Skip to main content

ஸ்மித், வார்னருக்கு ஓராண்டு, பேன்கிராஃப்டுக்கு ஒன்பது மாதங்கள் தடை!

Published on 28/03/2018 | Edited on 28/03/2018

பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஆஸ்திரேலிய வீரர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு விளையாட தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா. 

 

தென் ஆப்பிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகினர். ஸ்மித்துக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 100% மற்றும் பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்ட்டுக்கு 75% அபராதமும் விதித்தது ஐசிசி. மேலும், மீதமிருக்கும் ஒரு போட்டியில் ஸ்மித் விளையாட தடை விதித்து உத்தரவிட்டது ஐசிசி.

warner

இந்தத் தண்டனைகள் ஒருபுறம் இருந்தாலும், ஆஸி. கிரிக்கெட் வாரியத்தின் ஒருங்கிணைப்புத் தலைவர் இயான் ராய் மற்றும் செயல்பாட்டு மேலாளர் பேத் ஹோவர்ட் ஆகியோர் தென் ஆப்பிரிக்கா சென்று, அங்கு ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் பயிற்சியாளர் டேர்ரன் லெஹ்மேன் ஆகியோரிடம் விசாரணை நடத்தவுள்ளளதாக தகவல்கள் வெளியாகின. இந்த விசாரணைக்கு பின்பு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்திய குற்றத்திற்காக ஸ்மித் மற்றும் வார்னருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.

 

இந்நிலையில், ஜோனஸ்பெர்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட், ‘பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னருக்கு ஓராண்டும், பான்கிராஃப்டுக்கு ஒன்பது மாதங்களும் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். இதனால், ஸ்மித் மற்றும் வார்னர் நடக்கவிருக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வாய்ப்பையும் இழந்துள்ளனர். 

 

இதற்கு முன், 2003ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா வீரர் ஷேன் வார்னே, ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக ஓராண்டு விளையாட தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.