Skip to main content

கால்பந்தாட்ட போட்டி;  அண்ணாமலை பல்கலைக்கழகம் நான்காவது முறையாக  சாம்பியன் பட்டம்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

south zone inter university football tournament at annamalai university  

 

தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கால்பந்து போட்டியில் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடைபெற்றது.

 

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வி விளையாட்டுத்துறையில் கடந்த 29ம் தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பெண்கள் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்தது. இதில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 26 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் லீக் போட்டிகளின் அடிப்படையில் அண்ணாமலை பல்கலைக்கழக அணி முதலிடத்திலும், வேல்ஸ் இன்டாஸ் சென்னை பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்திலும், சேலம் பெரியார் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும், கோயம்புத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழக அணி 4-ஆம் இடத்தையும் பெற்றனர்.

 

வெற்றி பெற்ற நான்கு பல்கலைக்கழக அணிகளும் குவாலியரில் நடைபெறும் அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கால்பந்து போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிக்கும் விழா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.  இதில் பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் தலைமை தாங்கினார். துணைவேந்தரின் துணைவியர் சாந்தி கதிரேசன் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கினார்.

 

உடற்கல்வித்துறை தலைவர் செந்தில்வேலன் அனைவரையும் வரவேற்றார். விழாவில் அனைத்து இந்திய பல்கலைக்கழகங்களுக்கான பார்வையாளர் ராம்குமார். கடல்வாழ் உயிரினங்கள் புல முதல்வர் ஆனந்தராமன், பேராசிரியர் மருத்துவர் சண்முகம், உடற்கல்வித்துறை பேராசிரியர்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

 

இதில் அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த சௌமியா, மாளவிகா, சந்தியா ஆகிய மூன்று மாணவிகளும் இந்திய பெண்கள் கால்பந்து அணியில் பங்கேற்று விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  அண்ணாமலை பல்கலைக்கழக கால்பந்து அணி தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் இதுவரை நான்கு முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.

Next Story

‘மீண்டும் கல்லூரிக்குப் போகலாம்’ - குடும்பத்தினருடன் பொன்விழாவைக் கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 1970 முதல் 1974 ஆம் ஆண்டில் வேளாண் கல்லூரியில் 45 மாணவர்கள் பயின்றனர். கல்வி பயின்ற பிறகு அவர்கள் மத்திய - மாநில அரசின் பல்வேறு துறைகளில் வங்கி, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட  பல்வேறு துறைகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து, ‘AU74 அக்ரி பட்டதாரிகள் சங்கம்’ என்ற சங்கத்தை அமைத்து,  அரசுப் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள், பல்வேறு கல்லூரிகளில் பயிலும் வேளாண் மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றனர்.

இவர்கள் கல்வி பயின்று 50 ஆண்டுகள் கடந்த நிலையில், குடும்பத்தினருடன் இணைந்து 50 ஆம் ஆண்டு பொன்விழாவை (1974 - 2024) பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் கொண்டாடினார்கள். இவ்விழாவுக்கு சங்கத்தின் தலைவர் அக்ரி நடராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராகப் பல்கலைக்கழக துணைவேந்தர் இராம. கதிரேசன் கலந்துகொண்டு, முன்னாள் மாணவர்களை பாராட்டி பொன்விழா ஆண்டு மலரை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.

இதில் பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு,  தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ், வேளாண் புல தலைவர் அங்கயற்கண்ணி மற்றும் 1974 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் பேராசிரியர்கள் பாலசுப்ரமணியன், கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு முன்னாள் மாணவர்களைப் பாராட்டி மலரும் நினைவுகளை நினைவுகூர்ந்து வாழ்த்தினார்கள்.

Ex-students who celebrated Golden Jubilee with their families at annamalai university

மேலும், அங்கு பயின்ற முன்னாள் வேளாண் மாணவர்கள் வேளாண் கல்லூரிக்கு, சங்கத்தின் சார்பாக ரூ. 3 லட்சம் செலவில் உபகரணங்கள், அறைகள் புதுப்பித்தல் போன்ற உதவிகளைச் செய்வதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் அனைவரும் ஆட்டம் பாட்டத்துடன் மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, ‘50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை குடும்பத்துடன் சந்தித்த நிகழ்வு மறக்க முடியாத ஒன்றாக உள்ளது’ என்று கூறினார்கள்.