Skip to main content

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டி; இந்திய அணி தோல்வி...

Published on 06/02/2019 | Edited on 06/02/2019

 

hgjghjhg

 

இந்தியா நியூஸிலாந்து மகளிர் அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று வெல்லிங்டன்னில் நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய நியூஸிலாந்து அணி தொடக்கம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் சோபி டிவைன் அதிகபட்சமாக 62 ரன்கள் அடித்தார். இறுதியில் நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து. இதனை தொடர்ந்து 160 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாட தொடங்கியது. தொடக்க வீரரான ஸ்மிரிதி மந்தானா அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் அரை சதம் கடந்து இந்திய அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் கடந்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். ஆனால் அவரது விக்கெட்டுக்கு பிறகு மளமளவென இந்திய வீராங்கனைகள் ஆட்டமிழக்க இந்திய அணி 20 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்து. இதனை தொடர்ந்து நியூஸிலாந்து அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூஸிலாந்து அணியின் லியா தஹூஹூ உமன் ஆப் தி மேட்ச் விருதினை பெற்றார்.  

 

 

Next Story

WPL; டெல்லி அணியுடன் மோதப்போகும் அணி?

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
 The team that will clash with Delhi at WPL match

ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பீரிமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. அதே போல், பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடர் கடந்த 2023ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் போது நடைபெற்ற பெண்கள் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.

அந்த வகையில், 2வது பெண்கள் பிரீமியர் லீக் (WPL) கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி முதல் டெல்லியில் நடைபெற்று வருகிறது. டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், உ.பி வாரியர்ஸ் ஆகிய ஐந்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே - ஆப் சுற்றுக்குள் நுழையும். அதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த தொடர், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

லீக் பிரிவின் கடைசி போட்டி நேற்று (14-03-24) டெல்லியில் நடைபெற்றது. இதில், குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதிய இந்த போட்டியில், டாஸ் வென்று குஜராத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை எடுத்தது. அதில் அதிகபட்சமாக பாரதி புல்மாலி 42 ரன்களை எடுத்திருந்தார். குஜராத் அணிக்கு எதிராக வீசப்பட்ட பந்து வீச்சில், மரிசன்னே கப், ஷிகா பாண்டே, மின்னு மணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து, 127 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடியது. அதில் டெல்லி அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை அடைந்து அபாரமாக வெற்றி பெற்றது. இதில், டெல்லி அணியின் தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா 37 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் அடித்து 71 ரன்களை எடுத்திருந்தார். 

லீக் போட்டிகளின் முடிவில் டெல்லி அணி, 8 போட்டிகளில் 6 போட்டிகள் வெற்றி பெற்று 12 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளன. முதல் மூன்று இடங்களில் உள்ள அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற்ற டெல்லி அணி நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று (15-03-24) மாலை 7:30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெற்று பெறும் அணி, மார்ச் 17ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் டெல்லி அணியுடன் மோதவிருக்கிறது. 

Next Story

விராட்டின் சாதனைப் பட்டியலில் இணைந்த கில்; மூன்றாவது டி20யில் இந்தியா வெற்றி

Published on 01/02/2023 | Edited on 01/02/2023

 

Gill joins Virat's record list; India win third T20I vs newzealand

 

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறது. டி20 போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

ஒருநாள் தொடரில் நியூசி-யை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி தொடரை வென்றது. தொடர்ந்து ஐசிசி பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து மோதும் டி20 தொடருக்கான முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.

 

இந்நிலையில், இன்று அஹமதாபாத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இஷான் கிஷன் 1 ரன்னில் வெளியேற ராகுல் திரிப்பாதியுடன் சுப்மன் கில் இணைந்தார். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் நியூசிலாந்து பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். மறுபுறத்தில் திரிப்பாதியும் அடித்து ஆட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

 

திரிப்பாதி 44 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா முறையே 24 மற்றும் 30 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய கில் அசத்தலாக சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கில் 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்தார்.

 

235 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற மிட்செல் மட்டும் பொறுமையாக ஆடி 35 ரன்களை எடுத்தார். பின் வரிசையில் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக மிகக் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்தது. 

 

சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையை படைத்தது. இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு டப்லினில் நடந்த ஆட்டத்தில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சாதனையாக இருந்தது.

 

எதிரணியின் மொத்த ரன்களை விட தனிநபர் அதிக ரன்களை அடித்ததில் விராட்டின் சாதனைப் பட்டியலில் கில்லும் இணைந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு துபாயில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி 111 ரன்களுக்கு சுருட்டியது. அதில் விராட் மட்டும் 122 ரன்களை எடுத்திருந்தார். அதே போல் இன்றைய போட்டியில் நியூசிலாந்து 66 க்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் கில் 126 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். 

 

இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக சதம் அடித்த சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். தொடர்நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.