Skip to main content

கூண்டோடு அணி மாறும் இந்திய அணி பயிற்சியாளர்கள்?

Published on 07/11/2021 | Edited on 07/11/2021

 

RAVI SHASTRI

 

ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்றுவரும் நிலையில், அடுத்த ஐபிஎல் தொடரிலிருந்து அகமதாபாத், லக்னோ என இரண்டு புதிய அணிகள் கூடுதலாகப் பங்கேற்க உள்ளது. இதில் லக்னோ அணியை ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமமும்,  அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல்சும் ஏலம் எடுத்துள்ளனர். 

 

இந்தநிலையில் சிவிசி கேப்பிடல், அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்குமாறு ரவி சாஸ்திரியை அணுகியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவிக்காக பரத் அருணையும், பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்காக ஸ்ரீதரையும் சிவிசி கேப்பிடல் அணுகியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

அதேபோல் ரவி சாஸ்திரியும் ஐபிஎல் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்க விரும்புவதாகவும், அகமதாபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்பது குறித்து அவர் தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர் முடிவு செய்வார் எனக் கூறப்படுகிறது. 

 

இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பொறுப்பில் இருக்கும் ரவி சாஸ்திரி, ஸ்ரீதர், பரத் அருண் ஆகியோரின் பதவிக்காலம் தற்போது நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பைக்குத் தொடரோடு முடிவுக்கு வரவுள்ளது. இதனையொட்டி ஏற்கனவே ராகுல் டிராவிட், இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

 

Next Story

உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி; வரலாறு காணாத சுவாரசிய ஏற்பாடுகள்

Published on 18/11/2023 | Edited on 18/11/2023

 

World Cup 2023 Finals; Unprecedented interesting arrangements

 

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் நாளை (19-11-23) மோத உள்ளன. 2003 இல் உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்விக்கு பதிலடி தர வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். போதாக்குறைக்கு ஆஸ்திரேலிய வீரர்களும் தாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம், இந்திய அணியை எளிதில் வெல்வோம் என்று பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். இதுவும் ரசிகர்களுக்கு இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும், ஆஸி வீரர்களின் பேச்சுக்கு பதிலடியாக இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் உலக கோப்பை இறுதிப் போட்டியை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாக நடத்த ஐசிசி மற்றும் பிசிசிஐ முடிவு செய்து உள்ளது. அந்த வகையில், இறுதிப் போட்டியில் டாஸ் போட்ட பிறகு 1.30 மணி முதல் 1.50 மணி வரை இந்திய விமானப்படையின் சூரிய கிரண் குழு சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட உள்ளது. சூரிய கிரண் பிரிவில் உள்ள 9 விமானங்கள் மைதானத்தின் வான்வெளியில் சாகசம் புரிய உள்ளது. இது உலகக் கோப்பை வரலாற்றில் முதன்முறையாக  நடத்தப்பட உள்ள விமானப்படை சாகச நிகழ்ச்சி ஆகும்.

 

இதையடுத்து, முதல் அணி பேட்டிங் முடிவடைந்ததும் முன்னாள் சாம்பியன்களை கவுரவிக்கும் நிகழ்ச்சிக்கு பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ளது. இதில் உலகக் கோப்பையை வென்ற அணிகளின் கேப்டன்களுக்கு மரியாதை செய்யப்பட  உள்ளது. இந்த நிகழ்ச்சி சுமார் 15 நிமிடங்கள் நடக்கும். அதன் பிறகு  இசையமைப்பாளர் ப்ரீதம் தலைமையில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 500 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு நடனமாடி ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளனர்.

 

இரண்டாவது இன்னிங்ஸின் போது 2-வது முறையாக வழங்கப்படும் குடிநீர் இடைவேளையின் போது 90 விநாடிகளுக்கு கண்கவரும் வகையில் லேசர் ஷோ நடத்தப்பட உள்ளது. இறுதியாக கடைசி பந்து வீசப்படும் போதும்,வெற்றி கோப்பையை சாம்பியன் அணி கைகளில் ஏந்தும் போது 1,200 டிரோன்கள் கொண்டு வானில் உலகக்கோப்பை டிராபியை வண்ணமயமாக காண்பிக்க உள்ளனர்.

 

மிகச் சிறப்பான முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள இந்த போட்டியைக் காண, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்கள் அகமதாபாத் நகரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். அகமதாபாத் விமான நிலையத்தின் வெளியே சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இசையுடன் கூடிய தாண்டியா நடனம், பொய்க்கால் குதிரை நடனம் உள்ளிட்ட  நிகழ்வுகள்  நடந்து வருகின்றன.  கண்கவர் கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளால் அகமதாபாத் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

வெ. அருண்குமார்  

 

 

Next Story

நரேந்திர மோடி மைதானத்தை தகர்க்கப் போவதாக மிரட்டல்; போலீஸார் தீவிர விசாரணை

Published on 07/10/2023 | Edited on 07/10/2023

 

Threatening to blow up Narendra Modi stadium in ahmedabad

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்.5 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்த ஆண்டு இந்தியா தலைமையேற்று நடத்தி வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. 

 

அந்த வகையில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்துடன் நியூசிலாந்து அணி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடியது. தொடர்ந்து, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள மைதானத்தில் இந்தத் தொடர்கள் நடைபெறவுள்ளன. அதில், முதல் ஆட்டமான இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் விளையாடின. அதேபோல், போட்டிக்கான கடைசி ஆட்டமும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தான் நடைபெற உள்ளது.

 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியையும், நரேந்திர மோடி மைதானத்தையும் வெடி வைத்து தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் மூலம் மும்பை காவல்துறையினருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது நேற்று முன்தினம் (05-10-23) இரவு மும்பை காவல்துறையினருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு கடிதம் வந்துள்ளது.

 

அந்தக் கடிதத்தில், ‘டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயை விடுக்கவிக்க வேண்டும். அதோடு சேர்த்து ரூ. 500 கோடி பணமும் தர வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தையும், பிரதமர் நரேந்திர மோடியையும் வெடி வைத்து தகர்த்து விடுவோம். இந்த தாக்குதலை நடத்துவதற்காக ஆட்கள் ஏற்கனவே தயார் நிலையில் இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் காவல்துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மின்னஞ்சலின் அனுப்புநர் யார் என்ற கோணத்தில் மின்னஞ்சலின் முகவரியைத் தீவிரமாகக் கண்காணித்தும், விசாரித்தும் வருகின்றனர்.