சட்டும் மடிப்பு கலையாத பேண்ட்டும் நுனிநாக்கு ஆங்கிலமும் கலந்த என்னை இறைச்சி வெட்டும் சாத்தானைப் போல மாற்றியது அந்த ஏமாற்றங்கள்தான். அது தந்த ஆக்ரோஷமான கீறல்கள்தான். விவாகரத்து செய்யப்பட்ட இருளை மறுநாளைக்கான ஜீவனாம்சத்துடன் ஒதுக்கி, வெளிச்சத்தைக் காமத்துடன் போர்த்திக் கொண்டான் வானமனிதன்.

 

ஷீலாவின் பிளந்திருந்த கருவிழிகளின் மேல் கட்டெறும்பு ஒன்று ஓடி விழித்திரையை கிழிக்கத் தொடங்கியது என்னைப் போலவே நின்று நிதானமாக விளையாடி ரசித்து சுவைக்கிறது அந்த கட்டெறும்பு. ஏய் அவள் உன்னை என்ன செய்தாள் ? என்ற என் கேள்வியை மதிக்காமல் கருமமே கண்ணாய் இருந்தது கட்டெறும்பு.

 

இந்த வீட்டிற்குள் நுழையும் வரையில் இவள் யாரென்று தெரியாது, அழுந்த துடைத்த வியர்வை ஏற்படுத்திய கசகசப்பு போக சட்டை பட்டன்களை நீக்கிவிட்டு காற்றுக்காய் நிமிர்ந்த போது அவள் பால்கனியின் விளிம்புகளில் என்னை நேருக்கு நேர் பார்த்தபடி, ச்சீ என்ற வெறுப்பினை உமிழ்ந்த அந்த கண்கள் தெருவிளக்கின் நியான் ஒளியில் ஷீலாவின் கண்களை ஒத்திருந்தது தான் இவளின் குற்றம் என் டார்கெட் இவள்தான் என்று நான் முடிவு செய்த அத்தருணம்.

 

மூளையின் அரைக்கோளங்களின் குழியான வென்ட்ரிக்களில் 550மில்லிலிட்டர் நிரம்பியிருக்கும் நிறமற்ற திரவம் மூளையின் ஒட்டுமொத்த எடையும் அடிப்பாகத்தில் படர்ந்திருக்கும் நரம்புகளை நசுக்கப்படாமல் காத்திருக்கும் அதன் அடர்த்தி என் வரையில் சரியாக சுரக்காமல் நாவறண்டு போயிருக்க வேண்டும்.

 

சென்ற வாரமும் இப்படித்தான் பால்பண்ணையின் வாசலில் வயிற்றை நிரப்பிக்கொள்ள காத்திருக்கும் கேன்களில் பத்து கேன்களில் இளஞ்சூடான செந்நீரைக் கலந்தேன். அது மனித ரத்தம் அல்ல என்று பின்னாளில் ஏதோவொரு பாரன்சிக்கின் அமில உபயத்தில் அறிந்து கொண்டீர்களே நீங்கள் கூட ஆம் அது மார்கழி அதிகாலை மகிழ்வில் இணைந்த ஒரு நாயின் ரத்தம்.

 

ஏழு நாளைய சில மணி நேரங்களுக்கு முன்னர் பால்பண்ணையின் வாசலில் வயிற்றை நிரப்பிக்கொள்ள காத்திருக்கும் கேன்களில் பத்து கேன்களில் இளஞ்சூடான செந்நீரைக் கலந்தேன். அது மனித ரத்தம் அல்ல என்று பின்னாளில் ஏதோவொரு பாரன்சிக்கின் அமில உபயத்தில் அறிந்து கொண்டீர்களே நீங்கள் கூட ஆம் அது மார்கழி அதிகாலை மகிழ்வில் இணைந்த ஒரு நாலு கால் ஜீவனின் ரத்தம். அதைப்போலவே ஒரு நாள் ஷீலாவின் விழிகளுக்குள்ளும் ஆணவமகற்றப்பட்ட ஒரு வெறுமைத்தனத்தைக் காண்பதே என் வாழ்நாள் டார்கெட். என்ன நான் சொல்றது சரிதானே? ஒரு ஆல் தி பெஸ்ட் சொல்லலாமே? என் டார்கெட்டை அடைய...

