Skip to main content

சேட்ட பய சார் இந்த சேவாக்... கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #2

Published on 04/11/2020 | Edited on 04/11/2020

 

sehwag

 

"சச்சினும் நீங்களும் ஒப்பனர்களாக விளையாடி வருகிறீர்கள். இப்போது நான் ஏன் ஒப்பனராக வேண்டும்? நான் மிடில் ஆர்டரிலேயே ஆடுகிறேன்'' என்றவரை, இல்லை நீ ஒப்பனராக ஆடித்தான் ஆகவேண்டும். இல்லையென்றால் வெளியில் உட்கார் என கங்குலி மிரட்டி ஒப்பனராக இறக்கிவிட்டவர்தான் வீரேந்திர சேவாக்.

 

என்ன நினைத்து கங்குலி அவரை ஓப்பனராக அனுப்பினார் என்பது தெரியாது. அவரும் ஓப்பனரானதை விரும்பவில்லை .ஆனால், இப்போது அனைவருக்கும் பிடித்தமான ஒப்பனராகிவிட்டார். ஒப்பனர் என்றால் பந்தை விட்டு விட்டு ஆடவேண்டும், விக்கெட்டை தற்காத்துக் கொள்ளவே முயலவேண்டும் என்ற இலக்கணத்தையெல்லாம் கிரிக்கெட் பந்துகளை எப்படி அடித்து நொறுக்குவாரோ அதேபோல் அடித்து நொறுக்கியவர் சேவாக்.

 

எவ்வளவு பெரிய ஒப்பனராக இருந்தாலும் மைதானத்தின் தன்மை, பந்து ஸ்விங் ஆகிறதா இல்லையா என்பவைகளைப் பார்க்க ஒன்று இரண்டு பந்துகளை அடிக்காமல் விடுவார்கள், இல்லையெனில் டிஃபன்ஸ் ஆடுவார்கள். ஆனால் சேவாக்கை பொறுத்தவரை பௌலர்கள் தான் டிஃபன்ஸ் மோடிற்குச் செல்லவேண்டும். முதல் பந்திலிருந்தே பௌலர்களை நொறுக்க வேண்டும் என ஆடவருபவர் சேவாக். "டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த ஓப்பனரான கவாஸ்கர் டிஃபன்ஸ் விளையாடி பந்தை பழையதாக மாற்றுவதில் நம்பிக்கை உடையவர். சேவாக் பந்துகளை அடித்து பழையதாக மாற்றுவதில் நம்பிக்கை உடையவர். இருவர் ஏற்படுத்திய தாக்கமும் மிகப்பெரியது'' என்று சேவாக்கின் பேட்டிங்கை புகழ்ந்தார் கங்குலி.

 

கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படும் வார்த்தை புட்வொர்க். வேகப்பந்து வீச்சை பொதுவாகக் கண்ணுக்குக் கீழே ஆட வேண்டும் என்பார்கள் பயிற்சியாளர்கள். பந்தின் லைனை கவர் செய்து ஆடவும் டிஃபன்ஸ் ஆடவும் புட்வொர்க் முக்கியம். ஆனால் சேவாக்கிடம் புட்வொர்க் என்றால் ''அட அதெல்லாம் எதுக்குப்பா நமக்கு" என்பார். சுழற்பந்து வீச்சாளர்களை இறங்கி அடிக்கும் சேவாக் வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் கால்களை நகர்த்தாமல் அசால்ட்டாக டீல் செய்வார்.

 

கண்களுக்கும் கைகளுக்கும் உள்ள ஒருங்கிணைப்பு என்பதே சேவாக்கின் டெக்னிக். அதுவே அவரது பலம். ''பந்தை பார்த்து அடி" என்பதே சேவாக்கின் ஒரே ஃபார்முலா. ஆனால் இந்த ஃபார்முலாவை வைத்துக்கொண்டு ஓப்பனிங் ஆடுவது என்பது கடினம். பந்துகள் அதிகம் ஸ்விங் ஆகும். டெஸ்ட் போட்டிகளில் ஓப்பனிங் என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனாலும், கிட்டத்தட்ட பத்து வருடங்களாக ஒப்பனராக இருந்தார் என்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது.

