Skip to main content

ரெஜிஸ்டர் ஆபீசில் நடந்த தில்லு முல்லு திருமணம் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண் : 16

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

  Advocate Santhakumari's Valakku En - 16

 

இரு மனம் இணையும் நிகழ்வையே திருமணம் என்கிறோம். ஆனால் ஆணுக்கோ பெண்ணுக்கோ தெரியாமல் நடத்தப்படும் போலித் திருமணங்கள் ஏராளம். அப்படிப்பட்ட ஒரு வழக்கு குறித்து நம்மிடம் குடும்ப நல வழக்கறிஞர் சாந்தகுமாரி விவரிக்கிறார்.

 

ரேகா என்கிற பெண் சம்பந்தப்பட்ட வழக்கு இது. ஒருநாள் அவர்களுடைய வீட்டுக்குள் திடீரென்று சிலர் நுழைந்தனர். அவர்கள் தட்டில் பழம், வெற்றிலை பாக்கு ஆகியவற்றை வைத்து எடுத்து வந்திருந்தனர். தங்களுடைய பையன் தினேஷுக்கு ரேகாவைப் பெண் கேட்டு வந்திருப்பதாக அவனுடைய பெற்றோர் ரேகாவின் தந்தையிடம் கூறினர். அவர் கோபப்பட்டார். அவர்கள் சட்டப்படி ஏற்கனவே தம்பதியாகிவிட்டனர் என்று தினேஷின் தந்தை கூறினார். ரேகாவின் தந்தைக்கு அதிர்ச்சி. ரேகாவுக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. முன்பு வீட்டிலிருந்தபடியே ரேகா படித்துக் கொண்டிருந்தாள். ஸ்பென்சர் பிளாசாவில் ஒரு கடையில் வேலையும் செய்துகொண்டிருந்தாள். அதற்கு அருகில் உள்ள ஒரு கடையில் தினேஷ் வேலை செய்துகொண்டிருந்தான். ரேகா மீது அவனுக்கு விருப்பம் ஏற்பட்டது.

 

தன்னுடைய பொக்கே கடையிலிருந்து தினமும் அவளுக்கு ஒரு ரோஸ் கொண்டு வந்து கொடுத்தான். இருவரும் நண்பர்களானார்கள். ஒருநாள் தன்னுடைய நண்பருக்குத் திருமணம் என்று கூறி அவளை ரெஜிஸ்டர் ஆபீசுக்கு அழைத்துச் சென்றான். அனைவரும் சேர்ந்து ஜூஸ் அருந்தினர். அப்போது அவளுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அரை மயக்கத்தில் அவளை ரெஜிஸ்டர் அலுவலகத்தில் அமர வைத்தனர். அவள் சுய நினைவு இல்லாமல் இருந்தபோது அவளுக்கு மாலை அணிவித்தனர். அவளுக்கே தெரியாமல் திருமணம் நடைபெற்றது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவள், தாலியைக் கழற்றி வீசிவிட்டுச் சென்றாள். அதன் பிறகு அவனோடு பேசுவதையே அவள் நிறுத்தினாள். ஆறு மாதங்கள் கடந்தது. அதன்பிறகு தான் அவன் அவனுடைய பெற்றோரோடு ரேகாவின் வீட்டுக்கு வந்து பெண் கேட்டான்.

 

ஏற்கனவே திருமணம் நடந்ததற்கான சட்டப்பூர்வ ஆதாரத்தை அவன் காட்டினான். அவள் விரும்பினால் அவனோடு சேர்ந்து வாழலாம் என்று அவளுடைய தந்தை கூறினார். ஆனால் அதற்கு அவள் சம்மதிக்கவில்லை. அவளுடைய தந்தை இந்த விஷயத்தை என்னிடம் எடுத்து வந்தார். அந்தப் பெண்ணிடம் அனைத்தையும் விசாரித்தேன். அனைத்தையும் தான் சுய நினைவின்றியே செய்ததாக அவள் கூறினாள். எனவே அந்தத் திருமணம் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தோம். நோட்டீஸ் அனுப்பினாலும் தினேஷ் வரவில்லை. திருமணம் செல்லாது என்கிற தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. திருமணப் பதிவாளரிடம் பேசி இந்தத் திருமணத்தை ரத்து செய்ய வைத்தோம். தற்போது இதுபோன்று பல்வேறு போலித் திருமணங்கள் நடைபெறுகின்றன.அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.