 

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Next Story

இருவரின் பகை; நடுங்க வைத்த 17 கொலைகள்! 

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

madurai rowdyism in 20 years

 

செப்டம்பர் மாதம் 19-ஆம் தேதி வெள்ளைக்காளி தாயார் ஜெயக்கொடி, மனைவி திவ்யா ஆகிய இருவரும் திருச்சி பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஜெயக்கொடியும், திவ்யாவும், காவல் துறையினர் வெள்ளைக்காளியை பொய்ப் புகார் கூறி என்கவுண்டர் செய்யத் திட்டமிடுகிறார்கள். மருத்துவமனை, நீதிமன்றம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அப்படி அழைத்துச்செல்லும்போது தப்ப முயன்றதாகக் கூறி போலீசார் என்கவுண்டர் செய்யவிருப்பதாகக் கூறினார்கள். அத்தோடு அவரைக் காப்பாற்ற வேண்டுமென நீதிமன்றத்திற்கும் கோரிக்கை வைத்தனர்.

 

இவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு 15 நாட்களுக்குப் முன் (செப்.4) பெங்களுரிலுள்ள கம்மனஹள்ளி சுக்சாகர் ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த மதுரையைச் சேர்ந்த வி.கே.குருசாமி என்பவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த வி.கே. குருசாமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெள்ளைக்காளியின் குடும்பத்தினர் திருச்சியில் பேட்டி கொடுக்கும்வரை தீவிர சிகிச்சையில்தான் இருந்தார் குருசாமி.

 

யார் இந்த வெள்ளைக்காளி, வி.கே. குருசாமி? இவர்களுக்குள் என்ன பகை?


காவல்துறை வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது கிடைத்த தகவல், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியைச் சேர்ந்தவர்கள் வி.கே குருசாமியும், ராஜபாண்டியும். பிழைப்புக்காக மதுரை வந்தவர்கள். மதுரையிலேயே செட்டிலாகி விட்டார்கள். வி.கே.குருசாமி தி.மு.க.வில் சேர்ந்து மதுரை மாநகராட்சி மண்டல தலைவராகவும், ராஜபாண்டி அ.தி.மு.க.வில் சேர்ந்து மாநகராட்சி மண்டல தலைவராகவும் உயர்ந்தார்.

 

madurai rowdyism in 20 years
வி.கே. குருசாமி

 

கடந்த 2003-ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ராஜபாண்டி ஆதரவாளரான சின்னமுனுசாமி என்பவர் வி.கே.குருசாமிக்கு பெரும் குடைச்சலாக இருந்துள்ளார். எனவே கீரைத்துறையில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரச்சனை பண்ணி, அதைப் பெரிதாக்கி சின்னமுனுசாமியை அக்டோபர் 30-ஆம் தேதி வி.கே,குருசாமியும் அவருடைய ஆட்களான பாம்பு பாண்டி, மாரிமுத்து, ராமமுர்த்தி, வழுக்கை முனுசு, கணுக்கண் முனியசாமி ஆகியோர் சேர்ந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், சின்ன முனுசாமியின் தம்பி காளீஸ்வரன் என்ற வெள்ளைக்காளி, தன் அண்ணனைக் கொன்ற வி.கே.குருசாமியின் குடும்பத்தையே கொலை செய்ய திட்டம் போட்டுள்ளார். இதற்கிடையில் வி.கே.குருசாமி ஆதரவாளரான வழுக்கை முனுசை, ராஜபாண்டி ஆதரவாளரான சப்பாணி முருகன் கொலை செய்கிறார்.