 

cnc

 

வீரேந்திர "தக் லைஃப்" சேவாக் என நாம் அவரை கூப்பிடலாம். அந்த அளவிற்கு நக்கல் பிடித்தவர். விசில் அடித்துக்கொன்டே பேட்டிங் ஆடுவது. பந்து வீச்சாளர்களை நக்கல் அடிப்பது என அவரின் சேட்டைகள் ஏராளம். ஒரு முறை பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் சேவாக் பேட்டிங் செய்யும்போது எல்லைக்கோட்டின் அருகே ஃபீல்டர்களை நிறுத்தி, தினேஷ் கனேரியா நெகடிவ் லைனில் (கால்கள் பக்கத்தில்) பந்து வீச பாகிஸ்தான் கேப்டன் இன்சமாமிடம் பீல்டரை உள்ளே அழையுங்கள் எனக் கூறினார் சேவாக். எதுக்கு என கேட்ட இன்சமாமிடம் நான் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று கூற, அவர் கிண்டல் அடிக்காதே என்றதும், ஒரு பந்துக்கு மட்டும் கூப்பிட்டுப் பாருங்கள் எனக் கூறி இன்சமாமையே பீல்டரை உள்ளே அழைக்க வைத்தார். அடுத்த பந்தில் சொன்னமாதிரியே சிக்ஸர் அடித்தார் சேவாக். இப்போதும் ட்விட்டரிலும் அதே போல் அனைவரையும் நக்கல் அடிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளார். 

 

வீரேந்திர சேவாக் டெஸ்ட் போட்டிகளை சுவாரசியமாக மாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர். பெரிய வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளுவதற்கு முன்புகூட எதைப்பற்றியும் யோசிக்காமல் ஹெட்செட்டில் பாடல் கேட்பவர். சேவாக்கை போல் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஜாலியாக ஆடுவது கடினம். அவரைப்போல் இன்னொரு பேட்ஸ்மேனை காண்பது நடக்காத ஓன்று. அதிரடி என்றாலே நமக்கு இப்போதும், எப்போதும் நினைவில் ஒலிப்பது சேவாக்கின் பெயர்தான்.

 

ஐ.பி.எல் இளம் வீரர்களுக்கானதா..? எண்ணத்தை மாற்றியமைத்த மாஸ்டர் ப்ளாஸ்டர் - கோல்டன் கிரிக்கெட்டர்ஸ் #1

 

 

Next Story

WPL : சாம்பியன் பட்டத்தை வென்ற பெங்களூரு அணி!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
WPL : Bengaluru team won the title

இந்த ஆண்டுக்கான பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி (W.P.L.) கடந்த பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி (23.02.2024) தொடங்கியது. இது பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசன் ஆகும். இதற்கான இறுதிப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (17.03.2024 நடைபெற்றது.

இந்த இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பெங்களுரூ அணி சார்பில் ஷ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்களையும், மொலினஷ் 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தினர்.

அதன் பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி  களமிறங்கியது. இதனையடுத்து சிறப்பாக ஆடிய பெங்களூரு அணி 19.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 2வது சீசனில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வென்றதையடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்ம்ரிதி மந்தனாவுக்கு, கிரிக்கெட் வீரர் விராட் கோலி வீடியோ காலில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதேபோன்று கோப்பை வென்ற பெங்களூரு மகளிர் அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

ஒன்பதாவது வருடமாக தொடரும் சாதனை; கலக்கும் இந்திய அணி!

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Record continues for ninth consecutive year; A mixed Indian team

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.

முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29, ஜோ ரூட் 24 என ஆட்டம் இழந்தனர்.

கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த  ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர்.  ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார். ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் ஆகியோர் அரைசதம் கடந்தனர். படிக்கல் 65 ரன்களிலும், சர்பிராஸ் 56 ரன்களிலும் வெளியேற, அடுத்து வந்த ஜடேஜா மற்றும் ஜுரேல் ஆகியோர் 15 ரன்களில் வெளியேறினர். கடைசியாக குல்தீப் 30, பும்ரா 20 ரன்கள் சிறப்பாக ஆட இந்திய அணி 124.1 ஓவர்களில் 477 ரன்கள் குவித்தது.

259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது.  36 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்தார். ரூட் மட்டும் அரைசதம் கடந்து 84 ரன்கள் எடுத்தார். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.இறுதியில் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் 100ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய 4 ஆவது வீரரானார். முதல் மூன்று இடங்களில் முறையே வார்னே, கும்ப்ளே, முரளிதரன் ஆகியோர் உள்ளனர். மேலும் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இடத்தை (36 முறை) பிடித்துள்ளார். கும்ப்ளே 35 இரண்டாவது இடத்தில் உள்ளார். பும்ரா, குல்தீப் தலா 2  விக்கெட்டுகளை எடுத்தனர். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார்.

இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாகப் பந்து வீசி, பேட்டிங்கிலும் ஜொலித்த குல்தீப் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் தொடர்நாயகனாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி கடந்த 2015 முதல் சொந்த மண்ணில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக சாதனை படைத்து வருகிறது. ஒன்பதாவது வருடமாக டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து கைப்பற்றி அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது.

வெ.அருண்குமார்