 

madurai rowdyism in 20 years
ராஜபாண்டி

 

இதற்கடுத்து இருதரப்பிலும் மாறி மாறி கொலைகள் நடந்தன. 2008-ஆம் ஆண்டு, வி.கே குருசாமி தரப்பில் மாரிமுத்து, ராமமூர்த்தி, 2013-ல் குருசாமியின் தங்கை கணவர் பாம்பு பாண்டியைக் கொன்றனர்.

 

2015-ஆம் ஆண்டு ராஜபாண்டி ஆதரவாளரான மொட்டை மாரியை குருசாமி தரப்பினர் போட்டுத்தள்ளினார்கள். 2016-ல் வி.கே.குருசாமியின் மருமகன் காட்டுராஜாவை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் வெட்டிக் கொலைசெய்தனர்.

 

2017-ல் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ராஜபாண்டியின் மகன் தொப்பி என்ற முனியசாமியை சாம்பலே கிடைக்காதவாறு எரித்துக்கொன்றனர். அதைத் தொடர்ந்து வி.கே.குருசாமி ஆதரவாளரான சடையாண்டியை, முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக், வெள்ளைக்காளி ஆகியோர் கொலைசெய்தனர். இந்த வழக்கில் 2018-ஆம் ஆண்டு மதுரை சிக்கந்தர்சாவடியில் முத்து இருளாண்டி, சகுனி கார்த்திக் ஆகியோரை போலீசார் சுட்டுக் கொலைசெய்தனர். இதில் வெள்ளைக்காளி தப்பிவிட்டார். வெள்ளைக்காளி ஆதரவாளர்கள் வி.கே.குருசாமி வீட்டிற்குள் புகுந்து குடும்பத்தையே கொலை செய்ய முயல, வீட்டைப் பூட்டி போலீசாருக்கு தகவல் சொல்ல, போலீசார் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி ரவுடிகளை வெளியேற்றி சிலரை கைதும் செய்தனர்.

 

madurai rowdyism in 20 years
வெள்ளைக்காளி

 

குருசாமி மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பின்னர் வெளியேவந்த குருசாமியும் மகன் மணிகண்டனும் ராஜபாண்டி தரப்பை எதிர்க்க ஆளில்லாததால் சென்னை, பெங்களூரு என்று தலைமறைவாக வாழத்தொடங்கினார்கள்.

 

பல்வேறு வழக்குகள் இருப்பதால் அதில் ஆஜராவதற்கு அடிக்கடி மதுரை வரும் குருசாமி, வழக்கம்போல் கடந்த செப்.2-ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகி, 3-ஆம் தேதி மதுரையிலிருந்து விமானம் மூலமாக பெங்களூரு சென்றுள்ளார். அதற்கு அடுத்த நாள்தான் அவரை இரண்டு காரில் பின்தொடர்ந்த ராஜபாண்டி தரப்பினர் பெங்களுரில் வைத்து கொலைமுயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு காரணம் வெள்ளைக்காளியும் அவருடைய கூட்டாளிகளும்தான் என்று சொல்லப்படுகிறது.

 

கடந்த 20 ஆண்டுகளில் குருசாமி தரப்பில் 10 பேரும், ராஜபாண்டி தரப்பில் 7 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக ராஜ பாண்டி இறந்துவிட்டார். இதனால், குருசாமியை பழி வாங்கும் பணியை தற்போது புழல் சிறையிலுள்ள வெள்ளைக்காளி முன்னெடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் வெள்ளைக்காளியை என்கவுன்ட்டரில் போட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் அவரது தாயும் மனைவியும் அவரைக் காப்பாற்ற முயற்சி செய்துவருகின்றனர். அதன் ஒரு அம்சமாகத்தான் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் ஆகியவை நடந்தன.

 

"வருடக்கணக்கில் தொடரும் பழிக்குப் பழி தொடர் கொலைகளின் பின்னணியில் யார் இருப்பது என்று பார்த்து, அந்தக் கும்பலை சிறையில் தள்ள வேண்டும், அமைதி திரும்ப வேண்டும்' என்கிறார்கள் மதுரைவாசிகள்.